முன்கூட்டியே நடவடிக்கை சென்னையில் 30 ரவுடிகள் கைது

Viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 21-  புளியந் தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட வடசென்னையின் முக்கியப் பகுதிகளில் காவல் துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில், ஒரே நாளில் 29 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், புளியந்தோப்பு காவல் சரகத்தில் மட்டும் 15 ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையின் வடக்கு பகுதிகளில் ரவுடிகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரத்துக்கொண்டே வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள காவல் நிலையங்களில் பதிவாகும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு வந்தனர். இந்நிலையில், வடசென்னையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையில் காவல் துறையினர் இறங்கினர்.

இதில், புளியந்தோப்பு பகுதியில் மட்டும் சுமார் 15 பேரை காவல் துறையினர் நேற்றிரவு (20.6.2025) கைது செய்தனர். அதன்படி, விஜய் என்கிற புலிப்பாண்டி (வயது 20), எம்.கே.பி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (வயது 23), கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் பூச்சத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண் என்கின்ற 220 அருண் (வயது 30), ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஓட்டேரி ஸ்டிபன்சன் ரோடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கின்ற பரோட்டா சீனி (வயது 27) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது19), மணி கண்டன் என்கின்ற கருப்பாமணி (வயது 36), சரத் என்கின்ற சரத்குமார் (வயது 26), மணிகண்டன் என்கின்ற பல்லு மணி (வயது 20), அந்தோணி (வயது 19) என 5 பேரை கைது செய்தனர்

இதே போன்று செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி கருணாநிதி சாலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்கிற பாங்கா (வயது 30), ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரமேஷ் என்கின்ற T ரமேஷ் (வயது 28), பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த ராயல் என்கின்ற ராஜேஷ் (வயது 23), சந்திரன் என்கின்ற எலிச் சந்திரன் (வயது 22) ,செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்து என்கின்ற ரவுடி முத்து (வயது 26) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த (ஜெயசீலன் வயது 31) என்ற நபரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதுதவிர, புதுவண்ணையில் 10 ரவுடிகள், பூக்கடை பகுதியில் 4 என வடசென்னை முழுவதுமாக 29 ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் சரித்திர பதிவேடு ரவுடிகள் என்பதால், தொடர்ந்து காவல் துறையினர் இவர்களை கண்காணித்து வந்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், ஒரே இரவில் தனிப்படை அமைத்து அவர்களை தூக்கியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 29 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *