96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள் -கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் எழுச்சியுரை

viduthalai
26 Min Read

தந்தை பெரியார் தொடங்கிய இயக்கமும், பதிப்பகங்களும், நடத்திய ஏடுகளும் வியாபார நோக்கம் கொண்டவையல்ல!
இனமான உணர்வுக்காகவும், பெண்ணுரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று வந்தவை – வருபவை!
2026 இல் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு திருப்பம் – எச்சரிக்கையாகக் கடமையாற்றவேண்டும்!

Contents
96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்: கருத்தரங்கம்‘‘தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’’‘‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’’ இயக்குநர்களில் ஒருவர்!துணிவைக் கொடுத்த இயக்கத்திற்குப் பெயர்தான் சுயமரியாதை இயக்கம்மாணவனாக இருந்த என்னை, ‘ஆசிரியராக’ ஆக்கியது இந்தப் புத்தகங்கள்!நான் என்றைக்கும் பெரியாருடைய மாணவன்தான்; வாழ்நாள் மாணவன்!லெவி ஃபிராகல்சர்குலேசன் அல்ல, முக்கியம்!எதிர்நீச்சல் ஏடு ‘விடுதலை’‘குடிஅரசின்’ தலையங்கத்திற்காகத் தண்டனை!‘குடிஅரசு’ சாதித்தவை என்னென்ன?‘குடிஅரசு’ நின்று போனால்…எங்கெங்கும் நமது பிரச்சாரம்!‘விடுதலை’யைப்பற்றி ராஜாஜி எழுதியது!2026 இல் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் – ஒரு திருப்பம்!முருகனிடம் ஏன் போகிறார்கள்?1971 இல் என்ன நடந்தது?எதிர்ப்புகளைச் சந்தித்து எழுந்த இயக்கம்!‘திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்பு!

சென்னை, ஜூன் 23 – பக்தியைக் காட்டி மக்களை ஏய்த்து வாக்குகளைப் பெறத் துடிக்கிறார்கள். அது இங்கு நடக்காது – மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியே மலரும் – மலரவேண்டும்; அதற்காக விழிப்புடன் செயலாற்றவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்: கருத்தரங்கம்

நேற்று (22.6.2025) மாலை சென்னை பெரியார் திடலில் ‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று தலைமையுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,.

அவரது தலைமையுரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு ‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்: கருத்தரங்கமும் – கண்காட்சியும்’’ என்ற தலைப்பில் நடைபெறுகின்ற நிகழ்விற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’’

‘‘தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’’ என்ற தலைப்பில் இன்றைக்கு வெளியிடப்பட்ட இந்த நூல் 96 ஆவது ஆண்டாக  நடைபெறக்கூடிய பெரியார் பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

வரிசையாக வெளியிடப்படும் புத்தகங்களின்மூலம் சமுதாயத்தை எப்படியெல்லாம் மாற்ற முடியும் என்ப தற்குரிய எடுத்துக்காட்டு நம்முடைய புத்தகங்களாகும். எதிர்நீச்சல் புத்தகங்கள் – மற்றவர்கள் விரும்பிப் படிப்பதல்ல; இந்தப் பெயரைக் கேட்டவுடனேயே புத்தகத்தை கீழே போட்டுவிடுவார்கள்; இந்தப் பேப்பரா? அய்யோ நாத்திக பேப்பர் என்று சொல்லுவார்கள்.

அப்படிப்பட்ட நிலையிலும் எதிர்நீச்சல் அடித்து, இன்றைக்கு 96 ஆவது ஆண்டில், நூற்றாண்டு காணக்கூடிய வகையில் பெரியார் உருவாக்கிய பதிப்பகங்கள் இருக்கின்றன.

நூற்றாண்டில் மூன்று இயக்கங்கள்.

ஒன்று, சுயமரியாதை இயக்கம்.

இரண்டு, சுயமரியாதை இயக்கத்தினுடைய கருத்துகளையே கூடுமான வரையில், உள்ளார்ந்த முறையில் உள்வாங்கிய கம்யூனிச இயக்கம். இந்த இரண்டு இயக்கத்திற்கும் நேர் எதிரான ஒரு தத்துவமும் இருக்கிறது. வெளிச்சம் என்று சொன்னால், இருட்டு என்று இன்னொரு இடம் இருக்கும்.

அறிவு என்று சொன்னால், அறியாமை என்று சொல்வதற்கு இன்னொரு இடம்.  அதுதான்
ஆர்.எஸ்.எஸ்.

எனவே, அறியாமையை எதிர்த்து 96 ஆண்டு காலம் இந்தப் பதிப்பகம் – ‘குடிஅரசு’ போன்ற பத்திரிகைகளை வெளியிட்டிருக்கிறது.

‘‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’’ இயக்குநர்களில் ஒருவர்!

நண்பர்களே, உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், இங்கே புத்தகத்தை வெளியிட்ட தோழர் இரா.முத்தரசன் அவர்களை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்றுதான் இதுவரையில் பார்த்திருப்பீர்கள்;  நூறாண்டு கால சிறப்புகளில் கம்யூனிச கட்சிகளின் பெருமை ஒன்று – ‘‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’’ அதனு டைய இயக்குநர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் நம்முடைய தோழர் இரா.முத்தரசன் அவர்கள்.

இரண்டு முற்போக்கு இயக்கங்கள். இதனிடையில், ஒரு பிற்போக்குத்தனத்தை நிலைநாட்டுவதற்காகவே, ஆட்சியில் பலவகையான பித்தலாட்டங்களைச் செய்து, இன்றைக்கு அதற்காகப் புதுப்புது உத்திகளைக் கையாளுகிறார்கள். எதிலும் நம்மைப் போன்று வெளிப்படையான முறை கிடையாது.

வாழ்த்துரை வழங்கியுள்ள ஓர் அற்புதமான எழுத்தாளர் ஓய்வு பெற்ற தலைமைச் செயலக பணியாளர் தோழர் திருமதி சிவகாமி அவர்கள்.

இவரை நான் நேரில் பார்த்ததில்லை. ‘விடுதலை’ நாளிதழுக்கு தான் அனுப்பி வைக்கும் ‘‘ஆசிரியர் கடிதங்களில்’’ மிகச் சிறப்பாக வெளிவரும் ‘விடுத லை’யைப் பாராட்டி எழுதுவார்கள்.

இப்படி ஒரு வாசகர் இருக்கிறாரே, அவருடைய கருத்து என்ன என்று, அவர் யார் என்று எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக இன்றைக்குச் சிறப்பாக வாழ்த்துரையாற்றினார்.

‘விடுதலை’, ‘குடிஅரசு’ இவற்றினால் என்ன விளைச்சல் என்பதற்கான அடையாளம்தான் இவர்.

சுயமரியாதை இயக்க சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கங்கள் பல ஊர்களில் சிறப்பாக நடைபெற்றன. அதில் ஏராளமான மகளிர் பங்கேற்றனர்.

அதில் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டோம். இந்த இயக்கம் என்ன செய்தது?

துணிவைக் கொடுத்த இயக்கத்திற்குப் பெயர்தான் சுயமரியாதை இயக்கம்

நூறாண்டுகளுக்கு முன்பு நாற்காலி இருந்தது. அதில் அமரக்கூடிய துணிவு பெண்களுக்கு இருந்ததா?

அந்தத் துணிவைக் கொடுத்த இயக்கத்திற்குப் பெயர்தான் சுயமரியாதை இயக்கம். துணிவைக் கொடுத்த தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

கோவையில் உரையாற்றும்போது இன்னொரு விஷயத்தையும் சொன்னேன்; பெரியாருடைய தொண்டன் என்ற முறையில், அவரைப் புரிந்து கொண்டவன் என்ற முறையில்.

செருப்பு – காலணி இருந்தது; அதை ஆண்களுக்கு முன்பு அந்தக் காலணியை அணிந்து கொள்ளக்கூடிய உரிமை மகளிருக்கு இல்லை என்று சொன்னார்கள். கேரளாவில், குடை இருந்தது; மழை பெய்தால், பெண்கள் குடை பிடித்துக் கொண்டு போகக்கூடிய உரிமை இல்லை.

பிரின்சு போன்ற இளைஞர்கள் நிகழ்ச்சிகளுக்குத்  தேவையானவற்றை சிறப்பாகச் செய்வார்கள். சமுதாய மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பதற்கு நீண்ட நேரம் விளக்கிப் பேசவேண்டிய  அவசியம் இல்லை.

ஒரு குடையைக் காட்டி, ‘‘குடை பேசுகிறது’’ என்றும், செருப்பைக் காட்டி, ‘‘செருப்புப் பேசுகிறது’’ என்று வரிசையாக சொல்லி, பெண்களின் கைகளில் கரண்டி – அடுத்ததாகப் பேனா இவற்றைக் காட்டி பேச வைத்தாலே போதும்.

இங்கே உரையாற்றிய சிவகாமி அம்மையார், பெரியார் இல்லையென்றால், நான் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்திருப்பேன். சமையலறையில் கரண்டியை, ஊதாங்குழலைப் பிடித்துக் கொண்டிருப்பேன். ஆனால், பெரியார் பாடுபட்டதால், தலைமைச் செயலகத்தில் பேனாவைப் பிடித்து எழுதுகின்ற பணியைச் செய்தேன் என்றார்.

ஒரு நாடகத்தில், இவற்றையெல்லாம் பாத்திரங்க ளாகக் குடை, செருப்பு, கரண்டி, ஊதாங்குழல் போன்ற வற்றைப் போடலாம்.

மற்றவற்றையெல்லாம்விட, செருப்புக்கு ஒரு வரலாறு உண்டு. ஏனென்றால், கடலூரில், அது பெரியாரின்மேல் விழுந்தது, அவர் இன்னொரு செருப்பையும் தேடிப் பிடித்தார் என்ற வரலாற்றை ‘‘செருப்புப் பேசுகிறது’’ என்கின்ற பாத்திரப் படைப்பில் விரிவாகச் சொல்லலாம்.

இன்னொரு பக்கத்தில், 14 ஆண்டுகளாக இந்த நாட்டையே செருப்பு ஆண்டிருக்கிறது என்ற விளக்கத்தையும் சொல்லலாம்.

ஆகவே, இந்தப் பாத்திரங்கள் எல்லாம், பேசாத பாத்திரங்கள். ஆனால், அவற்றை வைத்து வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம்.

இதுபோன்ற சிந்தனைகளுக்குக் காரணம், முழுக்க முழுக்க இந்தப் புத்தகங்கள்தான்.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற அறிஞர் பெருமக்களே, சான்றோர்களே, தோழர்களே, மலேசியத் தோழர்களே,  ஊடக நண்பர்களே, நன்றியுரை கூறவிருக்கின்ற குமரேசன் அவர்களே, வரவேற்பு ரையாற்றிய பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

எதற்காக குடிஅரசு?

காங்கிரசில் இருந்தபோதுகூட, அய்யா பெரியார், கொள்கைக்காகத்தான் இருந்திருக்கின்றார்.

ஒரே ஒரு வரியில் அய்யா சொன்னார், ‘‘நான் என்றைக்கும் கட்சிக்காரனாக இருந்ததில்லை; கொள்கைக்காரனாகவே இருந்திருக்கின்றேன்’’ என்று.

90 ஆவது வயதில் எழுதுகிறார், ‘‘நான் மாறி விட்டேனா?’’ என்ற தலைப்பில், ‘‘நான் என்றுமே என்னுடைய கொள்கையிலிருந்து மாறவில்லை; அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்பு, சமத்துவம், பெண்ணடிமை ஒழிப்பு இவற்றிற்காக நான் யாரையும் எதிர்த்திருப்பேன்; யாரையும் ஆதரித்திருப்பேன். இதுதான் எனக்கு அளவுகோல். மனிதநேயம், மானுடப்பற்று’’  என்று சொன்னார். அதனைச் செய்வதற்காக, ‘குடிஅரசு’ ஏட்டைத் தொடங்கினார்.

ஒவ்வொருவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கின்றோம், பெரியார் பதிப்பகத்திற்கு.

மாணவனாக இருந்த என்னை, ‘ஆசிரியராக’ ஆக்கியது இந்தப் புத்தகங்கள்!

ஒரு பெரியார் தொண்டன்; தொண்டனுக்குத் தொண்டன் நான். அப்படிப்பட்ட எனக்கு இன்றைக்கு என்ன மகிழ்ச்சி என்றால், நான் பேசுவதைவிட, உங்களையெல்லாம் பார்க்கும்போதுதான் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இங்கே உரையாற்றியவர்கள், பதிப்பகத்தைத் தொடங்கி, 96 ஆண்டுகள் என்று சொன்னார்களே, அதில் வெளிவந்த இந்த புத்தகங்கள்தான், மாணவனாக இருந்த என்னை, ‘ஆசிரியராக’ ஆக்கியது.

ஆசிரியர், ஆசிரியர் என்று என்னை அழைக்கிறீர்கள் அல்லவா! நான்ஒன்றும், ‘ஆசிரியர்’ பட்டம் வாங்கவில்லையே! அந்த ‘ஆசிரியர்’ பொறுப்பு, பெரியார் அவர்கள் எனக்குக் கொடுத்த ஒன்றாகும்.

பெரியார் ஏன் கொடுத்தார்? எதற்காக கொடுத்தார்? என்பதற்கான ஆதாரம்தான் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தின் பைண்டிங்கே கிழிந்து போயிற்று. காரணம் என்னவென்றால், இதற்கு வயது 75.

நான், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், மாணவனாக இருந்தபோது, பெரியாருடைய கூட்டத்தில் வாங்கி, இந்தப் புத்தகத்தை பைண்டிங் செய்து வைத்தேன்.

மீரான்சாகிப் தெருவில் தங்கியிருந்த அய்யா பெரியார் அவர்கள், எங்களுடைய வீட்டில் கொஞ்ச நாள் தங்கியிருந்தார். அலமாரியில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.

நான் ‘விடுதலை’ அலுவலகத்திற்குப் புறப்ப டும்போது, ‘‘என்னங்க, அலுவலகத்திற்குப் போகி றீர்களா?’’ என்று கேட்பார்.

‘‘ஆமாங்க அய்யா; நான் வீட்டில் இருக்கவேண்டுமா?’’ என்பேன்.

‘‘இல்லை, இல்லை, நீங்கள் அலுவலகத்திற்குச் சென்று உங்கள் வேலையைப் பாருங்கள்’’ என்று சொல்வார்.

நான் புறப்பட்டுப் போனதும், அய்யா அவர்கள், கட்டிலில் இருந்து மெதுவாக எழுந்து, அலமாரியில் உள்ள புத்தகங்களை எடுத்து, புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பார்.

நான், மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்குச் சென்றபோது, அய்யா அவர்கள், ‘‘என்னப்பா, நாம் வெளியிட்ட புத்தகங்களையெல்லாம் வாங்கி, அழகாக பைண்ட் செய்து வைத்திருக்கிறீர்களே’’ என்றார்.

உடனே நான், ‘‘அய்யா, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் இருந்தால், எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்றேன்.

இல்லை, இல்லை. நீங்கள் எல்லா புத்தகங்களையும் வாங்கி, பைண்ட் செய்து வைத்திருக்கிறீர்கள். தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன்’’ என்றார்.

அப்பேர்ப்பட்ட புத்தகங்கள் பலவற்றில், அவருடைய கையெழுத்தும் இருக்கும்.

நான் என்றைக்கும் பெரியாருடைய மாணவன்தான்; வாழ்நாள் மாணவன்!

ஆகவேதான், நான் என்றைக்கும் பெரியாருடைய மாணவன்தான். வாழ்நாள் மாணவன். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தப் புத்தகப்புரட்சி என்பது சமுதாயத்தை மாற்றிப் போட்டிருக்கிறது.

‘குடிஅரசு’ அதனைச் செய்திருக்கின்றது என்பதற்கு அடையாளமாக ஒரு சிறிய உதாரணம்.

அதனுடைய தத்துவங்கள் மிகவும் முக்கியமானதாகும். ஆண் எஜமானன் அல்ல; பெண் அடிமையல்ல என்று சொல்வதுதான் சுயமரியாதைத் திருமணம். சடங்குகள் கிடையாது, சம்பிரதாயங்கள் கிடையாது என்பதுதான் சுயமரியாதைத் திருமணம்.

லெவி ஃபிராகல்

அதேபோன்று ‘விடுதலை’ ஒரு நாளேடு. வெளி நாட்டில் உள்ள லெவி ஃபிராகல் என்று நார்வேயில் இருக்கக்கூடிய உலக மனிதாபிமானக் கழகத்தினுடைய தலைவர். பகுத்தறிவாளர்.

டில்லி பெரியார் மய்யத் திறப்பு விழாவில் அவர் உரையாற்றும்போது, ‘‘நான், இரண்டு, மூன்று முறை சென்னைக்கு வந்திருக்கின்றேன். உலக நாடுகள் பலவற்றிற்கு நான் சென்றிருந்தாலும், இங்கே இரண்டு சாதனைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.  ஒன்று, ‘விடுதலை’ என்ற பத்திரிகை – ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால் ‘லிபர்ட்டி’ என்ற தலைப்பில் நாள்தோறும் வெளிவரும் ஏடு – பகுத்தறிவு ஏடு.

உலகத்திலேயே பகுத்தறிவாளர்களால் நடத்தப்ப டக்கூடிய ஒரே ஒரு ஏடு ‘விடுதலை’ ஏடு மட்டும்தான்’’ என்றார்.

சர்குலேசன் அல்ல, முக்கியம்!

விடுதலை நாளேட்டிற்கு பெரிய அளவிற்கு சர்குலேசன் இருக்கிறதா? அது சர்குலேசன் பத்திரிகை அல்ல. ஆனால், பெரிய அளவில், புரட்சியை உருவாக்கக்கூடிய பத்திரிகை. விடுதலை ஏடு பல அரசாங்கங்களை மாற்றியிருக்கிறது.

தலைமை நீதிபதிகள் பலர், தங்களுடைய பிறந்த தேதியை மாற்றிக் கொடுத்தபோது, அந்த உண்மையை வெளியாக்கியிருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இதோ ஓர் ஆதாரம். இதோ என் கைகளில் இருப்பது ‘‘ஹியூமனிஸ்ட் யு.கே.’’ என்ற ஒரு பத்திரிகை. பத்திரிகைக்கூட அல்ல – நியூஸ் லெட்டர் – செய்திக் கடிதம், ஜூன் மாத இதழ்.

லண்டனில், 140 ஆண்டுகளாக இருக்கிறது பகுத்தறிவாளர் கழகம். இரண்டு அமைப்பை இணைத்து செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

‘‘இன்னமும்  மதச்சார்பல்லாத முறையில், தங்களு டைய திருமணத்தை நடத்திக் கொள்ளவேண்டும்’’ என்று மானுடப் பற்றுள்ளவர்கள் அங்கு போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில், சுயமரியாதைத் திருமணத்தை, ஓர் அரசாங்கம், அண்ணா தலைமையில், திராவிட இயக்கத்தில் வந்த அரசு, சட்டப்பூர்வமாக ஆக்கியது.

அதனை எதிர்த்து நடத்தப்பட்ட வழக்கிலும், மேல்முறையீடு செய்து, அதிலும் வெற்றி பெற்று வந்தது.

சீனாவில், மாசேதுங் வந்த பிறகுதான், அங்கே புதிய சீனா உருவாகிய பிறகுதான், திருமண முறையில் மாற்றம்.

ஆனால், பெரியார் அவர்கள், ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே சுயமரியாதைத் திருமணங்களை நடத்தினார். அன்றைக்கு சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், அதைப்பற்றி கவலைப்படவில்லை அவர்.

அன்றைக்கு எழுத்துச் சீர்திருத்தம், சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தன்னுடைய பத்தி ரிகையில் தொடர்ந்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் பயன்படுத்தினார்.

எனவே, பத்திரிகைகளும், புத்தகங்களும் – தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – மொழி எழுத்துச் சீர்திருத்தம் என்ற தலைப்புகளில் கல்லூரிகள் பலவற்றில் உரையாற்றினார் தந்தை பெரியார்.

எதிர்நீச்சல் ஏடு ‘விடுதலை’

ஆகவேதான், ‘விடுதலை’ பத்திரிகை வெளிவருவது லாப நோக்கத்திற்காக அல்ல நண்பர்களே! சர்குலேசன் பாலிசி அல்ல. அது எதிர்நீச்சல் அடித்துக்கொண்டு வெளிவரும் பத்திரிகை.

நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’ ஏட்டினை, தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய சொந்தப் பணத்தைப் போட்டு நடத்தினார்.

வருவாயைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால், கொள்கையை முன்னிலைப்படுத்தினார்.

இங்கே இருக்கின்ற இளைஞர்கள், ஊடகவிய லாள நண்பர்கள் அனைவரும் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

‘‘இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்?’’ என்று அன்றைக்கு வெள்ளைக்கார ஆட்சியைப்பற்றி எழுதினார் தந்தை பெரியார் அவர்கள்.

ஆனால், சில பைத்தியக்காரர்கள், ‘‘பிரிட்டிஷ்காரர்க ளுக்கு வால் பிடித்தார்கள்; பெரியார் தேசத் துரோகி’’ என்றெல்லாம் சொல்வார்கள்.

‘குடிஅரசின்’ தலையங்கத்திற்காகத் தண்டனை!

‘‘இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்?’’ என்று எழுதியதற்காக 1933 ஆம் ஆண்டில், என்னைப் போன்றவர்கள், உங்களைப் போன்றவர்கள் பல பேர் பிறக்காத காலகட்டத்தில் – பெரியார்மீது வழக்குத் தொடுத்தனர். தந்தை பெரியாரின் தங்கை கண்ணம்மாள் அவர்கள்மீதும் வழக்கு!

வழக்கு விசாரணையில்,  வெள்ளைக்கார அர சாங்கத்தினால், ஆறு மாதம் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டு, பெரியார் சிறைச்சாலைக்குச் சென்றார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குச் சொன்னார், ‘‘எதற்கா கக் கல்விக்கு குறைந்த நிதி ஒதுக்குகிறீர்கள்? மற்ற வற்றிற்குத் தாரளாமாக நிதி ஒதுக்குகிறீர்கள்; எங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி வேண்டாமா?’’ என்று. வினா எழுப்பி, கல்வியில் அரசாங்கத்தினுடைய போக்கை எதிர்த்து எழுதினார் என்று வழக்குத் தொடுத்து, அந்தப் பத்திரிகையைத் தடை செய்கிறார்கள்.

இதுகுறித்து தந்தை பெரியார் அவர்கள் 12.11.1933 தேதியிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில், ‘‘குடிஅரசுமீது பாணம்’’ என்னும் தலைப்பில் தலையங்கம் தீட்டினார்.

‘‘குடிஅரசு பத்திரிக்கைக்கு இந்திய அரசாங்க அவசரசட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20 ஆம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், ‘குடிஅரசு’ பத்திரிக்கையின் பிரசுர கர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும் இருக்கின்றார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப்பட்டாய்விட்டது.

இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை; கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையிலும் இப்படிச்செய்யாமல் விட்டு வைத்தி ருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டிருக்கிறோம்.

முதலாளிவர்க்க ஆட்சியாகிய இன்றைய அர சாங்கத்தின் சட்டப்படி ‘குடிஅரசு’ ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடி அரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் கண்ட விஷயங்கள் குடி அரசைக் கொல்லத்தக்க பாணம் விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் ஐயமில்லை . ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசயமேயாகும்.

‘குடிஅரசு’ சாதித்தவை என்னென்ன?

“குடிஅரசு” தோன்றி இந்த எட்டரை வருஷகாலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து, சரீரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்கவேண்டும் என்கின்ற கவலை கொண்டிருக்கிறது என்பதிலும், இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனீயம், புரோகிதம், பாதிரித்தன்மை முதலியவைகளோடு இவற்றிற்கு ஆதிக்கம் கொடுத்துவரும் எல்லா மதங்களும் ஒழியவேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்து வந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணையில்லை .

இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதைகளை கண்ணாடிபோல் வெளிப்படுத்தும் தொண்டை பிரதானமாய்க் கருதி, அதைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக் காத்திருக்கிறோம் என்பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள் கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் ‘குடிஅரசு’ பத்திரிகை இருக்கவேண்டிய அவசியமு மில்லை.

சிறிது காலத்துக்கு முன் நாம் தெரிவித்துக்கொண்டபடி இனிநம்மால் நமது கடமையைச் செய்யமுடியாதென்று தெரிந்தால், நாம் இருப்பதைவிட இறப்பது மேல் என்பதுபோல் குடிஅரசு” தன் கடமையை ஆற்ற முடிய வில்லையானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்து போக நேரிட்டாலும் ஆசிரியன் என்கின்ற முறையில் நமக்குக் கவலையில்லை.

‘குடிஅரசு’ நின்று போனால்…

ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும், பிரசுரகர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்குக் “குடிஅரசு” மறைவதில் அதிகக் கவலையிருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் துகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவுகட்ட முடியவில்லை. நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டுவிட்டது. மயக்கமும். மார்வலியும் அதிகம். கால்களில் நீர்ஏறி, வீக்கம் கண்டிருக்கிறது. காதுகளும் சரியாய் கேட்பதில்லை. ஆதலால், எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்குப் பாரம் என்றே எண்ணினோம். இந்த நிலையில் “குடிஅரசு” நின்றுபோக ஏற்பட்டால், தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ளவேண்டியதாகும். ஆனால் என்ன நடக்கின்றனவோ பார்ப்போம்.

நிற்க இதன் பயனாய் “குடி அரசி”ன் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது, அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள் கெட்டுப் போகுமோ என்றாவது யாரும் பயப்படவேண்டியதில்லை.

எங்கெங்கும் நமது பிரச்சாரம்!

நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றிவிட்டன. பிரச்சாரம் என்கின்ற கொடி எங்கும் பரவிவிட்டது. “குடிஅரசோ” சுயமரியாதைக்காரரோதான் இக்கொள்கைகளைப் பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனி கருதவேண்டியதில்லை. “குடிஅரசு”ம், சுயமரியாதைக்காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டதே என்று வெட்கப்பட்டுக் கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து, வேறு பாஷையில் குடிஅரசுக் கொள்கையைச் சொல்லவும் பிரச்சாரம் செய்யவும், வெகு “தொண்டர்களும்’’, ‘‘தலைவர்களும்” இந்தியாவெங்கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததுபோலவும் ஆகும். ’’ என்று அத்தலை யங்கத்தில் குறிப்பிட்டிருந்தார் தந்தை பெரியார்.

இந்தத் தலையங்கத்தை அய்யா அவர்கள் எழுதும்போது, அவருக்கு வயது 55.

55 ஆவது வயதில், உடலோடு போராடிக் கொண்டு, சமூகத்தோடு போராடிக் கொண்டு, பணத்தோடு போராடிக் கொண்டு, தோல்வியோடு போராடிக் கொண்டு இவ்வளவையும் செய்திருக்கின்ற ஒரு தலை வர், இந்தியாவிலோ, உலகத்திலோ வேறு எங்கேயாவது உண்டா? என்று எண்ணிப்பாருங்கள் தோழர்களே!

நீதிமன்றத்தில் நின்று கொண்டு, ‘‘இன்னும் எவ்வளவு அதிகமான தண்டனை கொடுக்க முடியுமோ, அதைக் கொடுங்கள்’’ என்கிறார்.

அதனால்தான் நண்பர்களே, இயக்கப் பத்திரிகை களுக்கு என்ன சிறப்பு என்று சொன்னால், மற்றவர்கள் எப்படிப் பாராட்டுகிறார்கள் என்பது முக்கியமல்ல. ‘குடிஅரசு இயக்கம்’ என்று இராஜகோபாலாச்சாரியார் சொல்கிறார்.

சுயமரியாதை இயக்கம் என்பதற்குப் பதிலாக, பத்திரி கைகளை வைத்தும் அடையாளப்படுத்தி மக்களுக்குச் சொன்ன ஒரே ஒரு இயக்கம் நம்முடைய இயக்கம்தான்.

‘ஜஸ்டிஸ் கட்சி’, ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்று சொல்வார்கள்; ஜஸ்டிஸ் கட்சி என்பது பூர்வ பெயர் அல்ல. பத்திரிகையின் பெயர் ஜஸ்டிஸ்.

அதைத்தான், ‘குடிஅரசு’ இயக்கம் இப்படி சொல்லு கிறது என்று குறிப்பிடுகின்றார் இராஜகோபாலாச்சாரியார்.

‘விடுதலை’யைப்பற்றி ராஜாஜி எழுதியது!

நான், ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்ற வுடன், அய்யா பிறந்த நாளுக்காக, அவருடைய நண்பரான இராஜகோபாலாச்சாரியாரிடம் வாழ்த்துச் செய்தி கேட்டிருந்தேன்.

‘‘ஓ, நீங்கள்தான் ‘விடுதலை’க்கு ஆசி ரியராக வந்தி ருக்கிறீர்களா? சின்ன பைய னாக இருக்கிறீர்களே! சரி, சரி எழுதிக் கொடுத்த னுப்புகிறேன்’’ என்று சொன்னார்.

ஒரு போஸ்ட் கார்டில், ‘‘விடுதலையும், பெரியாரும் என் அன்பார்ந்த எதிரிகள்; பெரியார் நல் வாழ்க, ஆசீர்வாதம்’’ என்று எழுதி அனுப்பியிருந்தார்.

விடுதலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே! போராடுகின்ற தலைவரை மட்டும் சொல்லவில்லை; போராடுகின்ற கருவியையும் நினைவில் வைத்துக் கொண்டு எழுதியிருந்தாரே, இந்தச் சிறப்பு வேறு எந்தப் பத்திரிகைகளுக்கும் கிடையாது.

இதற்குக் காரணம் என்ன?

எதிர்நீச்சல் அடித்துப் பயணம் செய்வதால்தான். அதனால்தான், இன்றைக்கும் ‘விடுதலை’யில் எழுதப்படுகின்ற கருத்துகளை, மற்றவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாது.

‘விடுதலை’ லட்சக்கணக்கான எண்ணிக்கை அளவில் போகின்ற பத்திரிகை அல்ல. ஆனால், ‘ஏவுகணை’ ஒன்றுதானே போகிறது!

அதுபோன்று, முழுக்க முழுக்க அறிவுப்பூர்வமாக இருக்கக்கூடிய ஒரு பத்திரிகை.

இன்றைக்கு நடைபெறுகின்ற தேர்தல் நாடகத்தில், ஒரு புதிய திருப்பம் – புதிய சீன்!

2026 இல் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் – ஒரு திருப்பம்!

வரப்போகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற விருக்கின்ற சட்டப்பேரவை தேர்தலில் ஒரு புதிய திருப்பம். அதுபற்றி கேட்பதற்காகத்தான் ஊடகக்கா ரர்களும் இங்கே வந்திருக்கின்றார்கள். மீண்டும் இந்த ஆட்சி தொடர விழிப்புடன் செயலாற்றவேண்டும்.

தி.மு.க. ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சியை அகற்றவேண்டும் என்று ஆசைப்படுகின்றவர்கள்; மக்களை நம்பவேண்டும்; வாக்காளர்களை நம்ப வேண்டும் என்கின்ற நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். நாம் என்னதான் செய்தாலும், தி.மு.க. ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சியை அசைக்க முடியாது என்கின்ற முடிவிற்கு வந்துவிட்டார்கள்.

அதனால்தான், கடைசியாக ‘‘முருகா’’ என்று முருகனை நம்பியிருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு எப்போது கடவுள் நம்பிக்கை வரும் தெரியுமா? தோல்வி மனப்பான்மையும், நோயும், உயிருக்கு ஆபத்து எப்போது ஏற்படுகிறதோ, அப்போது தான்.

விமானத்தில் பயணம் செய்யும்போதோ, கப்பலில் பயணம் செய்யும்போதோ கடவுளுக்கு மணி யடித்து வேண்டுவது கிடையாது. ‘‘திடீரென்று, ஓர் அறிவிப்பு – உங்கள் இருக்கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; விபத்து நேரப் போகிறது’’ என்ற அறிவிப்பு வந்தவுடன், ஆளாளுக்கு, ஒருவர் அல்லாவை கூப்பிடுவார்; இயேசுவை இன்னொருவர் கும்பிடுவார்; முருகா என்று ஒருவர் சொல்லுவார். நம்மாள் ஒரே ஒரு கடவுளை அல்ல; கூட்டணிக் கடவுள்களை வைத்திருக்கிறார்; மற்ற மதத்தவர் ஒரே ஒரு கடவுளைதான் கூப்பிடுவார்.

ஆனால், நம்மாள் குல தெய்வத்திலிருந்து, எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொண்டிருப்பார்.

எப்பொழுது?

விமானம் விபத்துக்குள்ளாகப் போகின்றது; கப்பல் விபத்திற்குள்ளாகப் போகின்றது என்றபோது.

முருகனிடம் ஏன் போகிறார்கள்?

இப்போது ஏன், அவர்கள் முருகனிடம் போகி றார்கள்; அவர்கள் ஆட்டம் கண்டுவிட்டார்கள்; பயம் வந்துவிட்டது; அதிலே பயம், இதிலே பயம். எல்லாவற்றிலும் பயம்; அதனால்தான் முருகன்.

அந்தப் பயத்தில் அவர்களின் முதல் தோல்வியே, ஒப்புக்கொண்ட தோல்வி.

மக்களை நம்பிப் பயனில்லை; இனிமேல், எங்க ளுக்கு மக்களின் ஆதரவு இல்லை. ஆகவே, ஏதோ ஒரு கலவரத்தை ஏற்படுத்தி, குறுக்கு வழியில் வந்தால்தான் முடியும் என்று நினைக்கிறார்கள்.

பெரியார் கடைசி காலகட்டத்தில், கடவுள் நம்பிக்கையாளராக மாறுவாரா? என்று நினைத்தார்கள். ஏனென்றால், கடைசி காலகட்டத்தில் உடல்நிலை கோளாறு ஏற்படுகின்ற போது, கடவுளை வேண்டிக் கொள்வார்கள். அதுபோன்று பெரியாரும் மாறுவாரா? என்று நினைத்தனர். ஆனால், சுயமரியாதைக்காரர்கள் இதுவரையில் அப்படி மாறியதே கிடையாது.

பொன்னேரிக்கு அருகில், ஆசிரியர் சந்திரகுமார்  அவர்களுக்கு மூளை அறுவைச் சிகிச்சை நடைபெற இருக்கிறது. அப்போது அங்கு வந்த மருத்துவர், ‘‘கடவுளை நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள், சார்’’ என்றார்.

உடனே இவர், ‘‘நான், கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று சொல்கின்ற வன்’’ என்று சொன்னார்.

அறுவை சிகிச்சை செய்ய வந்த மருத்துவரோ, பூசாரி போன்று நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டிருந்தார்.

இன்றைக்கு முருகா, முருகா, முருகா என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், சென்ற முறை, முருகனுடைய ஆயுதமான வேலைத் தூக்கிக் கொண்டு வந்து, நாடு முழுவதும் சுற்றி வந்தார்கள். ஆனால், அவர்களுடைய வேலை நடக்கவில்லை.

மக்கள் என்ன கேட்டார்கள், ‘‘எங்களுக்கு வேலை கொடு, வேலை கொடு என்று கேட்கிறோம்; ஆனால், நீ வேல் எடுத்துக்கொண்டு வந்து, வேலைக் காட்டு கிறாயே’’ என்றார்கள்.

சென்ற தேர்தலில், முருகனின் வேலை எடுத்துக் கொண்டு சுற்றி வந்தாரே, அவர் மட்டுமாவது தேர்தலில் வெற்றி பெற்றாரா? என்றால், அதுவும் இல்லை.

ஆகவேதான், நிச்சயமாக நீங்கள் வித்தை காட்டலாம்; அந்த வித்தைகள் மக்களிடம் எடுபடாது.

நீங்கள் என்ன வித்தைகள் காட்டினாலும், தமிழ்நாடு பெரியார் மண் – இந்தப் பெரியார் மண், ஒருபோதும் வடநாட்டில் இருக்கக் கூடியவர்களை ஏற்காது.

நாங்கள் ஒரு கேள்வி கேட்கிறோம், அதற்குப் பதில் சொல்லவில்லையே!

இன்றைக்கு முருகன் பக்தர்கள் மாநாடு – ஆறுபடை வீடு என்பதெல்லாம் இப்போதுதான் தெரிகிறதா?

வடநாட்டில், ஆறு படை வீட்டை நடத்தியிருக்கி றீர்களா? கண்காட்சியை நடத்தியிருக்கிறீர்களா? ‘‘ராம், ராம்’’ என்று சொல்லித்தானே, ராமருக்குக் கோவில் கட்டியிருக்கிறீர்கள். முருகனுக்கு வடநாட்டில் எங்கேயாவது கோவில் கட்டியிருக்கிறீர்களா?

தவறிப் போய், அங்கே முருகன் கோவில் இருக்கி றது என்று சொன்னாலும், முருகன் என்கிற வார்த்தை இருக்காதே! அதற்குப் பதில், ‘சுப்பிரமணிய சாமி’ என்றுதானே இருக்கும். அதனை ஆரிய மயமாக்கினார்கள்.

அரசியல் புரோக்கர் போன்று வந்த சுப்பிரமணியசாமியே இப்போது ஓய்ந்து போய்விட்டார். அந்தப் புரோக்கருக்கு இப்போது செல்வாக்கில்லை. சென்னையில் இருக்கின்ற ஓர் ஆடிட்டர் புரோக்கருக்குத்தான் அதிக ‘கிராக்கி!’

அதற்கடுத்தபடியாக வடநாட்டில் ‘ஸ்கந்தன்’ என்றுதான் சொல்வார்களே தவிர, முருகன் என்று சொல்லமாட்டார்கள்.

இங்கே ஆறுபடை வீடு செட் எதற்காக?  திருப்ப ரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தலாம் என்று முயற்சி செய்தார்கள். ஆனால், அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் சேர்ந்து, மதத்திற்குட்பட்டவர்கள், மதத்திற்கப்பாற்பட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து, ‘‘நாங்கள் இங்கே அமைதியாக வாழ்ந்து கொண்டி ருக்கின்றோம்; இங்கே நீங்கள் கலவரம் உண்டாக்கலாம் என்று நினைக்காதீர்கள்’’ என்று உறுதியாகச் சொல்லி, விரட்டியடித்துவிட்டார்கள்.

தமிழ்நாடு பெரியார் மண் – இந்தப் பெரியார் மண்ணில், மதக்கலவரத்தை உண்டாக்க முடியாது.

தேர்தல் வழக்கு நடைபெறும்போது, சாட்சியங்களைக் கலைப்பதுபோன்று, ஆவணங்களையெல்லாம் அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள். அது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

எனவேதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக் கூடிய கூட்டணி – இந்த இயக்கம், மக்களை நம்புகிறது.

ஊடக முதலாளிகள் எல்லாம், ஒன்றிய பா.ஜ.க. விற்கு ஆதரவாளர்களே! ஊடகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ‘‘இவருக்கு வரப் போகிறது மந்திரி பதவி; பேசிவிட்டார்கள்’’ என்று திடீரென்று செய்தியை வெளியிடுவார்கள்.

தி.மு.க.விலிருந்து அந்தக் கட்சிப் போய்விட்டது; இந்தக் கட்சிப் போய்விட்டது என்று பரபரப்பாக செய்தி வெளியிடுவார்கள்.

எங்கேயும், எந்தக் கட்சியும் போகாது; இது பெரியார் மண்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்று சேர்ந்த தி.மு.க. கூட்டணியை, உங்களால் இதுவரையிலும் ஆட்ட முடியவில்லை; அசைக்க முடியவில்லை.

அதனால், யூகத்தின் அடிப்படையில், ‘‘இவர் அதிக இடம் கேட்பார்; அவர் அதிக இடம் கேட்பார்’’ என்று செய்தி வெளியிடுகின்றனர்.

அதெல்லாம் அவர்களுடைய பிரச்சினை. அவர்கள் அதிக இடம் கேட்டால், கூட்டணியை விட்டு வெளியே போய்விடுவார்களா?

ஆகவேகதான், எப்படியெல்லாம் கலவரத்தை மூட்டிவிடலாம் – ‘‘சிண்டு முடித்தனத்தை’’ நிறைய செய்கிறார்கள்.

ஆனால், அவர்கள் இதைச் செய்ய செய்ய, அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல, நீங்கள் எவ்வளவுதான் தி.மு.க. கூட்டணியின்மீது அவதூறு பிரச்சாரங்களைச் செய்தாலும், அந்த அவதூறுகள் எல்லாம், தி.மு.க. கூட்டணி என்கின்ற வயலில் போடுகின்ற உரமாகும். அதனால், பயிர் செழுமையாக வளரும். அந்த வளர்ச்சிக்கு மிக அடிப்படையாக இருப்பது எதிர்ப்பு.

1971 இல் என்ன நடந்தது?

1971 ஆம் ஆண்டு, இராமரை செருப்பால் அடித்தார்கள் என்று சொல்லி, தேர்தலைச் சந்தித்தார்களே. அது திட்டமிட்டபடி நடந்த செயல் அல்ல.

வரலாறு தெரியாதவர்கள், அதற்குப் பிறகு பிறந்த தோழர்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் அன்று நடந்த உண்மை நிகழ்வை நான் சொல்கிறேன்.

ஊர்வலத்தில் பெரியார் வந்து கொண்டிருந்தார்;  பெரியாருக்குக் கருப்புக் கொடி காட்டுவதற்காக, அன்றைய ஜனசங்கத்தினர் அனுமதி வாங்கியிருந்தனர். அப்போதுகூட முதலமைச்சர் கலைஞரிடம், ‘‘என்னங்க, அவர்களைக் கைது  செய்யாமல், அனுமதி கொடுத்திருக்கிறீர்களே?’’ என்று கேட்டார்கள்.

உடனே கலைஞர் சொன்னார், ‘‘இது ஜனநாயக ஆட்சி என்பதற்காக மட்டும் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை; பெரியார் அவர்கள், கருப்புக் கொடியைப் பார்த்தாரென்றால், இன்னும் கொஞ்சம் வேகமாகப் பேசுவார்; கருப்பு அவரை மேலும் உற்சாகப்படுத்தும். அதனால்தான் அவர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கின்றோம்’’ என்று சொன்னார்.

அந்த ஊர்வலத்தில், இராமாயணப் பாத்திரங்களை உருவகப்படுத்தி வந்துகொண்டிருக்கின்றது. பெரியாரும் ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது அவரை நோக்கி செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பு, ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த தோழர்கள்மீது விழுந்தது.

அந்தக் கோபத்தினால்தான் ஒரு தோழர், விழுந்த செருப்பை எடுத்து, ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்ட இராமர் படத்தின்மீது அடித்தார்.

இதுதான் உண்மையில் நடந்த நிகழ்வு!

அதை நேரில் பார்த்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இரண்டு, மூன்று நாள்கள் எந்தப் பத்திரிகைகளிலும் அந்த நிகழ்வு வெளிவரவில்லை.

ஆனால், தோல்வி நெருங்க நெருங்க, அவர்கள் என்ன நினைத்தார்கள் தெரியுமா? அந்த நிகழ்வைப் பெரிதாக்க வேண்டும் என்று நினைத்து, ‘‘இராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு?’’ என்று பெரிய பெரிய விளம்பரப் பதாகைகளை அடித்து நாடெங்கும் ஒட்டினார்கள்.

பெரியார்தான் சொல்வார், ‘‘பாப்பானுக்கு எப்போதுமே பின்புத்திதான்’’ என்று.

அதுபோன்று, நடைபெறாத ஒரு சம்பவத்தைப் பெரிதுபடுத்தி, தமிழ்நாடு முழுவதும் விளம்பரப்படுத்தி னார்கள். தேர்தல் முடிவு என்னாயிற்று தெரியுமா?

அதற்குமுன் தி.மு.க. தொகுதிகளின் எண்ணிக்கை 132. இந்தப் பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்ட பிறகு, 184 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது.

தி.மு.க. வரலாற்றிலேயே அதிக இடங்களில் வெற்றி பெற்ற வரலாறாக அன்றைக்கு அது இருந்தது. அதற்குப் பிறகு அந்தச் சாதனையை இப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றினார். 40-க்கு 40 இடங்களிலும் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு வந்தது.

கோவில்களுக்குச் செல்கின்றவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் என்பதை வைத்துக் கொண்டு,  எதையும் முடிவு செய்துவிட முடியாது.

பெரியாரால், திராவிட இயக்கத்தால் என் பெண், மகன் படித்தார்கள் என்று சொல்கிறவர்கள் நிறைய உண்டு. திராவிட இயக்க ஆட்சியால்தான் நாங்கள் எல்லாம் டாக்டர்களாக ஆகியிருக்கின்றோம் என்று சொல்கிறவர்களும் நிறைய உண்டு.

ஆகவே, நண்பர்களே! இந்த இயக்கம், இந்தப் புத்தகங்கள், இந்த ஏடுகள் அனைத்தும் மக்களுக்கு அறிவு கொளுத்துவதற்காகவே – மாறாக வருவாய்க்கல்ல.

இங்கே நடைபெறுகின்ற நிகழ்வு என்பது, ஓர் அரங்கத்தினுள் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்கவேண்டாம். உலகம் முழுவதும் உள்ள வர்கள் பெரியார் வலைக்காட்சியின் மூலமாக இந்நிகழ்வை கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

இது எப்படிப்பட்ட இயக்கம் என்பதை ஒரு சிறிய உதாரணத்தோடு என்னுரையை முடிக்கின்றேன்.

நம்மைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில், சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலகட்டத்தில், அப்போது நடைபெறுகின்ற கூட்டங்களில் ‘‘ஒலிபெருக்கி உண்டு’’ என்று அழைப்பிதழில் அச்சிட்டிருந்தால், அது பெரிய தலைவர்கள் உரையாற்றவிருக்கின்றார்கள் என்று அர்த்தம்.

கடைவீதி நடுவே ஒருவர் கழுத்தில் தமுக்கை மாட்டிக்கொண்டு, தமுக்கை அடித்துக்கொண்டு, ‘‘சுயமரியாதை சங்கக் கூட்டம் நடைபெறவிருக்கின்றது இன்று மாலை; அக்கூட்டத்தில் பொன்னம்பலனார் பேசுவார்’’ என்று சொல்லிக் கொண்டு தமுக்கை அடிப்பார்.

இன்னொரு இடத்தில், ‘‘பட்டுக்கோட்டை அழகிரி பேசுவார்’’ என்று தமுக்கை அடித்துச் சொல்வார்கள்.

கூட்டம் நடைபெறும் இடத்தில், மாலையில் கூட்டம் சேர்ந்துவிடும்.

எதிர்ப்புகளைச் சந்தித்து எழுந்த இயக்கம்!

கடவுள் இல்லை என்று சொல்கின்றவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்று சென்று பார்ப்போமே என்பதற்காக,  கேலி செய்வது, கல்லெறிவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களும் உண்டு.

கூட்டத்தில் பேசுகின்றவரைப் பார்த்ததும், ‘‘இவரை எங்கோ பார்த்திருக்கின்றோமே என்று ஒருவர் சொல்வார்; ஆமாம் என்று இன்னொருவரும் சொல்வார்.

யோவ், காலையில், கடைவீதியில் தமுக்கடித்து, இக்கூட்டம் நடைபெறுகின்றது என்று சொன்னானே, அவன்தான், இவன் என்று சொல்வார்.

எனவே, தமுக்கடித்து, தெருமுனையில் பேசி, மேடையில்  ஏறிப் பேசி, அதற்குப் பிறகு எந்த அளவிற்கு வந்திருக்கின்றோம் தெரியுமா?

ஜூம் அளவிற்கு வந்தாயிற்று?

எல்லோரும் வீட்டில் அடைந்து கிடந்தபோது, வெளியில் நடமாட முடியாது – கரோனா நோய் தொற்று காலகட்டத்தில்.

அப்போது முதன்முதலாக ஜூம் கூட்டம் மூலமாக பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினோம் நாம்; அந்த ஜூம் கருவியை முருகன் கண்டுபிடித்ததல்ல! விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது.

இன்றைக்கு இந்தக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருப்பதை ஆஸ்திரேலியாவில் உள்ளவர், சிங்கப்பூரில் உள்ளவர், ஜப்பானில் உள்ளவர்கள் கேட்கிறார்கள். இங்கே நண்பர்களும் இந்நிகழ்வை பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள்.இதற்கெல்லாம் காரணம், அறிவியலின் கண்டுபிடிப்புதான்.

இதற்கு எவ்வளவு மதிப்பு என்றால், வீடியோ சாட்சியத்தை உச்சநீதிமன்றம் வரை ஒப்புக்கொண்டி ருக்கின்றது.

திருமணத்தில் சொல்லப்படுகின்ற அக்னி சாட்சியாக, முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக என்றெல்லாம் சொல்லப்படுகின்ற சாட்சிகளைவிட, வீடியோ சாட்சி என்பதுதான் வழக்கில் சாட்சியாக ஏற்றுக் கொள்வார்கள்.

ஆகவே, அறிவியல் வென்றிருக்கிறது. அந்த அறிவியல் மனப்பான்மைக்குத்தான் இந்தப் பத்திரிகைகள். மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காகத்தான் இந்தப் பத்திரிகை.

பெண்ணடிமையை நீக்குவதற்குத்தான் இந்தப் பத்திரிகைகள். இன்றைக்குப் பெண்கள் விண்வெளி யிலே பறக்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில், அரச மரத்தை சுற்றிக் கொண்டிருந்த ஒரு சமுதாயம், இன்றைக்கு விண்வெளியில் பறக்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்ற காலகட்டத்தில், இன்னமும் நான் தேர் இழுப்பேன் என்று சொன்னால், அவர்களுக்கு அறிவு வளரவேண்டாமா? என்று கேட்கக்கூடிய பத்திரிகைகள்தான் இவை.

எனவே, சுயமரியாதை இயக்கம், இந்தக் கொள்கைகள், இந்தப் புத்தகங்கள் எல்லாம், அறிவு விடுதலைக்காகத்தான்.

எங்களுக்காகவோ, வியாபாரத்திற்காகவோ அல்லது பெரியாருடைய பெருமைகளைச் சொல்வதற்காகவோ அல்ல.

நாங்கள் எதையும் விரும்பாதவர்கள். உங்கள் சந்ததிகள் படிக்கவேண்டும்; அப்படி படித்தவர்களுக்குச் சமூகநீதி கிடைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, அதனைச் செய்யக்கூடிய ஓர் ஆட்சியை நாம் பாதுகாக்கவேண்டும். இல்லையானால், நம் கண்களை நாமே குத்திக் கொண்டதுபோலாகும்; நம் தலையை, நாமே கொள்ளிக் கட்டையை எடுத்துச் சொறிந்து கொள்வதுபோன்றதாகும்.

ஒருபோதும் மக்கள் ஏமாறமாட்டார்கள்; அவர்கள் எந்த வித்தைகளை செய்தாலும் அது எடுபடாது.

நாங்கள் எல்லாம் எல்லா ஊர்களுக்கும் சென்று, வெளிப்படையாக உரையாற்றுவோம்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் யாரையாவது உங்களுக்கு அடையாளம் தெரியுமா? மற்ற தலைவர்களையெல்லாம் தெரிந்த உங்களுக்கு, ஏன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைத் தெரியாது.

அதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

ஆகவேதான், அப்படிப்பட்டவர்கள் கடவுள், கோவில், திருவிழா என்கிற திசை திருப்பல்களைக் கொண்டு வருகிறார்கள். நம்முடைய மக்களுக்குத் திருவிழாக்களையும் கொண்டாடத் தெரியும். தெளிவாக ஓட்டளிக்கவும் தெரியும்.

பெரியார் பங்கேற்ற கடைசி கூட்டமான தியாகராயர் நகரில் நடைபெற்றபோது, ‘‘நான் இறந்து போவதுபற்றி கவலைப்படவில்லை. ஆனால், உங்களையெல்லாம் சூத்திரன் என்ற பட்டத்தோடு விட்டுவிட்டுப் போகி றேனே என்பதால்தான் எனக்குக் கவலை’’ என்று, அய்யோ, அம்மா என்று வலியோடு துடித்துக்கொண்டே!

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்பு!

ஆனால், அந்த இழிவை நீக்கி, இன்றைக்கு எல்லோரும் சமம் என்று ஆக்கிய ஒரே ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய, ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி.

அந்த ஆட்சியை, இந்தியா மட்டுமல்ல, உலகமே போற்றுகிறது; ஆட்சியைப் பின்பற்றுகிறது.

என்றைக்காவது பெண்களுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு, வசதி வந்ததுண்டா?

அதனால்தான், நம்முடைய பண்பாட்டையே மறைக்கிறார்கள். கீழடி ஆய்வறிக்கையை சமர்ப்பித்த வரை, தூக்கிப் பந்தாடலாம் என்று நினைக்கிறார்கள்.

இந்தச் சில்லுண்டித்தனம், சில்லறைத்தனம், விஷமத்தனம், வித்தைகள், ஏமாற்று வேலைகள்தான் மிஞ்சுமே தவிர, வேறொன்றுமில்லை.

எனவேதான், நீங்கள் எத்தனைக் கடவுள்களை நம்பினாலும், கடவுள் வேறு; ஓட்டு வேறு என்பது மிகத் தெளிவாக இன்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஒன்றில் நாங்கள் வெற்றி பெற்று இருக்கின்றோம். முருகன் பக்தர்கள் மாநாடு என்பது, முருகனுக்காக அல்ல; தேர்தலுக்காகத்தான் என்று சொன்னோம்.

இன்று அவர்களே, தேர்தலுக்காகத்தான் என்று ஒப்புக்கொண்டு விட்டார்கள், அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலமாக.

எனவே, இந்த நூல்கள், இந்தப் பத்திரிகைகள் எல்லாம்  பாடுபட்டதினுடைய விளைவு என்பது, சரியான இலக்கை மக்கள் அடைந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவேதான், எவ்வளவு பெரிய தொற்று நோய்கள் வந்தாலும், அவற்றைத் தடுப்பூசிகளால் தடுத்துக் கொண்டிருக்கின்றோமோ, அதுபோல, தடுப்பூசி மருத்துவங்கள்தான் இந்த ஏடுகளும், புத்தகங்களும்!

அவை பரவவேண்டும் என்பது, நோயாளியினுடைய நோய் தீருவதற்காகத்தானே தவிர, மருத்துவரின் வருமானத்திற்காக அல்ல.

அது இழப்பைப்பற்றி கவலைப்படவில்லை. இது தொழில் அல்ல தொண்டு.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *