அகமதாபாத், ஜூன் 13 குஜராத்தின் அகம தாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் மேனாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று (12.6.2025) பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறு வனத்தின் பயணிகள் விமானம் ஒன்று லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் பயணம் செய்தனர்.
241 பேர் மரணம்
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அகமதாபாத் மெகானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விமான பயணிகளில் 169 பேர் இந்தியர்கள். பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் இருந்தனர். விமான ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் உள்ள 242 பேரில், 128 பேர் ஆண்கள், 100 பேர் பெண்கள், 14 பேர் குழந்தைகள் என தெரியவந்தது. குஜராத் மேனாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் விமானத்தில் பயணித்தார்.. விபத்தில் அவ ரும் இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி விடுதி!
விமானம் விழுந்து நொறுங்கிய குடியிருப்புப் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், விடுதியின் 4 மாடி கட்டடம் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியதில், அந்தக் கட்டடம் உடைந்து நொறுங்கியது. இதில், இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 25 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
விபத்துக்கான காரணம் என்ன?
விபத்து குறித்து அகமதாபாத் விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:
விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் சரியான வேகத்தில்தான் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், தரையை விட்டு பறக்க தொடங்கிய பிறகு போதுமான உயரத்துக்கு மேலே எழும்பவில்லை. அடுத்த 2 நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. கீழே விழுந்த வேகத்தில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.
லேண்டிங் கியர் கோளாறு காரணமாக விமான சக்கரம் ஏதாவது கட்டடம் மீது மோதியிருக்கலாம். விமான இன்ஜினில் பறவைகள் மோதியி ருக்கலாம். விமான இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற காரணங்களால் விபத்து நேரிட்டிருக்க வாய்ப்பு உள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும். விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அதன் பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அகமதாபாத் காவல்துறையினர் கூறிய தாவது:
லண்டன் செல்லும் விமானம் என்பதால் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டு இருந்தது. சுமார் 1.25 லட்சம் லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட 2 நிமிடங்களில், அருகே உள்ள மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதியுள்ளது. இதில், விமானம் வெடித்துசிதறி, சுற்றுவட்டார பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக 40 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணி யில் ஈடுபட்டனர். பல மணி நேரம் தீவிரமாக போராடி தீ அணைக்கப்பட்டது. உடல்கள் மிகவும் கருகிய நிலையில் உள்ளதால் அடை யாளம் காண முடியவில்லை. ஏராளமான பயணிகளின் தலை, உடல் பாகங்கள் தனித்தனியாக மீட்கப்பட்டுள்ளன. டிஎன்ஏ சோதனைக்கு பிறகு, குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ள, குஜராத் அரசு சார்பில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளன. 9978405304, 079 232 51900ஆகிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு காவல்துறையினர் கூறினர்.
ஒன்றிய உள்துறை
அமைச்சர் ஆய்வு
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலை செல்போனில் தொடர்பு கொண்டு, மீட்பு பணிகள் குறித்து முழுமையாக கேட்டறிந்தனர்.
பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் இருந்து அகமதாபாத்துக்கு விரைந்தார். முதலமைச்சர் பூபேந்திர படே லுடன் சென்று, விபத்து நிகழ்ந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒருவர் மட்டும்
உயிர் பிழைத்த அதிசயம்
விமான விபத்தில் அதிசய நிகழ்வாக அந்த விமானத்தில் பயணித்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் (வயது 40) என்ற பயணி உயிர் பிழைத்துள்ளார். காயத்துடன் தப்பிய அவர், சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து சென்றார். காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார். அவர் நடந்து செல்லும் காட்சி, வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவர் கூறியபோது, ‘‘கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்படி உயிர் பிழைத்தேன் என்பது தெரியவில்லை. மீட்பு படை வீரர்கள் என்னை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர்” என்றார்.
இவர், டையூ பகுதியை பூர்வீகமாக கொண்டவர். 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணம் செய்துள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த அவரது அண்ணன் அஜய் குமார் விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
கருப்புப் பெட்டி
விமானத்தின் வால் பகுதியில் கருப்புப் பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும். விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும் இதில் பதிவாகும். விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்களும் பதிவாகும். பெரும் தீ விபத்து, கடலில் மூழ்கினாலும் கருப்புப் பெட்டிக்குப் பாதிப்பு ஏற்படாது.
விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து, அதில் பதிவான தகவல்களை பெற 15 நாள்கள் வரை ஆகும். இதன்பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.
‘இந்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டால், விபத்து குறித்த விசாரணைக்கு உதவ அமெ ரிக்கா தயாராக இருக்கிறது’ என்று அமெரிக்க விமான போக்குவரத்து துறை (எஃப்ஏஏ) தெரிவித்துள்ளது.