புதுடில்லி, ஜூன் 10- டில்லியில் 9 வயது சிறுமி காணாமல் போன நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது.
அவருடைய உடலை சூட்கேசில் அடைத்து தப்பியவர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.
காணாமல் போன சிறுமி
டில்லி தயால்புரம் பகுதியை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. அதே தெருவில் வசித்து வரும் உறவினர் வீட்டுக்கு அய்ஸ் கட்டிகளை எடுத்து கொண்டு இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து சென்றார்.
இரவு 9 மணி ஆகியும் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர்களுடைய மகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
சிறுமி பிணம்
பெற்றோர் அவளை தேடத் தொடங்கிய நிலையில் நேரில் பார்த்தவர்கள், சிறுமி அவளது வீட்டுக்கு அருகே 200 மீட்டர் தள்ளியுள்ள வீட்டிற்குள் நுழைவதை பார்த்ததாக தெரிவித்தனர்.
சிறுமியின் தந்தை அந்த வீட்டின் 2ஆம் தளத்தில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது சூட்கேசில் ரத்த வெள்ளத்தில் அரை நிர்வாணத்தில் தனது மகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த சிறுமியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாலை மறியல்
அப்போது அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு சூட்கேசில் அடைத்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.
சிறுமியின் பெற்றோர் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தி உறவினர்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றம் நிலவுகிறது.