பிரயாக்ராஜ், ஜூன் 12– ஜனவரி 29, மவுனி அமாவாசை அன்று, பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் மரணங்களை ஏற்படுத்திய நான்கு நெரிசல் சம்பவங்கள் நடந்தன
பிபிசி புலனாய்வு விசாரணை
உத்தரப்பிரதேச அரசின் கூற்றுப்படி, கூட்ட நெரிசலில் 37 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
பிபிசி நடத்திய விரிவான புலனாய்வில், கூட்ட நெரிசலில் குறைந்தது 82 பேர் இறந்ததாக தெரியவந்துள்ளது.
இதுபோன்ற 26 குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கத் தொகைகள் வழங்கப்பட்டதை பிபிசி கண்டறிந்தது, ஆனால் அவர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்ற இந்த கும்பமேளாவை 66 கோடி பேர் பார்வையிட்டதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இது சுமார் நான்காயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்றது.
இந்த 45 நாள் நிகழ்விற்காக அரசாங்கம் ஏழாயிரம் கோடி ரூபாய் செலவிட்டது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உ.பி. சட்டமன்றத்தில், “இந்த வெற்றிகரமான கும்பமேளாவின் எதிரொலி நீண்ட காலத்திற்கு உலகில் கேட்கும்” என்று கூறினார்.
ஆனால் அந்த ‘வெற்றியின் எதிரொலியில்’, கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த பலரின் குரல்கள் மறைந்து போயின.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில், “இந்த ‘கெட்டவாய்ப்பான’ சம்பவம் 29 ஆம் தேதி இரவு சங்கம் நோஸ் அருகே அதிகாலை 1.10 மணி முதல் 1.30 மணி வரை நடந்தது…” என்று கூறினார்.
“66 பக்தர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அதில் 30 பக்தர்கள் இறந்தனர்… 30 பேரில் 29 பேர் அடையாளம் காணப்பட்டனர்.”
“ஒருவரை அடையாளம் காண முடியவில்லை. அவரது டிஎன்ஏ சேகரிக்கப் பட்டது. அவரது இறுதிச் சடங்குகளை உள்ளூர் நிர்வாகம் செய்தது… பிரயாக்ராஜின் பல்வேறு இடங்களில் வேறு சில அழுத்தப் புள்ளிகள் இருந்தன.”
முதலமைச்சர் ‘அழுத்தப் புள்ளிகள்’ என்று அழைக்கும் இடங்களில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாக பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
முதலமைச்சர் ஆதித்யநாத், பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில் அளித்த அறிக்கையில், “சிலர் காயமடைந்தனர், வேறு சில இடங்களிலும் சுமார் 30-35 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது அல்லது மருத்துவ மனையில் இறந்தனர்” என்று கூறினார்.
இந்த கூட்ட நெரிசல் சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள முழுமையான உண்மை என்ன?இதை ஆய்வு செய்ய, பிபிசி செய்தியாளர்கள் 11 மாநிலங்களில் அய்ம்பது மாவட்டங்களுக்குச் சென்றனர்.
இந்த புலனாய்வில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்ததாகக் கூறிய 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை பிபிசி சந்தித்தது.
கும்பமேளாவில் குறைந்தது 82 பேர் கூட்ட நெரிசலில் இறந்ததற்கான வலுவான ஆதாரங்கள் பிபிசியிடம் உள்ளது. தங்கள் கூற்றை நிரூபிக்க வலுவான ஆதாரங்களை வழங்க முடியாத குடும்பங்களின் உறுப்பினர்கள், இறந்த 82 பேரின் பட்டியலில் பிபிசியால் சேர்க்கப்படவில்லை.
ஆதாரம்
மவுனி அமாவாசை நாளில் கும்பமேளாவில் குறைந்தது நான்கு இடங்களில் கூட்ட நெரிசல்கள் மற்றும் இறப்புகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்களை பிபிசி கண்டறிந்துள்ளது.
மகா கும்பமேளாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கின்படி, “மவுனி அமாவாசை அன்று சங்கமக் கரையில் நடந்த கூட்ட நெரிசலில் 30 பேரும், பிற மூன்று பகுதிகளில் நடந்த சம்பவங்களில் ஏழு பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்களின் உடலில் காயங்கள் தென்பட்டன. மாண்புமிகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களின் அறிவிப்பின்படி, இறந்த 37 பேரில் 35 பேரின் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் அடையாளம் காணப்படாததாலும், மற்றொருவர் சார்பாக உரிமை கோரப்படாததாலும் இழப்பீடு வழங்க முடியவில்லை.”
இந்த அறிக்கையை எழுதும் வரை, உத்தரப்பிரதேச அரசு கூட்ட நெரிசலில் கொல்லப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிடவில்லை. எந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது, அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்களையும் வெளியிடவில்லை.
பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் கூறிய கூற்றை விசாரித்ததில், 35 குடும்பங்களுக்குப் பதிலாக, உத்தரப்பிரதேச அரசிடமிருந்து தலா ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்ற 36 குடும்பங்கள் இருப்பதாக பிபிசி கண்டறிந்தது.