மும்பை, ஜூன் 10 மும்பை அருகே இரு புறநகர் ரயில்கள் கடந்து சென்ற போது, படியில் தொங்கி சென்ற பயணிகள் மோதிக்கொண்டு கீழே விழுந்ததில் ரயில்வே காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டம்
மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் (சிஎஸ்எம்டி) இருந்து தானே மாவட்டம் கசரா நோக்கி நேற்று காலை 9 மணிக்கு புறநகர் ரயில் புறப்பட்டுச் சென்றது. முதல் வேலை நாள், அலுவலக நேரம் என்பதால் ரயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. ஏராளமானோர் படியில் தொங்கியபடி சென்றனர். இதேபோல, எதிர் திசையில் சிஎஸ்எம்டி நோக்கி வந்த புறநகர் ரயிலிலும் ஏராளமானோர் படியில் தொங்கியபடி வந்தனர்.
எதிரெதிரே இரு ரயில்கள்
திவா – மும்ப்ரா பகுதியில் ரயில்கள் எதிர் எதிரே கடந்து சென்றபோது, இரு ரயில்களிலும் படியில் தொங்கியபடி வந்த பயணிகள் மிகவும் நெருக்கமான பகுதியில் மோதிக்கொண்டதில், பலரும் நிலைகுலைந்து ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதில் ரயில்வே காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய ரயில்வே வட்டாரங்கள் கூறியுள்ளன. ‘‘விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ரயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.’
ஊடகங்களின் முரண்பாடு
இந்த நிலையில் பெங்களுருவில் கடந்த வாரம் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக அனைத்து ஹிந்தி ஊடகங்களும் சித்தராமையா பதவி விலகவேண்டும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தத் தவறிய சித்தராமைய்யா ஆட்சியை வழிநடத்த தகுதியில்லாதவர் என்று எழுதியும் விவாத நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்தனர். இந்த நிலையில் மும்பை புறநகர் ரெயிலில் கூட்ட நெரிசலால் நடந்த கோரவிபத்து குறித்து இதுவரை எந்த ஒரு ஊடகமும் வாய் திறக்கவில்லை.