புதுடில்லி, ஜூன் 22- காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியாகாந்தி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
காசாவில் ஏற்பட்ட பேரழிவு குறித்தும், தற்போது ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும் இந்திய அரசு அமைதி காப்பது நமது தார்மீக மற்றும் ராஜதந்திர வழக்கங்களை விட்டு விலகுவதற்கு சமமாகும். இது நமது குரல் மட்டுமின்றி, நமது மதிப்புகளையும் இழப்பதைப் போன்றதாகும்.
பேரழிவு விவகாரம்
இத்தகைய மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ள சூழலில், இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரத்தில் ‘இரு-நாடு’ தீர்வுக்கான இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டை பிரதமர் மோடி அரசாங்கம் கைவிட்டுவிட்டது.
இந்த விவகாரத்தில் இனிமேலும் தாமதிக்காமல் இந்தியா தெளிவாக தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மேற்கு ஆசியாவில் பதற்றத்தை தணித்து, பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும்.
கடந்த 13ஆம் தேதி, ஈரான் மற்றும் அதன் இறையாண்மைக்கு எதிராக இஸ்ரேல் சட்டவிரோதமான தாக்குதலை தொடங்கிய போது, ஒருதலைப்பட்ச ராணுவ தாக்குதலின் ஆபத்தான விளைவுகளை உலகம் மீண்டும் ஒரு முறை கண்டது. இது பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஈரானில் நடந்த இந்த குண்டுவெடிப்புகளையும், படுகொலைகளையும் காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் ஈரான் உறுதியான ஆதரவை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.
தார்மீகப் பொறுப்பு
இந்தியா – இஸ்ரேல் இடையிலான இருதரப்பு உற உறவு, போர் பதற்றத்தை தணித்து, அமைதிக்கு வழிவகை செய்ய உதவும் தார்மீக பொறுப்பை நமக்கு வழங்கு கிறது. இது சாதாரண கொள்கை மட்டுமல்ல. லட்சக்கணக்கான இந்திய மக்கள் மேற்கு ஆசியா முழுவதும் வேலை செய்கின்றனர். எனவே அந்த பிராந்தியத்தில் அமைதி நிலவுவது நமது தேச நலன் சார்ந்த விஷயமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.