‘சுயமரியாதை இயக்கம்’ என்பதாக ஒரு இயக்கம் தோன்றி சுமார் 5,6 வருஷகாலமாகியிருந்தாலும், பொது மகாநாடு என்பதாக இந்த இரண்டு மூன்று வருஷங்களாகப் பெரிய பெரிய மகாநாடுகளும் அதற்கு முன்பிருந்தும் ஜில்லா, தாலூகா மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகளும் தமிழ் நாட்டில் கூட்டப்பட்டுவருவது யாவருமறிந்ததேயாகும்.
மற்றும் அது சம்பந்தமான பிரச்சாரங்களும் தமிழ் நாட்டில் ஆங்காங்கு தினந்தோறும் நடைபெற்று வருவதும் யாவருமறிந்ததாகும்.
இவற்றின் பயனாய் இந்துக்களென்று சொல்லிக் கொள்ளப்படும் பெரும்பான்மை மக்களுக்குள் ஒரு தலைகீழான பெரியமனமாறுதலும் மற்றும் மத சம்பந்தமான, சமுக சம்பந்தமான காரியங்களில் செய்கையிலேயுங் கூட ஒரு பெரிய மாறுதலும் ஏற்பட்டு வந்திருக்கின்ற விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும்.
இந்த இயக்கமும் இதற்கு ஏற்பட்டுள்ள பல அதிதீவிரக் கொள்கைகளும் மதவுணர்ச்சிக்கும் பழக்க வழக்கத்திற்கும் நேர் மாறுதலானதாயிருந்தும் இவ்வளவு சொற்ப நாளில் இவ்வளவு தூரம் பரவிய தற்குக் காரணம் என்னவென்றால் இவ்வியக்கம் கண்டும் இவ்வியக்கத்திற்கு சேவை புரிந்தும் வரும் மக்கள் யாவரும் ஏறக்குறைய எல்லோரும் வெகுகாலமாகவே பொது வாழ்வில் அதாவது, “தேசிய’’த் துறை என்பதிலும் ‘சமுக’த்துறை என்பதிலும் ‘சமய’த்துறை என்பதிலும் ஈடுபட்டு மனப்பூர்த்தியாய் உழைத்து வந்து சிறிதும் பயன்பெறாமல் ஏமாற்றமடைந்தவர்களானதால் இந்தப் புதிய முயற்சியால் அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையும், அனுபவமும், மன உறுதியும் தீவிரப்பிரசாரத்திற்குத் தூண்டுகோலாகி பொது மக்களின் பகுத்தறிவைப் பிடித்து ஆட்டி அசைத்துப் பலரை சொன்னபடி கேட்கவேண்டியதாய் செய்துவந்ததுடன் ஒவ்வொருவரையும் இணங்கி இதில் இறங்கி வேலைசெய்யும்படியும் செய்து விட்டது.
இதன் பயனேதான் ஆங்காங்கு தனக்குத்தானே பிரசாரங்கள் நடக்கவும், மகாநாடுகள் கூடவும், அதிதீவிர தீர்மானங்கள் செய்யவும் ஏற்பட்டு வருகின்றது என்பது மிகையாகாது.
இந்த முறையிலேயே இம்மாதம் 8, 9 தேதிகளில் விருதுநகரில் மாகாண மூன்றாவது சுயமரியாதை மகாநாடு என்பதாக ஒரு பெரியமகாநாடு கூடி ஏராளமான தமிழ் நாட்டு வாலிபமக்களை அழைத்து வைத்து பல தீர்மானங்களைச் செய்திருக்கின்றது. அதனுடன் கூடவே சுயமரியாதைப் பெண்கள் இரண்டாவது மகாநாடும், சுயமரியாதை வாலிபர்கள் 3ஆவது மகாநாடும் நடத்தப்பட்டு பல தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இம்மகா நாடுகளில் வரவேற்புக் கமிட்டித் தலைவர்கள், , தலைவர்கள் ஆகியவர்களின் சொற்பொழிவுகளும் தீர்மானங்களும் பெரிதும் இரண்டு முக்கிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டிருப்பது கவனித்தவர்களுக்கு விளங்கியிருக்கும்.
அதாவது ஒன்று மதம் சம்பந்தமாகவும், கடவுள் சம்பந்தமாகவும், சமுக சம்பந்தமாகவும், நமது தேசத்தில் இருந்துவரும்பல பழைய கொள்கைகளையும், பழக்க வழக்கங்களையும், மனவுணர்ச்சிகளையும் அடியோடு அழிக்கவும், சிலவற்றைப் புதுப்பிக்கவும் வேண்டுமென்பது.
இரண்டாவது:- தேசியம், சுயராஜ்ஜியம், சுதந்திரம் என்னும் பேர்களால் மேல்கண்ட அதாவது மதசம்பந்தமாகவும், கடவுள் சம்பந்தமாகவும், பழக்கவழக்க சம்பந்தமாகவும் இருந்து வரும் பழங்கொள்கைகளை நிலைநிறுத்தபாடுபட்டு வரும்படியான ஸ்தாபனங்களையும், முயற்சிகளையும், சூழ்ச்சிகளையும் வெளியாக்கி, எதிர்த்து அவைகளால் நமது முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும்படி செய்வது, என்கிறதான இந்த இரண்டு லட்சியங்களையே பெரிதும் முக்கியமாகக் கொண்டதாக இருப்பதுவிளங்கி இருக்கும்.
ஏனெனில் இந்திய தேசத்து மக்கள் இன்று உலகத்தின் முன் மானத்தோடும், சுதந்திரத்தோடும், அறிவோடும். க்ஷேமத்தோடும் வாழுவதற்கில்லாமல் பெரும்பான்மையானவர்கள் இழிமக்களாய் , மூடர்களாய், தரித்திரர்களாய், அடிமைகளாய் விளங்கு வதற்கு மேல்கண்ட இரண்டு தத்துவங்களுமே காரணமாய் இருந்துவந்திருக்கின்றது – இருந்தும் வருகின்றது என்றகாரணத்தினாலே யாகும்.
இந்தப் பெரியதும் தலைகீழ்புரட்சியானதுமான மேல்கண்ட இரண்டு தத்துவ பரிகாரங்களுக்கும் எதிர்ப்புகள் பலமானதும் தொல்லைகளை விளைவிக்கும் படியானதுமான எதிரிகளும், எதிர்ப்புகளும் இருந்துதீரும் என்பதை நாம் எடுத்துச்சொல்ல வேண்டியதில்லை. இவ்வித எதிர்ப்புகள் இவ்விதகாரியங்களுக்கு உலகம் ஏற்பட்டநாள் முதல் அதுவும் சீர்திருத்த உணர்ச்சி ஏற்பட்டகாலம் முதல் இருந்து வந்ததேயாகும்.
ஏனெனில், எவ்வித மாறுதல் ஏற்படுவதானாலும் பழைமையினால் பயன் அடைந்து வந்தவர்களும், பழைமை நிலைமையையே தமது வாழ்க்கைக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறவர்களும், சுய அறிவற்றுப் பிடிவாதக்காரர்களாய் இருக்கின்ற வர்களும், சார்புக்காரர்களும் சாதாரணத்திலேயே மாறுதலுக்கு விரோதிகளாய் இருக்க வேண்டியவர் களாவார்கள்,
உதாரணமாக,
இன்றைக்கு பல ஆயிரக்கணக்கான வருடங் களுக்கும் பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கும் முன்னால் மேல்கண்ட துறைகளில்மாறுதல் செய்ய முன் வந்த சித்தார்த்தர் (புத்தர்) இயேசு (இயேசுகிறிஸ்து) முகமது (முகமது நபி) சாக்ரட்டீஸ்-மார்டின் லூதர் எனப்பட்ட பெரியார்கள் அடைந் ததாக சொல்லப்படும் எதிர்ப்புகளும் கஷ்டங்களுமே போதுமான அத்தாட்சியாகும்.
ஆகவே தான் இத்துறைகளில் இறங்கிய ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட, ஏற்படக் கூடிய எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும், தொல்லைகளையும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல் இறங்க வேண்டி யவர்களானதுடன் அவைகளுக்காக ஒரு சிறிதும் கலங்காமலும் தங்களது கொள்கைகளைச் சிறிதும் தளர்த்துவதற்கு இணங்காமலும் இருக்க வேண்டிய வர்களானார்கள்.
ஆகையினாலேதான், வரவேற்புக் கமிட்டி தலைவர் திரு. W.P.A. சௌந்திரபாண்டியன் அவர்கள் தமது வரவேற்பு உபந்யாசத்தில்.
“காங்கிரசும் சுயமரியாதை இயக்கக் கொள்கையும் ஒன்று என்று சொல்லுகின்றவர்கள் இரண்டையும் சரியாய் உணராதவர்கள் என்றே சொல்லுவேன்’’ என்றும் “கராச்சி காங்கிரஸ் பிரஜா உரிமைத் திட்டத்தில் மதநடுநிலைமையும் மதஸ்தாபன பாதுகாப்பும் பிரமாதப்படுத்தப் பட்டிருக்கின்றன, இந்த ஒரு பகுதியே காங்கிரசானது சுயமரியாதை இயக்கத்தை அறைகூவிபோருக்கழைக்கின்றதாய் இருக்கின்றதே’’ என்றும் “திருகாந்தியாரின் பிரசாரமும், உபதேசமும் அவர் அனுஷ்டிக்கும் முறையும் மக்களின் அறிவைக்கெடுத்து மதப்பைத்தியத்தை அதிகரித்து வருகிறது’’ என்றும்,
“கராச்சி காங்கிரஸ் தேர்ந்தெடுத்தக் காரியக் கமிட்டியில் இருந்து விலக்கப்பட்டிருந்த திருவாளர்கள் மாளவியாவையும், ராஜகோபாலாச்சாரியையும், காரியக் கமிட்டி தங்களுடன் சேர்த்துக்கொண்டதின் இரகசியம் என்ன?’’
“இவர்கள் இருவரும் இந்துக் கலைகளையும் இந்து மதஸ்தாபனங்களையும் விருத்தி செய்யும் டிரஸ்டிகளல்லவா? ஆகையால் காங்கிரசால் வரும் சுயராஜ்யம் இந்து ராஜியம் – ராமராஜியமாகத்தான் இருக்கும் என்று உணர்ந்த முஸ்லிம்கள் தனிக்கிளர்ச்சி செய்வது போல்-காங்கிரசின் சமுதாய லட்சியம் வருணாசிரம தருமத்திற்குப் பாதுகாப்பு அளிப்பதாக இருப்பதால் அதன் முயற்சிகளை எதிர்த்துப் போராடவேண்டும்.”
“காந்தியின் வாக்கால் வைதிகப் பிரசாரம் செய்து கொண்டு ஜவஹர்லாலின் பொது உடைமைப் பிரசங்கத்தில் நம்மை மயக்கப்பார்க்கும் காங்கிரஸ் வலையில் சிக்க வேண்டாம் என்று எனது வாலிப நண்பர்களை எச்சரிக்கை செய்கின்றேன்.”
“காங்கிரஸ் நமது இயக்கத்தைக் கொல்லும் வழியில் பிரயோகப்படுத்தப்படுகிறது.”
“மேலும் மகான்களால் ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மதக் கொடூரங்களையும், கட்டுப்பாடு களையும் உடைத்தெறியுங்கள். அவைகளை வேரறுப்பது நமது கடமை’’ என்பதாக சிறிதும் தளர்ச்சியும் சந்தேகமும் இல்லாத வலிமையான வார்த்தைகளால் வீர கர்ச்சனை புரிந்திருக்கின்றார்.
மகாநாட்டுக்குத் தலைமைவகித்த திரு R.K. சண்முகம் B.A., B.L. M.L.A., அவர்களோ அதைவிட வீரமாய் பேசி இருக்கின்றார், அதாவது:
“நமது இயக்கத்தில் தேசியமில்லை என்று சொல்லு வது நமது எதிரிகளில் – போலி தேசியவாதிகளின் சூழ்ச்சியேயாகும்’’
“நமதியக்கத்தில் உள்ள எல்லோரும் உண்மை தேசியவாதிகள்’’.
“தேசிய இயக்கமென்று சொல்லிக்கொள்ளு கிறவர்கள் வெள்ளைக்காரனை மாத்திரம் வைதுவிட்டு அதிகாரம் பதவிகளைப் பற்றி மாத்திரம் பேசிவிட்டு தங்கள் சகோதரர்களை யெல்லாம் தாழ்த்தி இழிவுபடுத்தி அடக்கி வைத்திருக்கும் கொடுமைக்குப் பரிகாரம் செய்யாமல் இருக்கின்றார்கள்.’’
“ஒரு ஜாதியாரோ, ஒரு வகுப்பாரோ மற்றொரு ஜாதியாரைவிட , வகுப்பாரைவிட உயர்ந்தவர்கள் என்பதான தத்துவம் ஒரு நாட்டில் இருக்குமானால் அந்தநாடு எவ்வளவு கொடுமையான தான ஒரு அன்னிய அரசாங்கக் கொடுமையைவிட மிகப்பெரிய அக்கிரமும் கொடுமையுமான தென்றே சொல்லுவேன்’’
“காங்கிரசானது எல்லோருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் மத நடுநிலைமை வகிக் கப்படும் என்றும் மதக் கொள்கைகள் காப்பாற்றப்படும் என்றும் தீர்மானம் செய்துவிட்டது. இதைநாம் ஒப்புக்கொண்டால் நாம் சுயமரியாதையையோ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையோ அடையமுடியாது’’
‘மதநடுநிலைமையைக் கொண்ட இயக்கம் எதுவானாலும் அது தேசிய இயக்கமாகாது.’
“மதப் பாதுகாப்பைத் தகர்த்தெறிய வேண்டும்.’’
“காங்கிரஸ் தீர்மானங்கள் சுயமரியாதை இயக்கத் திற்குக் கோடரிக்காம்பு.’’
“அத்தீர்மானங்கள் கொண்ட ஸ்தாபனங்களோடு எதிர்த்துப் போராடவேண்டும்” என கர்ஜித்திருக்கிறார்.
மற்றும் வாலிப மகாநாட்டு வரவேற்புக் கமிட்டித் தலைவர் திரு. எஸ். ஜயராம் பி.ஏ. அவர்கள் தமது உபன்யாசத்தில் “சமதர்மம் ஓங்கவே நாம் இங்குகூடி இருக்கின்றோம். சமுக விடுதலையே இராஜிய விடுதலையைவிட அவசியமானது.”
“அந்நிய அரசாங்கம் இருக்கும் பொழுதே தீண்டாதவர்களுக்கும் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் ஏதாவது கதிமோட்சம் ஏற்பட்டால் தான் உண்டு. இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒரு காலமும் விடுதலை யேற்படாது என்பது நிச்சயம்.”
“திரு. காந்தியவர்கள் மூலம் வருமென்று எதிர்பார்க்கும் இராமராஜ்ஜியத்தில் இவர்களுக்கு விடுதலை ஏற்படும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அக்காலத்தில் இதைவிட ஜாதிச் சண்டைகள் அதிகரிக்கும். ஜாதி இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஒரு அரசாங்கத்தில் தீண்டாதார் கஷ்டத்தை ஒழித்து விடுதலையை எவ்விதம் அமலுக்கு கொண்டுவரமுடியும்? சமுக விடுதலை தேசிய விடுதலையாகாதென்று சர்.கே.வி.ரெட்டி நாயுடு சொல்லி இருக்கிறார். ஆகையால் சம உரிமை விரும்பும் நாம் அரசியல் இயக்கங்களுடன் சேர்வதைவிட்டு சமதர்ம இயக்கத்தைத் தனியாக நிறுவி வேலை செய்ய வேண்டும்.”
“பகுத்தறிவைக் கொண்ட நமது இயக்கத்தில் போலிக் கடவுள்களும், மதங்களும் சின்னா பின்னப்படுவது ஆச்சரியமல்ல. நாஸ்திகப் பட்டத்திற்குப் பயப்படக் கூடாது.”
“விதவைகள் கண்ணீர் விடுவதையும், பெண்களை மிருகங்களை விடக் கேவலமாய் நடத்துவதையும் இனிப் பொறுக்கமுடியாது.”
“கடவுளோ, சாஸ்திரமோ, வேதமோ எதுவானாலும் அவற்றின் எதிர்ப்புக் கஞ்சாமல் போராட வேண்டியது இளைஞர் கடமை.”
என்பதாக வீரமுழக்கம் செய்திருக்கின்றார்.
(தொடரும்)