சென்னையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரால் முன்மொழியப்பட்ட இரண்டு தீர்மானங்கள்!

viduthalai
5 Min Read

தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தும்
கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக வெளியிடவேண்டும்!
தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்க!

சென்னை, ஜூன் 18– தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தும் அறிவியல்பூர்வமான கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக வெளியிடவேண்டும் என்றும், தொல்லியல் துறை அதிகாரி திரு. அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்யவேண்டும்  என்றும் இரண்டு தீர்மானங்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் முன்மொழிந்தார்.

இன்று (18.6.2025) சென்னை சைதாப்பேட்டை கலைஞர்  பொன்விழா வளைவு (பனகல் மாளிகை) அருகே, தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் முன்மொழியப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

இங்கே சிறப்பாக குழுமியுள்ள அருமைத் தலைவர்களே, தோழர்களே!  உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இங்கே இரண்டு தீர்மானங்களை மக்கள் மன்றத்தின் சார்பாக நாங்கள் அனைவரும் முன்மொழிகிறோம்.

தீர்மானம் 1:

கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக வெளியிடவேண்டும்!

‘‘தமிழர் வரலாற்றை திராவிடர் வரலாற்றை உறுதிப்படுத்தும் கீழடி ஆய்வின் முதல் இரண்டு கட்ட அறிக்கைகளை வெளியிட மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

உலகளாவிய ஆய்வு நிறுவனமும், இந்தியாவினுடைய முதன்மை ஆய்வு நிறுவனமும் ஒப்புக்கொண்டு, அதன் காலத்தை, அறிவியல் பூர்வமாகக் குறிப்பிட்டுள்ள பின்னும், அதை ஏற்க முடியாது; போதிய ஆதாரம் இல்லை என்று கூறுவது, ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. அரசினுடைய உள்நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை ஏற்க முடியாது என்ற அடாவடி செயலை– தமிழர்கள் என்றும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அறிவியல்பூர்வமான கீழடியில், தொல்லியல் அக ழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக  வெளியிடவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.’’

தீர்மானம் 2:

தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்ய

‘‘தமிழ்நாட்டின் தொன்மையை, தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றை நிறுவிய, கீழடி தொல்லியல் அகழாய்வை மேற்கொண்ட, தொல்லியல் துறை அதிகாரி திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது. முன்பு, அசாமிற்குத் தூக்கியடித்தது. பிறகு, மற்றொரு இடத்திற்கு மாற்ற முனைந்தது.

தற்போது டில்லியில் பணியாற்றி வந்த நிலையில், இப்போது நொய்டாவிற்கு அவரை மாற்றியிருக்கிறார்கள்.

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட மறுக்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கும் சூழலில், எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல, அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிட மாற்றத்திற்கு ஆணையைப் பிறப்பித்திருப்பது, அவருக்குத் தண்டனை கொடுத்ததைப்போல இருக்கிறது என்று சொல்வதற்கு யாருக்கும் தயக்கம் இருக்க முடியாது.

எனவேதான், ஒன்றிய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கிற்கு இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தின்மூலம் வன்மை யானக் கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, அவருடைய பணியிடை மாற்றத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கோருகிறது.’’

ஆகிய இரண்டு தீர்மானங்களும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்த ஆர்ப்பாட்டத்தின்மூலமாக நிறைவேற்றப்படுகின்றன.

எழுச்சித் தமிழரின் வேண்டுகோளும் –
தமிழர் தலைவரின் வழிமொழிதலும்!

இங்கே எழுச்சித் தமிழர் சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.

கீழடி அகழாய்வைத் தொடருவதற்கு நிதி தரமாட்டோம்; ஆய்வை நிறுத்தவேண்டும் என்று சொல்லக்கூடிய ஓர் அடாவடி ஆளுநர் இங்கே இருக்கிறார். ஒன்றியத்தில், ஓர் அடாவடி அமைச்சரை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

‘‘தமிழ்நாட்டிலேயே, இனி ஏராளமான தொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய நிலையில், தொல்லியல் பொருள்களின் காலத்தைக் கணிக்கும் கரிம ஆய்வு மய்யத்தைத் (Carbon Dating Laboratory) தமிழ்நாட்டிலேயே அமைக்க தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும்’’ என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போது வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வரவேற்று, ‘‘முதலமைச்சர் அவர்கள் அந்த ஆய்வு மய்யத்தை மக்கள் ஆதரவோடு அமைக்க அறிவிக்க வேண்டும். 40 முதல் 45 கோடி ரூபாய் வரை அதற்குச் செலவாகும் என்று எழுச்சித் தமிழர் அவர்கள் சொன்னார்கள்.

தமிழ்நாட்டின் உணர்ச்சியுள்ள மக்கள் சார்பாக சொல்கி றோம், வீதிமன்றத்தின் சார்பாக சொல்கிறோம், நாளைக்கு ஓர் அறிக்கையை, முதலமைச்சர் என்ற முறையில் வேண்டாம்; இந்தக் கூட்டணியினுடைய தலைவர் என்ற முறையில் வெளியிடட்டும்.

மக்கள் பெரு மகிழ்வோடு நிதி வழங்குவார்கள். அவர்கள் வழங்கும் நிதி, மக்களின் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக அமையும். அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.’’

இதுவும் மாநில சுயாட்சியில் மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.

எனவே, சகோதரர் எழுச்சித் தமிழர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்; இந்தக் கூட்டமும் வழிமொழியும் என்று நம்புகிறேன்.

அனுமதி முத்திரைக் குத்தவேண்டுமே என்று சொன்னார் நம்முடைய எழுச்சித் தமிழர்.  அந்த முத்திரை இல்லாவிட்டாலும், நாம் போய்க்கொண்டே இருப்போம். மக்கள் கருத்தை முன்னால் திரட்டினால், சட்டம் நொண்டியடித்துக் கொண்டு தானே வரும் என்பதுதான் நடைமுறைப் பழமொழி.

மக்கள் அங்கீகாரத்தைக் காட்டுவோம்!

இதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம்.

ஒன்று, சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் சொன்னது. அதனால், அந்தத் திருமணங்களை நிறுத்திவிட்டார்களா? அதற்குப் பிறகு 10 ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன. பிறகு அண்ணா ஆட்சி, திராவிட ஆட்சி வந்தது, சட்டம் பின்னாலே நொண்டிக் கொண்டு வந்தது.

எனவே, சட்டம் பின்னால் வரும்; ஆனால், சமுதாயம் முன்னால் போகும்.

அதேபோன்று, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்; இன்றைக்குத் தமிழைப்பற்றி பேகிறார்களே பலர், யாரும் செய்யாத பணியை செய்த ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை 1935 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அறிவித்தார். அப்படி அறிவித்ததோடு நிற்கவில்லை; தன்னுடைய ‘குடிஅரசு’ ஏட்டில் அதனை முழுமையாகச் செயல்படுத்தினார். பிறகு ‘விடுதலை’யில் பயன்படுத்தினார்.

1935 ஆம் ஆண்டு தொடங்கியது, 50 ஆண்டுகள் கழித்து, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் என்றே வந்தது.

ஆகவேதான், இன்றைக்கு அவர்கள் ஒப்புக்கொள்கி றார்களா, இல்லையா? அங்கீகரிக்கிறார்களா, இல்லையா? என்பதைப்பற்றி கவலைப்படாமல், மக்கள் அங்கீகாரத்தை முதலில் நாம் காட்டுவோம்.

இந்தத் தீர்மானங்களை அத்துணை பேரும் வழிமொழிந்தீர்கள் என்பதற்கு ஆதாரமாக, எழுந்து நின்று கையொலி எழுப்பி, இதற்குப் பெருமைச் சேர்க்கவேண்டும்.

ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தோழர்களுக்கு நன்றி!

–  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் மத்தியில் நிதி திரட்டுவதை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் கே.வி.தங்கபாலு கட்சியின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *