மும்பை, ஜூன் 14- ஓவ்வோரு ஆண்டும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் சாலைகள் உலகத்தரத்தில் அமைந்துவிடும் என்று தொடர்ந்து சளைக்காமல் கூறி வருகிறார் ஒன்றிய சாலைப ்போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி.
“நாட்டில் உள்ள சாலைகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகத்தரம் வாய்ந்தவைகளாக மாறும் இதை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்” என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இவர் 10 ஆண்டுகளாக சாலைப்போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். இவர் இதே போன்று 2019 ஆம் ஆண்டு “2022 உலகத்தரத்தில் அனைத்து சாலைகளும் ரெடியாகிவிடும்” என்று கூறியிருந்தார்.
2022 ஆம் ஆண்டு நடந்த கருத்தரங்கம் ஒன்றில் “2024 உலகில் தரமான சாலைகள் உள்ள நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துவிடும்” என்றார்.
இந்த நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது “இந்திய சாலைகளில் வியக்கத்தகு மாற்றம் அடைந்துவிடும். அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்க சாலைகள் கட்டமைப்புக்கு நிகராக இந்திய சாலைகளின் தரம் உயர்ந்துவிடும். மாற்றம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்த மாற்றத்தை சீக்கிரமே பார்ப்பீர்கள்” என்று கூறினார்.
இவரது உரையை சமூகவலைதளத்தில் பகிர்ந்தவர்கள் இந்த வியாதிக்கு மருந்தே கிடையாது என்றும், அரிச்சந்திரனின் மறு அவதாரம் என்று அவருடைய பழைய பேட்டிகளை எடுத்துப் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.