அகமதாபாத், ஜூன் 15- அகமதாபாத் விமான விபத்து பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு 11 சடலங்கள் அடையாளம் கண்டு பிடிப்பு. டிஎன்ஏ சோதனை மூலம் நடவடிக்கை, உள்துறை செயலர் தலைமையில் விசாரணைக்குழு.
குஜராத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையானது 270 ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய குழு அமைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 788 ட்ரீம் லைனர் விமானம் 30 விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. மருத்துவக் கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் விடுதியில் இருந்த மருத்துவ கல்லூரி மாணவர்களும் சிக்கினார்கள்.
விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்த நிலையில் ஒருவர் விமானத்தில் இருந்து குதித்து உயிர்தப்பினார். விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து மொத்தம் 265 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து மேலும் சில சடலங்களும், உடல் பாகங்களையும் மீட்பு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் மீட்புக் குழுவினருடன் தேசிய பாதுகாப்பு படை குழுவும் இணைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்தில் பலி எண்ணிக்கையானது 270ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.