சென்னை, ஜூன் 20 சென் னையில் பன்னாட்டு இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.90 சதவீதம் என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பங்களிப்பு
அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (ஐமா) சார்பில் 16-ஆவது பன்னாட்டு இயந்திர கருவிகள் கண்காட்சியான ‘ஆக்மி 2025 சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் நேற்று (19.6.2025) தொடங்கியது. 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவுக்கு கண்காட்சி அமைக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வை யிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.90 சதவீதம். அதில் குறிப்பிடும்படியாக, இந்திய அளவில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் நிறுவனங்களில் தமிழ்நாடு 3-ஆவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் 2.47 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 14 தொழிற்பேட்டைகள் உருவாகியுள்ளன.
மோட்டார் வாகன உற்பத்தி, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் முதல் இடத்தை யும், ஜவுளி இயந்திரங்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 2-ஆம் இடத்தையும் தமிழ்நாடு பிடித்துள்ளது.
நாட்டில் உள்ள பதிவு செய்யப் பட்ட 14.90 லட்சம் பெண் தொழி லாளர்களில் 6.30 லட்சம் பேர் (42 சதவீதம்), தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர். கடந்த 2024-2025-ஆம் ஆண்டில் 30.50 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்து, இந்திய அளவில் தமிழ்நாடு 3-ஆம் இடம் பிடித்துள்ளது. சுய வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 59,915 புதிய தொழில் முனைவோருக்கு ரூ.2,031 கோடி மானியத்துடன் ரூ.5,210 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தொழில் துறை வளர்ச்சி
கடன் உத்தரவாத திட்டம் மூலம் 42,278 எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.7,578.53 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிதி ஆண்டில் இத்துறைக்கு ரூ.1918.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ரூ.3617.62 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் எம்எஸ்எம்இ துறைக்கு இதுவரை ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக, ‘அய்மா’ தலைவர் சதீஷ்பாபு பேசும்போது, “அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மூலதன உற்பத்திகள், வாகன உதிரி பாகங்கள், பொறியியல் பொருட்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவ னங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். ஆனால், தொழிற்பேட்டை யில் போதிய இடவசதி இல்லை. எனவே, இதன் அருகே 50 கி.மீ. சுற்றளவுக்குள் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் ‘ஐமா’ உறுப்பினர்களுக்காக பிரத்யேக தொழிற்பேட்டையை அரசு உருவாக்கி தரவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்வில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செயலர் அதுல் ஆனந்த், சிட்கோ தலைவர் ஆ.கார்த்திக், கவுரவ பொதுச் செயலாளர் கே.தவ மணி,ஆக்மி கண்காட்சி தலைவர் பி.எஸ்.ரமேஷ், சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த 5 நாள் கண்காட்சி வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.