பனாஜி, ஜூன் 11- கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிக்கர். மாநில சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது தலைமை மருத்துவ அதிகாரி நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி, திட்டியதோடு அவரை பணி இடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவிட்டார். ஆனால், பத்திரிகையாளர் ஒருவரின் தாய்க்கு அவசர சிகிச்சை பிரிவில் வைட்டமின் பி 12 ஊசி போட மறுத்த ஒரே காரணத்துக்காக அமைச்சர் இப்படி நடந்து கொண்டதாக மருத்துவர்கள் சங்கம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தை கண்டித்து கோவா மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பணி இடை நீக்கம் உத்தரவை கோவா முதலமைச்சர் பிமோத் சாவந்த் நிறுத்தி வைத்தார்.
இதற்கிடையே அமைச்சர் ரானே எக்ஸ் தளத்தில் நேற்று (9.6.2025) பதிவிடுகையில், நான் பேசிய கடுமையான வார்த்தைகளுக்காக மருத்துவர் குட்டிகரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது மன்னிப்பை ஏற்க மருத்துவர் குட்டிகர் மறுத்துவிட்டார்.
சென்னையில் வணிக வளாகம் வழியாக செல்லும் மெட்ரோ ரயில் திட்டம்
இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்படுகிறது
சென்னை, ஜூன் 11- இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் வணிக வளாகம் வழியாக செல்லும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக சென்னையில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 9 மாடி வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் நிலையத்தின் வடிவமைப்பு திட்டத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
இரயில் நிலையங்களில் வணிக வளாகம்
சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டிடத்தின் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளது.
4ஆவது தளத்தில்…
9 மாடிகளை கொண்ட 3 கட்டடங்கள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்தின் மய்யமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளை கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. வணிக கட்டடங்களின் 4ஆவது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6ஆவது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது.