பிரிட்டானியா மாதா
கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையைப் போல, ஆளுநர் மாளிகையிலேயே காவிக் கொடியுடன் கூடிய பாரத மாதா சிலை என்று ஒன்றை மேடையில் வைத்து சுற்றுச் சூழல் நாள் அன்று பூப் போட்ட நிகழ்ச்சி, அரசின் மதச்சார்பற்ற தன்மையைக் கேலிக்குள்ளாக்கியிருக்கிறது.
பாரத மாதா இந்தியாவின் அடையாளம் என்கிறாராம் ஆளுநர். கேரள இடதுசாரி அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமைச்சர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டனர். மாநில அரசுகளுடன் முரண் போக்கைக் கடைப்பிடித்து, அவர்தம் கவனத்தைச் சிதைப்பதையே முழுநேரப் பணியாகக் கொள்ளவே ஆளுநர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள் அல்லவா? அவர் கடமையை அவர் செய்கிறார்.
அபநிந்திரநாத் வரைந்த பாரத மாதா
சரி, கிடக்கட்டும். பாரதமாதா என்கிறார்களே, அவர் யார்? எப்போதிருந்து இப்படி ஒரு உருவகம் வரத் தொடங்கியது? அதன் பின்னணி என்ன? வங்காளத்தைச் சேர்ந்த அபநிந்திரநாத் என்பவர் 1904-ஆம் ஆண்டு நான்கு கைகளுடனான பெண்ணின் உருவத்தை, இந்து மதக் கடவுளச்சிகளின் உருவத்தைப் போல வங்க ஓவியப் பாணியில் வரைந்தார். அதன் பின்னர் வெள்ளைக் காரர்களின் ஜியா கிரபிகல் சர்வே ஆஃப் இந்தியா வரைந்து வெளியிட்ட பிரிட்டிஷ் இந்தியாவின் வரைபடத்துடன் இணைத்து ஒரு படத்தை பாரதியார் வெளியிட்டார்.
சரி, இப்போது சிங்கம் உடன் நடைபோட கையில் காவிக் கொடியுடன் இருக்கும் பாரத மாதா எங்கிருந்து வந்தார்?
கிரேக்க மற்றும் ரோமானிய மொழிகளில், ஆங்கிலேயர் வசித்து வந்த கிரேட் பிரிட்டனின் நிலப் பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது பிரிட்டானியா என்னும் சொல். இங்கிலாந்து தீவுக்குப் பெண் உருவகம் தந்து வழங்கப்பட்ட பெயர் இது. முதலாம் எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில்தான் “பிரிட்டானியா” என்ற சொல் கிரேட் பிரிட்டனின் உருவகமாகக் கருதப்பட்டது.
கி.மு.காலத்தில் கிரேக்க ரோமக் கடவுள்களின் கையில் இருந்ததாக வரையப்பட்ட அதே திரிசூலம் போன்ற வடிவம் கொண்ட டிரைடண்ட் என்னும் கருவியைக் கையில் ஏந்தியபடி, சிங்கத்துடன் தோன்றும் பிரிட்டானியா பெண்ணின் தோற்றத்தைப் பின்பற்றி, இந்திய வரைபடப் பின்புலத்தில் டிரைடண்டுக்குப் பதில், காவிக் கொடியைக் கொடுத்து, அதே சிங்கத்தைப் பின்புலத்தில் நிறுத்தி அடிக்கப்பட்ட காப்பிகேட் பாரதமாதாவைத் தான் இப்போது ஆர்.எஸ்.எஸ். கும்பல் பயன்படுத்திவருகிறது. அதைத்தான் கேரள ஆளுநரும் போற்றி, பூத் தூவியிருக்கிறார். இவர்களின் ஹிந்து தேசியம், இத்தாலியின் பாணியில் உருவானது;
காப்பிகேட் ‘காவி’ பாரத மாதா
பாரத மாதா, பிரிட்டிஷ் மாதாவைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டது. வைத்திருப்பதெல்லாம் விதேசி. ஆனால் பேசுவது மட்டும் சுதேசி! மேக் இன் இந்தியா என்று திட்டம் கொண்டு வந்துவிட்டு, சைனாவில் செய்யப்பட்ட தேசியக் கொடியை நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தியவர்கள் என்று ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டு வேறு உள்ளதே! சீனத்துப் பேருந்து நிலையத்தை குஜராத் என்று காட்டியவர்கள் தானே!
இதே வேளையில் பாரத்மாதா – கீ ஜே போட்டு ’பல்பு’ வாங்கிய செய்தி ஒன்று! கோவையில் ஓர் இசைநிகழ்ச்சி. இசைஞானி இளையராஜா நடத்தியது. பணிவு நாடக நடிகரான மேனாள் பா.ஜ.க. தலைவர் ஒருவர் மேடையேறி இளையராஜாவுக்கு சால்வை போட்டிருக்கிறார். அப்போது, ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூட்டத்தில் இருந்து ஒருவர் கூச்சலிட்டுள்ளார். இளையராஜா இசை நிகழ்ச்சியைத் தங்கள் கவன ஈர்ப்புக்கு அபகரிக்கும் திட்டமாயிருக்கும். அதையெல்லாம் தவிடு பொடியாக்கி அடுத்த நொடி அதே அரங்கம் அதிர, “தந்தை பெரியார்” என்று முழக்கம் கேட் டிருக்கிறது. அவ்வளவு தான்! ஆடிப் போனது காட்சிக் கூட்டம்!
‘பெரியார் மண்ணுடா! எங்க வந்து கூச்சல் போடுற?’ என்று அந்தக் காட்சியைச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு ‘எங்கேயும் ஹீரோ’வாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பெரியார் என்று வைரலாகியிருக்கிறது அந்தக் காட்சி.
– குப்பைக்கோழியார்