ஆதிக்க வெறி, மதவெறி மேலோங்க நாடுகளுக்கிடையில்
போர்க் கருவிகளைப் பயன்படுத்தி மக்களைக் கொன்று குவிப்பதா?
நாகரிக உலகில்தான் நாம் வாழ்கிறோமா?
போர்க் கருவிகளைப் பயன்படுத்தி மக்களைக் கொன்று குவிப்பதா?
நாகரிக உலகில்தான் நாம் வாழ்கிறோமா?
ஆதிக்க வெறி, மதவெறி கொண்டு நவீன போர்க் கருவிகளைப் பயன்படுத்தி, மக்களைக் கொன்று குவிப்பது – நாகரிக உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்பதற்கு அடையாளமா? ‘‘போரற்ற உலகம்’’ – அமைதி – ஆக்கம் – மனிதம் பொங்கும் ‘‘போரற்ற புதிய உலகம்’’ காண்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உலகம் இன்று எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
அறிவியல் கண்டுபிடிப்புகள் ‘ஆக்கத்திற்குப்’ பயன்பட்டு, மனித குல வளர்ச்சியை மேலும் மேன்மைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலை ஒருபுறம்.
மறுபுறம் பல நாடுகளில் அறிவியல் கண்டு பிடிப்புகள் மனித குலத்தின் அழிவியலை நோக்கிப் பயணிக்கும் கொடுமையை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை.
சக்தி வாய்ந்த ஏவுகணைகளும், போர்க் கருவிகளும் இமை மூடித் திறப்பதற்குள் ஏவப்பட்டு, மக்கள் உயிர்கள் பறிக்கப்பட்டு, நாடு, நகரங்கள் ‘சுடுகாடுகளாக, இடுகாடுகளாக’ மாற்றப்படுவது ‘நவீன வேதனை’ அல்லவா?
ஆதிக்க வெறிக்கு
மனித உயிர்கள் பலியாவதா?
மனித உயிர்கள் பலியாவதா?
மதவெறியின் மயக்கம் மனிதநேயத்தை அறவே துரத்திவிட்டு, ஏதும் அறியா பச்சிளம் குழந்தைகள்கூட, பாலும், உணவுமின்றி பட்டினியாலும் மடிகின்றன.
குண்டு வீச்சு – திணிக்கப்பட்ட போர்களினால் மனித குலத்தின் மாண்பினையே பலி வாங்கி, கட்டடங்களை வெறும் கற்குவியல்களாகவும், மனித உயிர்கள் கூறு கூறுகளாக, வெறும் உடல் சவங்களாகி குவிந்து கிடப்பது கண்டு இரங்கா உள்ளம் மனிதத்தன்மையற்றது. ஆதிக்க வெறிக்கும், மதவெறிக்கும், பழிவாங்கும் போக்கிற்கும் மனித உயிர்கள் பலியாவது மகாமகா கேவலமான சமூகக் கொடுமை அல்லவா?
முன்பு, மத்திய கிழக்கு நாடுகளிலும், அய்ரோப்பா கண்டத்தில் ரஷ்யா – உக்ரைன் போரும் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றது. இப்போது இஸ்ரேல் நாட்டின் எல்லையற்ற வன்மமும், காஸா பகுதிவாழ் மக்களை மனித ஜீவன்கள் என்றே கருதாத இரக்கமில்லா மிருகத்தனமும் தாண்டவமாடுகிறது. அதையடுத்து, ஈரான்மீது ‘‘போர், போர்’’ என்று அழிவுக்கு வழிவகுக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதுபோன்று, ‘பதிலடி’ என்ற பெயரில், ஈரான் அணுசக்தி ஆற்றலைக் காட்டுகிறோம் என்று, ‘மனிதத்தை’ மறந்து, தன்முனைப்பு மலை மீது ஏறி, புதிய எச்சரிக்கைகள், எதிர் எதிர் சவால்களை விடுவது விரும்பத்தக்கதுதானா?
அறிவியல் உலகில் இது ஏற்கத்தக்கதா?
நாகரிக அறிவியல் உலகத்தில் இது ஏற்கக் கூடியதா?
அய்ரோப்பாவின் பழைய வரலாறு ‘மதப்போர்கள்’ என்ற தலைப்பில், crusades – பழைய பாடங்கள்.
அதன் வடு மாறிய நிலையில், மேலும் மேலும் மனித குலம் ரண களத்தில் ராஜ்ஜியம் நடத்துவதா?
மகாமகா வெட்கம்!
மற்றொருபுறம், சாவு வீட்டில் கொள்ளை யடிப்பதுபோல, ஆயுத விற்பனைகள்மூலம் கொழுத்த கொள்ளை லாபக் குபேரர்களாகி வருகின்றன, பல நாடுகள் பூமிப் பந்தில்!
அய்க்கிய நாடுகள் சங்கம் இருந்தும்
பயன் என்ன?
பயன் என்ன?
இஸ்ரேலின் இதயமற்ற போர் ‘காஸா’ பகுதியைத் தொடர்ந்து குறி வைத்து – திட்டமிட்டே மதவெறி அடிப்படையில் நடத்தப்படுகிறது. மற்றவர்களைக் குறி வைப்பதில் அமெரிக்க அதிபர் ‘டிரம்பை’விட தானடித்த மூப்பாக முற்றியவர் இஸ்ரேல் அதிபர்.விரைவில் ஜனநாயகத்தையே, உலக அமைதியையே புதைக் குழிக்கு அனுப்பினாலும் அதிசயமில்லை.
இந்த லட்சணத்தில் ‘‘அய்க்கிய நாடுகள் சபை’’ என்று ‘‘உலக நாடுகள் சங்கம்’’ (U.N.O.) என்ற ஓர் அமெரிக்காவின் கைப்பாவைபோல் அரசியல் பொம்மலாட்டம் ஆடும் வெட்கக்கேடு!
அதன் பங்கு என்ன?
வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதுதானா?
உலகம் கசாப்புக் கடையாகவும், சாவு மேடாகவும், பிணக்குவியல் மீது அமர்ந்து ஆலவட்டம் சுழற்று வதுதான் உயர் சாதனையோ!
கொடுமை! கொடுமை!!
‘புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!’’ என்றார் புரட்சிக்கவிஞர்.
‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?‘ எவ்வளவு நீளுவது!
அறிவும், அரசியலும், மனிதாபிமானம் என்பது பதுங்கு குழியிலா?
‘‘போரற்ற உலகம்’’ காண்போம்!
விடை காண ஒரு பொது அணி சேர்ப்பது – ‘‘போரற்ற உலகம்’’ என்று ‘‘அமைதி – ஆக்கம் – மனிதம்’’ பொங்கும் புதிய உலகம் காண சிந்திக்கவேண்டாமா?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.6.2025