சென்னை, ஜூன் 22- தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வருகிற 27ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.
மழை வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை இன்று (22.6.2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நேற்றைய நாள் தமிழ்நாட்டின் 5 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் 106.7 டிகிரி பாரான்ஹீட், மதுரை 104.36 டிகிரி பாரான்ஹீட், ஈரோடு 101.48 டிகிரி பாரான்ஹீட், பாளையங்கோட்டை மற்றும் பரங்கிப்பேட்டையில் 100.4 டிகிரி பாரான்ஹீட் என வெயில் பதிவாகியுள்ளது.