மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 16- தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புத்தகங்கள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி, உதவித்தொகை என வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் நிலையில் டிஜிட்டல் கல்வியை அணுக முடியும். இலவசப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது.

மாணவர்கள் ஆர்வம்

பள்ளியில் சேர்ந்த முதல் நாளில் இருந்த இலவச பாட புத்தகங்கள், சீருடைகள் ,புத்தகப் பைகள், காலணிகள், வண்ண பென்சில்கள், கணித உபகரணங்கள் வழங்கப்படுகின்றது. அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வர அதிகளவு ஆர்வம் செலுத்துகின்றனர்.

7.5 சதவீத இடஒதுக்கீடு

இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மேலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 48.95 கோடி கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படுகின்றது. மேலும் மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தங்களது பள்ளியின் மூலம் அணுகி விண்ணப்பிக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் உயர்கல்வி மாணவர்கள் அக்டோபர் மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

ஒன்றிய அரசு தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைக்கிறது

ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

சென்னை, ஜூன் 16- மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட கீழடி ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசின் ஆய்வு முடிவுகள் இன்றும் வெளிவராதது ஏமாற்றம் அளிக்கிறது. கீழடியில் நடந்த தொல்லியல் அகழாய்வு குறித்த அறிக்கையை மறுசீரமைத்துச் சமர்ப்பிக்குமாறு, அப்பணியில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை உத்தரவிட்டது. அவரும் தனது அறிக்கையை ஆய்வு எல்லைக்குள் சரியாக செய்திருப்பதால் திருத்தம் செய்ய தேவையில்லை என்றுபதில் அளித்துள்ளார்.

தாமதம் ஏன்?

மதுரை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்த போது ஒன்பது மாதங்களில் தனது அறிக்கையை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துவிட்டு 14 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் தாமதப்படுத்துவது ஏன்?. சமீபத்தில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கை அறிவியல்பூர்வமான தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்க ஏராளமான நடைமுறைகள் உள்ளன. இன்னும் நிறையச் சான்றுகள் தேவைப்படுகின்றன என்று கூறியிருக்கிறார்.

துரோகம்

இது தமிழ், தமிழர், தமிழ் நாடு ஆகியவற்றிற்கு ஒன்றிய அரசு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

உலகின் மிகப்பழமையான தமிழர் நாகரிகத்தை ஆவணப்படுத்துவதில் ஒன்றிய அரசு பாரபட்ச மாக நடந்து கொள்கிறது. பாஜ அரசின் ஒற்றை கலாச்சார கொள்கைக்கு எதிராக கீழடி ஆய்வு முடி வுகள் அமைந்திருப்பதால் இதனை ஒடுக்க அது நினைக்கிறது. தாமதம் இன்றி கீழடி அறிக்கையை வெளியிட வேண்டும்

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் 10 ஆயிரத்து 227 பேருக்கு வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி

தமிழ்நாடு

சென்னை, ஜூன் 16- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பிரபாகர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டியே திட்டமிட்டு, பட்டியல் வெளியிட்டு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு தற்போது நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், அடுத்த 2 மாதங்களுக்குள் வெளியிடப்படும். அதன்பிறகு, 3 மாதத்தில் முக்கிய (மெயின்) தேர்வு நடத்தப்படும்.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த ஆண்டு 10 ஆயி ரத்து 701 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 15 வரையில் 10 ஆயிரத்து 227 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இனி நடக்கும் தேர்வுகள் எல்லாம் முடிந்து, 12 ஆயிரத்து 231 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வாய்ப்புகள் உள்ளது.அரசு பணிக்கான போட்டித்தேர்வுகள் அனைத்தும் குறித்த நேரத்தில் அறிவிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *