தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்துபவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி!
வட நாட்டில் ராமன் கோவிலுக்குப் பதில், முருகன் கோவிலை எங்கேயாவது கட்டியிருக்கிறார்களா?
இது முழுக்க முழுக்க முருகனுக்காக அல்ல; ஓட்டுக்காக! – அது தமிழ்நாட்டில் எடுபடாது!!
கோவை, ஜூன் 15 தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்துபவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி, வட நாட்டில் ராமன் கோவிலுக்குப் பதில், முருகன் கோவிலை எங்கேயாவது கட்டியிருக்கிறார்களா? இது முழுக்க முழுக்க முருகனுக்காக அல்ல; ஓட்டுக்காக! அது தமிழ்நாட்டில் எடுபடாது!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கோவை – சூலூரில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்!
தமிழர் தலைவர் ஆசிரியர்!
நேற்று (14.6.2025) காலை கோயம்புத் தூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சூலூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்..
அப்பேட்டியின் வருமாறு:
செய்தியாளர்: ‘திராவிட மாடல்’ ஆட்சி யின் நான்கு ஆண்டு சாதனைகள்பற்றி….?
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் போன்று வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது!
தமிழர் தலைவர்: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நான்காண்டு சாதனைகள் மிகப்பெரிய அளவிற்கு, மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குத் தொடர்ந்தவாறு உள்ளன. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய காலை உணவுத் திட்டம், கல்வியில் வளர்ச்சி, மருத்து வத்தில் வளர்ச்சி, அதேபோல, எல்லா மக்களுக்கும், எல்லா வாய்ப்புகளும் கிடைப்பது, சமூகநீதி, பெண் உரிமை இவற்றைப் பார்த்துப் பார்த்து, தமிழ்நாட்டில் உள்ளது போன்று, எங்களுடைய ஆட்சியிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதைவிட நற்சான்றுகள் இந்த ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வேறு இருக்க முடியாது.
அடாவடி அரசியல் செய்கின்ற ஆளுநரை வைத்து குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள்!
இந்தப் பொறாமையின் காரணமாகத் தான், ஒன்றிய பா.ஜ.க. அரசினர் ஒத்துழைப் புடன் அடாவடி அரசியல் செய்கின்ற ஆளுநரை வைத்து குறுக்குச் சால் ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
மாநில அரசுக்குக் கொடுக்கவேண்டிய நிதிகளை யெல்லாம் கொடுக்காமல், மறுக்கக்கூடிய ஓர் ஒன்றிய அரசு – அதேபோல, கூலிப்படைகளைப் பிடித்து அரசியல் நடத்தலாம் என்று அவதூறுகளைப் பரப்புவது – இவற்றையெல்லாம் தாண்டித்தான், இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் நம்முடைய மு.க.ஸ்டாலின் அவர்கள், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறார்கள்.
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 200 இடங்களுக்குக் கூடுதலாக வருமே தவிர, குறைவதற்கு வாய்ப்பில்லை!
2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற சட்டப் பேரவை தேர்தலில் நம்முடைய முதலமைச்சருடைய இலக்காகிய 200 இடங்களுக்குக் கூடுதலாக வருமே தவிர, குறைவதற்கு வாய்ப்புக் கிடையாது.
காரணம் என்னவென்றால், இது பெரியார் மண்.
தி.மு.க. கூட்டணி – கொள்கைக் கூட்டணி!
அதுமட்டுமல்லாமல், சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாகும்.
மற்ற கூட்டணிகள் உருவானதா? உருவாக வில்லையா? நிலைக்குமா, நிலைக்காதா? என்பதே கேள்விக் குறிதான். அப்படியே உருவானாலும், அவை இதுபோன்ற ஒரு தெளிவான தலைமையின்கீழ் இல்லை.
ஒருவருக்கொருவர் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், மக்களுக்குச் செய்யவேண்டிய காரியங் களையெல்லாம் ‘திராவிட மாடல்’ ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது.
வருகின்ற சட்டப் பேரவைக்கான தேர்தலில் வெற்றி பெறப் போவது நிச்சயம்! அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
தமிழ்நாட்டில் அமித்ஷாவிடம் அடமானம் வைத்த கட்சிகள் சில இருக் கின்றன. இன்னுங்கேட்டால், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைப் பேசுகிறார்.
இதன்படி போரில்லாமல் வெற்றி காணக் கூடிய அளவிற்கு, வாக்காளர்களுடைய சிந்தனை வெற்றியை நம்முடைய கரங்களில் வைக்கும்.
‘‘எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது’’
செய்தியாளர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து போகிறாரே, அதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ‘‘எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது.’’
தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருவார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் கூட்டணி வைத்து இணைந் திருந்த போது கோயம்புத் தூருக்கு மோடியேகூட வந்து பேசினார். தேர்தல் முடிவு என்னாயிற்று?
அதனால்தான் சொன்னேன், ‘‘எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது’’ – வரலாறு அதனைச் சொல்லும்.
அ.தி.மு.க.வினுடைய
நிலைப்பாடு என்ன?
நிலைப்பாடு என்ன?
அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி – திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமை யில் இருக்கக்கூடிய கூட்டணிக்கு தி.மு.க. கூட்டணி என்று பெயர்.
அவர்களுடைய கூட்டணிக்கு என்ன பெயர்?
இன்னமும் கூட்டணி அங்கே அமைய வில்லை.
பா.ஜ.க. கூட்டணி என்றுதான் இது வரையில் சொல் லிக் கொண்டிருக்கின்றார்கள். அ.தி.மு.க.வினுடைய நிலைப்பாடு என்ன?
அந்தக் கட்சித் தொண்டர்கள், கொள்கை உணர்வு படைத்தவர்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்களா?
பிரதமர் மோடியின் ‘போட்டோ ஷூட்’
செய்தியாளர்: அகமதாபாத் விமான விபத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? மோடி அந்த இடத்தைப் பார்த்துவிட்டுப் போனது குறித்து கேள்விக்குறியாகி இருக்கிறதே? இரண்டு இடங்களில், உடை மாற்றிக் கொண்டு வந்து ‘போட்டோ’ எடுத்துக்கொண்டதுபற்றி…?
தமிழர் தலைவர்: மக்களுக்கே இது நன்றாகத் தெரியும். மோடி, ‘போட்டோ ஷூட்’டை எப்படி எடுப்பார் என்று.
இதுபோன்ற விமான விபத்துகள் நடக்கக்கூடாது என்பதுதான் நம்முடைய நிலை.
விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்த்த விதம் என்பது மிகவும் விசித்திரமானதுதான்.
ஓர் உதாரணத்திற்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஓரிடத்தில் கொலை நடந்தால், 24 மணிநேரத்தில் அந்தக் கொலைக் குற்றவாளியை காவல்துறையினர் பிடித்தார்கள் என்ற செய்தி வருகிறது.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள், ‘‘குற்றம் நடைபெறுவதற்கு முன்பாகத் தடுக்கவேண்டும் அல்லவா?’’ என்று கேட்கிறார்கள்.
இந்த வாதத்தைக் கொஞ்சம் திருப்பிப் பாருங்கள், உங்களுக்கு நன்றாகப் புரியும்.
வட நாட்டில் ராமன் கோவிலுக்குப் பதில்,
முருகன் கோவிலை எங்கேயாவது கட்டியிருக்கிறார்களா?
முருகன் கோவிலை எங்கேயாவது கட்டியிருக்கிறார்களா?
செய்தியாளர்: முருகன் மாநாடுபற்றி…?
தமிழர் தலைவர்: முருகனுக்குக் காவிச் சாயத்தை அடித்துவிட்டார்கள்.
மனிதர்களைப் பிரித்தார்கள்; ஆண் – பெண் என்று பேதப்படுத்தினார்கள். இப்போது கடவுளையும் பிரித்துவிட்டார்கள்.
அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி, வட நாட்டில் ராமன் கோவிலுக்குப் பதில், முருகன் கோவிலை எங்கேயாவது கட்டியிருக்கிறார்களா?
இது முழுக்க முழுக்க முருகனுக்காக அல்ல; ஓட்டுக்காக.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.