அறிய வேண்டிய பெரியார்

Viduthalai
7 Min Read

சுயமரியாதை

சுயமரியாதை இயக்கம் தோன்றிச் சுமார் மூன்று வருஷ காலத்திற்குள் தமிழ்நாட்டில் அது அனேகமாக ஒவ்வொருடைய கவனத்தையும் இழுத்திருப்பதோடு, இவ்வியக்க விஷயமாய் அனேகரைக் கூர்ந்து கவனிக்கும்படியும் கவலைப்படும்படியும் செய்து வந்திருக்கின்றது என்று சொல்லுவது மிகையாகாது.

இந்த இயக்கம் ஆரம்பமானது முதல் இதற்கு அனேக தத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டு இருந்தாலும், ஒருவாறு அவ்வளவையும் சமாளித்து வளர்ந்து கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

இதற்கு உதாரணம், இவ்வியக்க ஆரம்பகாலத்தில் காங்கிரஸ், இதைத் துவேஷ இயக்கமென்றும், பிறகு பார்ப்பனத் துவேஷ இயக்கமென்றும், பின்னால் தேசத் துரோக இயக்கமென்றும், பிறகு சர்க்கார் பிரச்சார இயக்கமென்றும், பிறகு வைணவ துவேஷ இயக்க மென்றும், பிறகு சைவத் துவேஷ இயக்கமென்றும், பிறகு நாஸ்திக இயக்கமென்றும், பிறகு நிரீச்சுவரவாத யக்கமென்றும் – மற்றும் அனேகர் அனேகவிதமாய் இதன்மீது பழி சுமத்தி, இதற்குப் பொதுமக்களிடம் எவ்வளவு தூரம் வெறுப்பும் துவேஷமும் ஏற்படச் செய்ய வேண்டுமோ அவ்வளவு தூரம் ஏற்படவேண்டி பலவழிகளிலும் பெரு முயற்சிகள் செய்தாகிவிட்டன என்றாலும்-இவ்வளவு செய்தும் இதன் முன்னேற்றம் சிறிதும் குந்தகப் படாமல் மேலும் மேலும் முன்னேறுவதைப் பார்க்கின்றபோது, இயக்க எதிரிகள் வேறு சமாதானம் சொல்ல முடியாமல், இது இனி எத்தனை நாளைக்கு நிற்கப்போகின்றது? அப்பேர்ப்பட்ட ஒத்துழையாமை இயக்கமே பழங்கதையாய் விட்டது, இதுதானா வாழப் போகின்றது! ஏதோ பார்ப்பனர்கள்மீது நமது நாட்டு மக்களுக்கு இருக்கும் துவேஷத்தினால் சிலர் ஆதரிக்கின்றார்கள். நாயக்கருக்கு இருக்கும் சொந்த செல்வாக்குக்கும் அரசாங்க செல்வாக்குக்கும் பயந்து சிலர் ஆதரிக்கின்றார்கள். இதெல்லாம் எத்தனை நாளைக்கு நிற்கும்!” என அம் மாதிரியாகச் சொல்லிக்கொள்வதன் மூலம் தங்கள் பொறாமையை ஒருவாறு திருப்தி செய்து கொள்வதோடு, இரகசியமாய்த் தங்களால் கூடிய கெடுதியையும் செய்துகொண்டே வருகின்றார்கள் என்பதும்-இவ்வளவையும் தாண்டி தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு முக்கிய இடத்திலும் மற்றும் வெளியிடங்களிலும் சுயமரியாதைச் சங்கங்களும், மகாநாடுகளும், பிரச்சாரங்களும் நடந்துவருவதும், அதன் கொள்கைகளில் பல சற்றும் எதிர்ப்பின்றிக் காரியத்தில் அனுஷ்டிக்கப்படுவதுமே போதுமான உதாரணங்களாகும்.

கடவுள் பிறந்த நாளையும் மறுபடியும் உயிர்த்து எழுந்த நாளையும் கொண்டாடக் கூடாது என்று சொல்லுவதும், சர்க்கார் மூலமாகவே அவற்றைப் பிரச்சாரம் செய்வதும் அங்கு நாஸ்திகம் என்று கருதப்படுவதில்லை.

அது மாத்திரமல்லாமல், இப்போது எந்தவிதமான மகாநாடு எங்கு நடந்தாலும் சுயமரியாதைக் கொள்கைகள் கொண்ட தீர்மானங்களேதாம் நிறைவேற்றப்பட்டு வருவது டன் சமூக மகாநாடு, சமரச மகாநாடு, பெண்கள் மகாநாடு, பார்ப்பனரல்லாதார் மகா நாடு சீந்திருந்த மாநாடு-ஏன், சில அரசியல் மகாநாடுகள் ஆகியவைகளிலெல்லாம் மேற் கண்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த இயக்கத்திற்கு ஆதாரமாக, ரஷ்யா, ஜப்பான், சைனா, துருக்கி, ஈஜிப்ட், ஆப்கானிஸ்தானம் முதலிய நாடுகள் வழிகாட்டியும் வருகின்றதைப் பார்த்தால், அவ்வியக்கம் தளர்ந்துவிடும் என்றோ மறைந்துவிடும் என்றோ நினைப்ப வர்கள் கண்டிப்பாய் ஏமாந்துவிடுவார்கள் என்பது தெளிவாகாமல் போகாது. அன்றியும், நமது நாட்டு அரசியல் தலைவர்கள் என்பவர்களும் அனேகமாக இக் கொள்கைகளை உச்சரிப்பதின் மூலமாகவே செல்வாக்குப் பெறுவதையும் பார்க்கும்போது, இக் கொள்கைகளின் தத்துவம் எவ்வளவு மேன்மையானது என்பதும் விளங்காமல் போகாது. இவ்வளவும் இருந்தாலும், இவ்வியக்கத்திற்கு ஒரு நிலையான ஸ்தாபனமும் பிரச்சார பலமும் ஏற்படுத்தவேண்டியது மிகவும் முக்கியமான வேலை என்று நமக்குப் படுகின்றது.

மேல்நாடுகளிலும் ஒவ்வொரு தேசத்திலும் இக் கொள்கைகள் கொண்ட இயக்கம் அதிகமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டு வெகு விரிவான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. உதாரணமாக, லண்டனில் R. P. A’ என்னும் பகுத்தறிவாளர்கள் சங்கமும், அமெரிக்காவில் *பிரீ திங்கர்ஸ் அசோசியேஷன்’ என்னும் ‘தாராள எண்ணக்காரர்கள்’ (அறிவு எவ்வளவு தூரம் செல்லுமா அவ்வளவு தூரம் செலுத்துவது) என்கின்ற சங்கமும், ரஷ்யாவில் ஆன்டி காட் சொசைட்டி) (கடவுள் உற்சவம், வணக்கம் ஆகியவை அவசியமில்லை) என்கின்ற (ரஷ்ய கவர்ன்மெண்டாராலும் ஆதரிக்கப்பட்ட) சங்கமும், சைனாவில் ‘யங் சைனீஸ்’ அதாவது ‘வாலிப சைனாக்காரர்கள்’ என்கின்ற சங்கமும், மற்றும் ஆப்கானிஸ் தானம், துருக்கி முதலிய சர்க்கார்களால் அனேக இடங்களில் குருட்டு நம்பிக்கைகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் ஒழிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

அதுபோலவே, நமக்கு நமது அரசாங்கம் அடியோடு நமது இயக்கத்தின் சுவாதீனத்திற்கு வருமளவும் அதாவது,சுயமரியாதை அரசாங்கம் ஏற்படும்வரை-நமக்குத் தக்க ஆஸ்பதம் வேண்டியிருக்கின்றது. அனேகமாய் இவற்றை உத்தேசித்தே அடுத்த மாதம் 2ஆவது, 3ஆவது வாரவாக்கில் செங்கற்பட்டில் தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு நடக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கின்றது. அம் மகா நாட்டிற்கு ‘சைமன் கமிஷனும்’ அழைக்கப்பட்டிருக்கின்றது. மற்றும் அம் மகாநாட்டில் அனேக பெரியார்களும் செல்வாக்குக்காரர்களும் உண்மைத் தொண்டர்களும் செல்வந்தர்களும் பங்கெடுத் துக்கொள்ளச் சம்மதித்து இருக்கிறார்கள். இதுவரை சுமார் 10 ஆயிரம் ரூபாய் போல் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.

திருவாளர்கள் ராவ்பகதூர். எம். கே. ரெட்டியார்,
ஜி.ஜெயராம் நாயுடு காரு, கே.மி. மேனன், கண்ணப்பர் முதலியவர்களும் உழைக்க வருகின்றார்கள். சுமார் இருபத்தையாயிரம் மக்களுக்குக் குறையாமல் கூடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இம் மகாநாட்டிற்கு வந்து சில தீர்மானங்களை எதிர்க்கவேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சிலர் இரகசியமாய் கட்சி சேர்ப்பதாகவும் தெரியவருகின்றது. எப்படியானாலும்சரி, நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. நமது நிலைமையையும், உண்மையென்று நாம் நினைப்பதையும் வெளிப்படுத்தி, அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் நடத்த ஒரு பலமான ஸ்தாபனமும், பிரச்சாரமும் ஏற்படுத்தவேண்டும் என்பதுநான் நமது கவலை.

ஆதலால், நாட்டின் சேமத்திலும் மக்களின் முன்னேற்றத்திலும் கவலையுள்ள மக்கள் யாவரும் அங்கு வந்து கூடி, தங்கள் கடமையைச் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தங்கள் மனைவி மக்களுடனேயே வரவேண்டியது மிகவும் அவசியமானது என்பதை மிகவும் அழுத்தமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தனிப்பட்ட பெண்களும், தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வரவேண்டுமென கேட்டுக் கொள்ளுகிறோம். தவிர, அரசாங்க உத்தியோகஸ்தர்களும் அதிகாரிகளும் கண்டிப்பாய் வர வேண்டியது அவசியமாகும் என்று தெரிவிப்பதோடு, இந்த மகாநாடு எவ்வழியிலும் அரசியல் மகாநாடு என்பதல்ல என்றும் அவர்களுக்கு உறுதி கூறுகின்றோம். அன்றியும், அரசாங்க சட்ட மெம்பர் திவான்பகதூர் கனம் கிருஷ்ணநாயர் அவர்களும் மற்றும் பல பெரிய அதிகாரிகளும் வரச் சம்மதித்து இருக்கின்றார்கள்.

முக்கியமாக இம் மகாநாட்டில் யோசித்துத் தீர்மானிக்கப்படும் விஷயங்கள் யாவை என்றால்-சமத்துவம், சம உரிமை, சம சந்தர்ப்பம், சிக்கனம், அன்பு, இரக்கம், ஒழுக்கம் ஆகியவை ஏற்படவும்; குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்க வழக்கம், தீண்டாமை, பெண் அடிமை ஆகியவை எடுபடவும்; எளியோரை வலியோர் அடக்கி ஆளாமலும் பாமரர்களைப் படித்தவர்கள் ஏமாற்றாமலும், ஏழைகளைச் செல்வந்தர் கொடுமைப்படுத்தாமல் இருப்பதற்கும்; பகுத்தறிவு வளர்ச்சிபெறவும்; தன் முயற்சியில் நம்பிக்கை உண்டாகமான தன்மைகள் போன்ற விஷயங்களேதாம் அங்கு நடைபெறும். ஆகையால், இவைகளை அரசியல் விஷயமென்று யாரும் சொல்லமுடியாது. அரசியல் விஷயம் என்று ஏதாவது சொல்லவந்தால் அது மேற்கண்ட விஷயங்கள் நிறைவேறி அமுலுக்கு வர அரசாங்கத்தின் உதவி ஏதாவது வேண்டியிருந்தால் அந்த அளவுக்கு, -அதுவும் அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்க்கும் அளவுக்கு-ஏதாவது பேசப்படுமே ஒழிய வேறு ஒன்றும் நடை பெறாது என்று உறுதி கூறுகிறோம்.

ரஷ்ய தேசத்தில் கொஞ்ச நாளைக்கு முன்பிருந்த கடவுளைப்பற்றிப் பிரசங்கங்களோ, உபதேசங்களோ, வணக்கங்களோ அவசியமில்லை என்பதாக ஒரு சங்கம் ஏற்பட்டு, அது தாராளமாய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வருஷத்திய கிறிஸ்து பிறந்த நாளை உற்சவமாய்க் கொண்டாடக் கூடாது என்று வெகு பலமான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததில் முழுவதும் வெற்றியடைய முடியாமல் போனதால், அடுத்து வரும் ஈஸ்டர் உற்சவத்தை யாரும் கொண்டாடாமல் இருக்கும்படி இப்பொழுதிருந்தே வேண்டிய பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்கு அங்குள்ள சர்க்காரும் இந்த இயக்கக்காரர்களை அனுசரித்து உத்தரவு போட்டு, சர்க்கர் மூலமாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்காக அனேக பிரபுக்கள் இலட்சக்கணக்காக ரூபாய்கள் கொடுத்து உதவியிருக்கின்றார்களாம்.

எனவே, கடவுள் பிறந்த நாளையும் மறுபடியும் உயிர்த்து எழுந்த நாளையும் கொண்டாடக் கூடாது என்று சொல்லுவதும், சர்க்கார் மூலமாகவே அவற்றைப் பிரச்சாரம் செய்வதும் அங்கு நாஸ்திகம் என்று கருதப்படுவதில்லை.

நமது நாட்டிலோ, சாமி தாசி வீட்டிற்குப் போகும் உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! சமணரைக் சழுவேற்றும் உற்சவம் வேண்டாம் என்றார், அது நாஸ்திகம்! குடம், குடமாய் நெய்யையும் வெண்ணெயையும் கொண்டுபோய் நெருப்பில் போட்டு வீணடிக்கும் கார்த்திகைத் தீப உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! வெடி மருந்துக்கும் அடுப்புக் கரிக்கும் காசைப் பாழாக்கும் தீபாவளி உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! இளங் குழந்தைகளைப் பாலில்லாமல் கஷ்டப்பட வைத்து விட்டு, குடம் குடமாய்ப் பாலைக் கொண்டுபோய்க் கல்லின்மீது கொட்டும் பாலாபிஷேசு உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்!

அரசனிடம் குதிரை வாங்க என்று பணம் பெற்றுத் தன்னிஷ்டப்படி செலவழித்து விட்டு – அரசன் குதிரை எங்கே!’ என்று கேட்டால், நரியைக் கொண்டுவந்து குதிரை என்று காட்டி, அந் நரி அரசனுடைய பழைய குதிரைகளையும் கடித்துக் கொன்றுவிட்டதுடன் அரசனும் அடிபட்ட உத்சவமும் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! வேறு ஒரு மதக்காரர் (பவுத்தர்) கோவிலை இடித்து, விக்ரகத்தைத் திருடிக்கொண்டு வந்து உடைத்த உற்சவத்தை நடத்தவேண்டாம் என்றால் அது நாஸ்திகம்!

எனவே, நமது நாட்டுக்கு எந்தக் காரியம்தான் நாஸ்திகம் அல்லாததோ நமக்கு தெரியவில்லை.

(குடிஅரசு, தலையங்கம்-13-1-1929)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *