புதுடில்லி, ஜூன் 15- பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை சீா்குலைந்துவிட்டதாக காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரும் அய்.நா. தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததை முன்வைத்து, காங்கிரஸ் இவ்வாறு சாடியுள்ளது. ‘போா், இனப்படுகொலை, அநீதிக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை இந்தியா இப்போது கைவிட்டுவிட்டதா?’ என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
193 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட அய்.நா. பொதுச் சபையில் கடந்த 12.6.2025 அன்று கொண்டுவரப்பட்ட போா் நிறுத்த தீா்மானத்துக்கு ஆதரவாக 149 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, எத்தியோப்பியா, பனாமா, தெற்கு சூடான் உள்ளிட்ட 19 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நேற்று (14.6.2025) வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீா்குலைந்துவிட்டதற்கு சான்றுகள் அதிகரித்து வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தொடா் தவறுகள் மீது பிரதமா் மோடி உரிய முடிவெடுப்பதுடன், தனது பொறுப்பை உறுதி செய்ய வேண்டும்.
வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தன் மூலம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.
கடந்த 2023-இல் இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலை காங்கிரஸ் வன்மையாக கண்டித்தது. அதேநேரம், காஸா மீதான கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மற்றும் குண்டுவீச்சுகளுக்கு தொடா் கண்டனம் தெரிவித்து வருகிறோம். காஸாவில் 60,000 போ் இறந்துவிட்டனா். அங்கு மனிதாபிமான ரீதியில் கடும் பிரச்சினை நிலவுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் போா் நிறுத்தம், அமைதி மற்றும் பேச்சுவாா்த்தையை ஊக்குவிக்கும் தனது நீடித்த நிலைப்பாட்டை இந்தியா கைவிட்டுவிட்டதா? இந்த நிலைப்பாடு, நாட்டின் அணிசாராக் கொள்கை மற்றும் தாா்மிக ராஜதந்திரங்களின் நீண்ட நெடிய பாரம்பரியத்தில் வேரூன்றியதாகும். இதன் வாயிலாகவே, உலகப் பிரச்சினைகளில் நீதி மற்றும் அமைதியை நாடு எப்போதும் ஊக்குவிக்கிறது.
மேற்காசிய பிராந்தியம், கொடூரமான வன்முறை, மனிதகுல பேரழிவு, ஸ்திரமின்மையை எதிா்கொண்டுவரும் சூழலில், இந்தியா அமைதியாக வேடிக்கை பாா்க்கவோ அல்லது கடந்து செல்லவோ முடியாது என்று காா்கே குறிப்பிட்டுள்ளாா்.
வாஜ்பாயின் நிலைப்பாடு என்னவானது?: காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காஸா போா் நிறுத்த தீா்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்ததன் மூலம் தெற்காசியா, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எனப் பல்வேறு நிலைகளில் இந்தியா தனியாக நிற்கிறது. வாக்கெடுப்பை புறக்கணிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டது ஏன் என்று வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்க வேண்டும்.
மோடி அரசு, நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் மரபுக்கு மதிப்பளிக்கவில்லை. அதேநேரம், பாலஸ்தீனம் தொடா்பான வாஜ்பாயின் நிலைப்பாட்டையும் கைவிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா்.