சென்னை, ஜூன் 15- சென்னை யில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி யில் 5 உதவி பேராசி ரியர்கள் நியமனத்துக்கு கல்லூரி கல்வி இயக்குநரகம் ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது.
உதவி பேராசிரியர்கள்
சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் காலியாக இருந்த 64 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், தமிழ் வழியில் பயின்றவர் களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று கூறி, 5 உதவி பேராசிரியர்களின் நியமனங்களுக்கு தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநரகம் ஒப்புதல் அளிக்க மறுத்தது.
வழக்கு
இந்த உத்தரவை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் மகேஸ்வரி, மேனகா உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி சி.குமரப்பன் முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
அப்போது, மனுதாரர்கள் தெரிவித்ததாவது: பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த தகவலும் இல்லை. 2021ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட எங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புதல் வழங்க மறுத்து உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதமானது.
இந்த உத்தரவைரத்துசெய்து, எங்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை
அரசு தரப்பு வழக்குரைஞர் ஜெயபிரகாஷ், “இன சுழற்சி முறை மற்றும் தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை என பணி நியமனத்தில் உள்ள உரிய நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட கல்லூரிதான் வழக்கு தொடர முடியும்” என்று வாதிட்டார்.
அரசு தரப்பு வழக்குரைஞரின் வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதிபதி குமரப்பன், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.