டில்லி, ஜூலை 11 ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கூட்டத்தை நீட்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் 2034ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூட்டுக்குழுவின் தலைவர் தன்னிச்சையாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பாஜக அல்லாத கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தன்னிச்சையான அறிவிப்பு
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அமைக்கப்பட்டது, இக்குழு இதுவரை 7 முறை கூடியுள்ளது. இக்கூட்டுக்குழு பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு நேரில் சென்று கருத்து கேட்பு நடத்தியுள்ளது, மற்ற மாநிலங்களுக்கு இன்னும் செல்லவில்லை. கூட்டுக்குழுவின் கால அவகாசம் மழைக்கால கூட்டத் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, அதனை மேலும் நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. கூட்டுக் குழுவின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான பி.பி.சவுத்ரி 2034-இல் நாடுமுழுதும் ஒரே தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். கூட்டுக்குழு தலைவரின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.