அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?

1 Min Read

பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக் மகாநாட்டில் பேசிய பம்பாய்த் தலைவர் சர். பிரோஸ் சேத்னா, அம்மகாநாட்டுக்குத் தலைமை வகித்த சர். கே.வி.ரெட்டி நாயுடுகாரு அவர்களைப் பாராட்டிப் பேசுகையில் சென்னை ஆக்டிங் கவர்னர் பதவியை அவர் வெகு திறமையாக நிர்வகித்து, அகில இந்தியப் புகழ்பெற்று விட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், இந்த விஷயத்தை வழக்கப்படி “தேசிய” தினசரியான “ஹிந்து’’வும் அபேதவாத தினசரியான ‘இந்தியன் எக்ஸ்பிரசும்‘ பிரசுரம் செய்யவே இல்லை. யோக்கியப் பொறுப்புள்ள எந்தப் பத்திரிகையும் இம்மாதிரி செய்திகளை மறைக்கவே செய்யாது. கட்சி வித்தியாசம் பாராட்டாமல் சகல கட்சிச் செய்திகளையும் பிரசுரம் செய்ய வேண்டியதே பொறுப்பு வாய்ந்த பத்திரிகைகளின் கடமையென, பண்டித ஜவஹர்லால் சமீபத்தில் சென்னைக்கு விஜயம் செய்திருந்த போது ஒரு பத்திரிகைக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பிரஸ்தாப விஷயம் கட்சி சம்பந்தமானதுமல்ல. ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவர் மற்றொரு இந்தியப் பிரமுகரைப் புகழ்ந்து பேசிய பேச்சை அந்த இரண்டு பத்திரிகைகளும் அமுக்கி விட்டது, மிகவும் கேவலமான செயலாகும். தேசியமும், சமதர்மமும் பேசும் அப்பத்திரிகைகள் உண்மையில் வகுப்புவாதப் பத்திரிகைகளாக இருப்பதை தேச மக்கள் இப்பொழுதாவது உணர்வார்களாக!

– ‘விடுதலை’ – 12.11.1936

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *