தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
இன்று (ஜூன் 25) சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள்!
சமூகநீதிக் காவலர் இந்திய அரசியலில் எப்போதோ ஒருமுறை (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று கூறுவர்) பூக்கும் அபூர்வ குறிஞ்சி மலர்!
அரச குடும்பத்தில் பிறந்து, மக்கள் தொண்டுக்காக மாளிகையை விட்டு வெளியேறி ஜாதி, மூடநம்பிக்கை ஒழிந்த சமத்துவ பகுத்தறிவு நெறியில் மக்களைக் கொண்டுவர, தனது இறுதி மூச்சுவரை உழைத்த புத்தரைப்போல், புதுமைத் தொண்டறச் செம்மலாய் ஒளிர்ந்தார்!
தமிழ்நாடும், திராவிட மக்களும் சமூகநீதி, சுயமரியாதை மண்ணான தமிழ்நாடும் என்றும் அவர் உள்ளத்தில் பதிந்துவிட்ட பிரிக்கப்பட முடியாதவை.
டில்லி பெரியார் மய்யக் கட்டடத்தை ஆர்.எஸ்.எஸ். காவிகள், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இடித்ததை, மருத்துவமனையில் இருந்த நிலையில் கேட்டு, துடித்துத் துள்ளி எழுந்து, பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்குத் தந்த தோழமைக் கட்சி மெமரோண்டத்தில் கையெழுத்திட்டார்.
பெரியாரை நேசித்த, சுவாசித்த
சமூகநீதிப் போராளி!
‘‘நான் வெளியில் இருந்திருந்தால், அந்த ‘புல்டோசர்’ முன் மார்பைக் காட்டி தடுத்து நிறுத்தியிருப்பேன்’’ என்று பெரியாரை நேசித்த, சுவாசித்த சமூகநீதிப் போராளி!
மண்டல் கமிஷன் பரிந்துரையை மன்றத்தில் ஏற்றி, செயலாக்க அவர் பட்ட பாடு, ஒரு மகத்தான மலையேறி சாதித்த மகத்தான சரித்திரம். அதன் காரணமாகவே, அவர் ஆரியர் வெறுத்த சீரியர் ஆனார்.
செம்மொழி நாயகர் கலைஞருக்குத் தனி இடம் தந்தவர் உள்ளத்திலும், உறவிலும்!
நாடாளுமன்றத்தில், அம்பேத்கர் படம் திறந்தவர்; அற்புதமான கவிஞர்!
அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ பட்டம்
அளித்து மகிழ்ந்தவர்
‘‘கோவில் கட்டியவர் கருவறைக்குள்ளே நுழைய முடியாமல், வெளியே நிற்கும் கொடுமைபோல, நாடாளுமன்றத்திற்கே அரசமைப்புச் சட்டம் தந்த புரட்சியாளர் அம்பேத்கர், இன்றுதான் நாடாளுமன்றத்தில் படமாக இடம்பெற்று வருகிறார்’’ என்று உவமித்து சொன்ன உண்மை உரைத்தவர்! அவருக்குப் ‘பாரத ரத்னா’ பட்டம் அளித்து மகிழ்ந்தவர்.
சமூக நீதிக்கு மிகப் பெரிய பங்காற்றியவர்கள்!
“Minds are changed by social reforms and social reformers, like late Periyar E.V.R. who have rendered greater Service for social order and Social Justice than did Prime Ministers legislators or Parliamentarians”
V.P.Singh
‘The Hindu’, 29.12.1992,
‘‘சமூகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்தவர்கள் மறைந்த தந்தை பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளே ஆவர்.
இவர்கள் பிரதமர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விட சமூகத்தைச் சீர்திருத்தி, சமூகநீதிக்கு மிகப் பெரிய பங்காற்றியவர்கள்’’ என்று, மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ‘தி இந்து’ (29.12.1992) நாளிதழுக்குப் பேட்டியளித்தபோது கூறினார்.
திராவிடர் இயக்கத்திற்கும், எமக்கும் எப்போதும் உற்ற தோழராக, இருந்தவர்!
தமிழ் உலகம் நன்றி செலுத்தும் என்றும்!
அவருக்குச் சிலையெழுப்பிய நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முத்தான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை என்றும் பாராட்டி, தமிழ் உலகம் நன்றி செலுத்தும் நிலை!
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் சிலைக்கு மாலை அணிவித்து, சமூகநீதியாம், அவரது சீலத்தைப் பரப்ப சூளுரைத்து, சுயமரியாதை உணர்வைப் புதுப்பித்துக் கொள்ளுவோமாக!
வாழ்க வி.பி.சிங்!
வருக அவர் காண, உழைத்த புதிய சமூகநெறி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.6.2025