கோவிலில் ‘அன்னதானம்’ சாப்பிட்டவர்கள் 86 பேர் மருத்துவமனையில் அனுமதியாம்!
மதுரை, ஜூன்.12- விருதுநகர் மாவட்டம் எஸ்.கல்விமடை கிராமத்தில் உள்ள கருப்பணசாமி கோவிலில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ‘கும்பாபிஷேகம்’ நடந்தது. விழாவையொட்டி சில நாட்களாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானத்தைச் சாப்பிட்ட பலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில்…
இந்தநிலையில் அன்னதானம் சாப்பிட்ட எஸ்.கல்விமடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மேலும் 86 பேர் நேற்று முன்தினம் (10.6.2025) இரவு உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 55 பெண்கள், 41 ஆண்கள், 11 குழந்தைகள் என மொத்தம் 107 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்னதானத்திற்கு பயன்படுத்தப்பட்ட அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களையும், குடிநீர் மாதிரிகளையும் சேகரித்து பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். பொது மக்களுக்கு வழங்கப்பட்ட குடிநீரில் பிரச்சினையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது பரிசோதனை முடிவுகளுக்கு பிறகே தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.