‘‘பெரியாரோடு இந்த இயக்கம் முடிந்துவிடும்; ஊருக்கு
நாலு பேர் வயதானவர்கள் இருப்பார்கள்’’ என்று சொன்னார்கள்!
பெரியார் என்றைக்கும் கொள்கை ரீதியாக
வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்; வழிகாட்டக் கூடியவர்!
‘பெரியார் மறைந்தார்’ என்று நாங்கள் சொல்வதில்லை;
உடலால் மட்டும்தான் மறைந்தார்; உணர்வால் நிறைந்திருக்கின்றார்!
கோவை, ஜூன் 10 பெரியாரோடு இந்த இயக்கம் முடிந்துவிடும்; ஊருக்கு நாலு பேர் வயதானவர்கள் இருப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், அப்படி இல்லை என்று, பெரியார் காலத்தில் இல்லாத இளை ஞரணி, பெரியாருக்குப் பின்னால் தோன்றியது. பெரியார் என்றைக்கும் கொள்கை ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்; வழிகாட்டக் கூடியவர். அதனால்தான் பெரியார் மறைந்தார் என்று நாங்கள் சொல்வதில்லை. உடலால் மட்டும்தான் மறைந்தார்; உணர்வால் நிறைந்திருக்கின்றார். அதனால்தானே, பெரியார் சிலையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
கோவை இராமகிருட்டிணன் 75 ஆம் ஆண்டு பவள விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு
கடந்த 4.5.2025 அன்று கோவையில் நடைபெற்ற கோவை இராமகிருட்டிணன் 75 ஆம் ஆண்டு பவள விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்..
அவரது வாழ்த்துரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
கொள்கைப் பாசறையின் தொண்டறத்தை நிலைநாட்டியவர்கள்!
அன்றைக்கு லேசான மழைகூட இருந்தது. தெப்பக்குளம் மைதானத்திற்குப் பல சிறப்புகள் உண்டு. அந்தக் கூட்டத்தை நடத்தவிடக் கூடாது என்றெல்லாம் சிலர் முயற்சிகள் செய்தனர். ஆனால், இராமகிருட்டிணனுடைய படையும், பட்டாளமும் அந்தக் கொள்கை எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து, கொள்கைப் பாசறையின் தொண்டறத்தை நிலை நாட்டியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.
ஈரோட்டிற்குப் போனவர்கள் யாரும் பாராட்டை எதிர்பார்த்தவர்கள் கிடையாது!
இவர்கள் எல்லாம் வெறும் பாராட்டுக்காகப் போனவர்கள் அல்ல; ஈரோட்டிற்குப் போனவர்கள் யாரும் பாராட்டை எதிர்பார்த்தவர்கள் கிடையாது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர்கள் பேட்டியின்போது உமாசங்கர் தீட்சித் சொல்கிறார், ‘‘பெரியாருக்கு வயதாகிவிட்டது; இன்னும் ரொம்ப நாளைக்கு இருக்கமாட்டார்’’ என்று.
தெப்பளக்குளம் மைதானத்தில் நடைபெறக்கூடிய கூட்டத்தில் உரையாற்ற அய்யா அவர்கள் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மாலை பத்திரிகை அப்போதுதான் வந்திருந்தது. அதில் என்ன முக்கியமானசெய்தி என்று கேட்டார்.
உமாசங்கர் தீட்சித் கூறியுள்ளது குறித்து என்று நாங்கள் சொன்னவுடனேயே,
“ஆமாம், அவர் நேரு வீட்டுக் கணக்குப் பிள்ளை யாயிற்றே, எனக்குத் தெரியுமே! அவர் என்ன இப்போது மந்திரியாகிவிட்டாரா?’’ என்றார்.
‘‘ஆமாங்க, அவர் மந்திரியாகி விட்டார். ஒன்றிய அமைச்சராக நியமித்திருக்கிறார்கள்’’ என்றோம். அப்போது நடந்தது காங்கிரஸ் ஆட்சி.
தந்தை பெரியாரிடம் படித்துக் காட்டினோம்
அந்த உமாசங்கர் தீட்சித் செய்தியாளர்களிடம் சொன்னது என்ன? ‘‘பெரியார் இராமசாமி நாயக்கர் பேசியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்; இன்னும் கொஞ்ச நாள்தான் இருப்பார்; அவருக்கு வயதாகிவிட்டது’’ என்று! அந்தப் பேட்டியின் விவரத்தை அப்படியே தந்தை பெரியாரிடம் படித்துக் காட்டினோம்.
உடனே அய்யா அவர்கள், ‘‘எனக்கு இதை ஞாப கப்படுத்துங்கள்’’ என்றார்.
கூட்டத்தில் அய்யா அவர்கள் உரையாற்றிக் கொண்டி ருந்தார். அவர் ஒரு விஷயத்தை முடித்து, அடுத்த விஷயத்திற்குப் போவதற்குள், அந்த நாளிதழைக் காட்டினோம்.
அய்யாவும், அந்த நாளிதழில் வந்த உமாசங்கர் தீட்சத் பேட்டியைப் படித்தார்.
எனக்குத்தான் வயதாகிவிட்டதே தவிர, என்னுடைய இயக்கத்திற்கு வயதாகிவிடவில்லை!
‘‘ஆமாம், எனக்கு வயதாகிவிட்டது உண்மைதான். நான் ஒன்றும் அதை மறுக்கவில்லையே! ஆனால், அவருக்கு ஒன்றை மட்டும் நான் சொல்லிக் கொள்கி றேன், எனக்குத்தான் வயதாகிவிட்டதே தவிர, என்னுடைய இயக்கத்திற்கு வயதாகிவிடவில்லை. இதோ இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள்’’ என்று இளைஞர்களைப் பார்த்துச் சொன்னார்.
அந்த நம்பிக்கை, அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் வீணாகப் போகவில்லை.
குறுக்குசால் ஓட்டுகிறார்கள்;
குதர்க்கம் பேசுகிறார்கள்;
கொடுமையான பழி சொல்கிறார்கள்!
குதர்க்கம் பேசுகிறார்கள்;
கொடுமையான பழி சொல்கிறார்கள்!
ஒரு பக்கத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு; இன்னொரு பக்கத்தில் வெற்றிக்கு மேல் வெற்றியை குவிக்கக் கூடிய, இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சி, சிறப்பான சாதனைகளைச் செய்து வருகின்றது. நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வெல்ல இனிமேல் முடியாது என்ப தற்காகத்தான், குறுக்குசால் ஓட்டுகிறார்கள்; குதர்க்கம் பேசுகிறார்கள்; கொடுமையான பழி சொல்கிறார்கள். அவர்களைப்பற்றி நாம் கவலைப்படவில்லை, கவலைப்படப் போவதுமில்லை!
நாங்கள் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறோம் என்பது இராமகிருட்டிணனைப் பாராட்டுவதற்காக மட்டும் அல்ல. இயக்கக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்காகத்தான்.
தந்தை பெரியார் என்ற ஒரே ஒரு தலைவருக்குத்தான், செப்டம்பர் 17 ஆம் தேதி பிறந்த நாள் விழா கொண்டா டத் தொடங்கினால், அடுத்த செப்டம்பர் 16 ஆம் தேதிவரையில் (ஓராண்டு) பிறந்த நாள் விழாவை கொண்டாடுவோம்.
அதற்கு அய்யா அவர்கள் விளக்கம் சொன்னார்.
பிறந்த நாள் விழாக்களை
ஏன் கொண்டாடுகிறோம்?
ஏன் கொண்டாடுகிறோம்?
‘‘நாங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது எதற்காக? எங்களுடைய பெருமையைப்பற்றிச் சொல்வதற்கா என்றால், இல்லை. கடவுள்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்; பிறப்பும், இறப்பும் அற்றவர் கடவுள் என்று சொல்கிறார்கள். ஆனால், அவனுக்கே பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
இராமனுக்கு நவமி; விநாயகனுக்கு சதுர்த்தி; கந்த னுக்கு சஷ்டி என்று இப்படி வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.
கடவுளுக்கு ஏன் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடுகிறார்கள் என்றால், கடவுள் நம்பிக்கையை ஆணி அடித்துப் பரப்புவதற்கு அது ஒரு வாய்ப்பு – அது ஒரு பிரச்சாரம்.
இல்லாத கடவுளுக்கே பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்!
இல்லாத கடவுளுக்கே அவன் பிறந்த நாள் கொண்டா டும்போது, இருக்கின்ற எங்களைப் போன்றவர்களுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடவேண்டாமா? கொள்கைப் பிரச்சாரத்தை செய்யவேண்டாமா?’’ என்றார்.
அதுபோன்றுதான், இன்றைக்குக் கொள்கைப் பிரச்சாரத்தைச் செய்கின்றோம்.
உடலால் மட்டும்தான் மறைந்தார்; உணர்வால் நிறைந்திருக்கின்றார்!
பெரியாரோடு இந்த இயக்கம் முடிந்துவிடும்; ஊருக்கு நாலு பேர் வயதானவர்கள் இருப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், அப்படி இல்லை என்று, பெரியார் காலத்தில் இல்லாத இளைஞரணி, பெரியாருக்குப் பின்னால் தோன்றியது. பெரியார் என்றைக்கும் கொள்கை ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்; வழிகாட்டக் கூடியவர். அதனால்தான் பெரியார் மறைந்தார் என்று நாங்கள் சொல்வதில்லை.
உடலால் மட்டும்தான் மறைந்தார்; உணர்வால் நிறைந்திருக்கின்றார். அதனால்தானே, பெரியார் சிலை யைக் கண்டு பயப்படுகிறார்கள்.
அவர்களின் கனவு
ஒருபோதும் பலிக்காது!
ஒருபோதும் பலிக்காது!
பெரியார்தானே ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு அடித்தளமாக இருக்கிறார்; ஆகவே, பெரியாரை எந்த அளவிற்குக் கொச்சைப்படுத்த முடியுமோ, அந்த அளவிற்குச் செய்தால், இளைஞர்களின் உள்ளத்தி லிருந்து பெரியாரைத் தூக்கி எறிந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். பெரியாரை, பெரியாரின் பிம்பத்தை உடைக்கலாம் என்று அந்தக் கூலிப்படைகளை வைத்துப் பல காரியங்களைச் செய்கிறார்கள். அரசியலில் பல கூலிப்படைகள் இருக்கின்றன. அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.
‘திராவிட இயக்கத்தின் போர்வாள்’ சகோதரர் வைகோ அவர்கள், பழைய வரலாற்றையெல்லாம் இங்கே சொன்னார். ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்தில், இந்த மேடையில் இருக்கின்ற தலைவர்கள், பொறுப்பாளர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டார்கள் என்பதை அவரே முன்னோட்டமாக இருந்ததைப்பற்றியெல்லாம் சொன்னார்கள்.
ஆனால், இன்றைக்குச் சிலர் தளபதி பிரபாகரனை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள்? ‘‘பிரபாகரனுக்குச் சட்டையை நான்தான் தைத்துக் கொடுத்தேன்’’ என்று சொல்கிறார்கள்.
மின்சாரத்திடம் மின்மினி பூச்சிகளின்
பாச்சா பலிக்குமா?
பாச்சா பலிக்குமா?
ஆனால், அந்த முகத்திரை இன்றைக்குக் கிழிக்கப்பட்டு விட்டது. ஏனென்றால், பார்ப்பன அடிமைகள் என்றைக்கும் அவர்களுடைய போலி அடையாளத்தை வைத்து, மின்மினிப் பூச்சிகள் போன்று வந்தாலும், மின்சாரத்திடம் மின்மினி பூச்சிகளின் பாச்சா பலிக்குமா? நிச்சயம் பலிக்காது.
அதற்குக் காவலர்கள் இதோ எங்கள் இராமகிருட்டிணன் போன்ற இளைஞர்கள், இங்கே வந்திருக்கும் தோழர்கள்.
சில பேர் நினைத்தார்கள்; ‘‘வீரமணியும், இராமகிருட்டிணனும் பிரிந்துவிட்டார்கள். எனவே, பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்யலாம்; இவருக்கு விளம்பரம் கொடுக்கலாம்; இராமகிருட்டிணன், வீரமணியைத் தாக்கட்டும்’’ என்று நினைத்தார்கள்.
யார் தாக்கினாலும், எங்களுக்கு உருவம் முக்கியமல்ல; வெளிப் பேச்சு முக்கியமல்ல; உள்ளம்தான் முக்கியம்.
தப்புக் கணக்குப் போட்டவர்களுக்குத் தெளிவாக சொல்கிறேன்!
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், எங்களைப் பார்த்து பிரிந்துவிட்டோம்; அவர் தனியே போய்விட்டார்; இவர் தனியே போய்விட்டார் என்று தப்புக் கணக்குப் போட்டவர்களுக்குத் தெளிவாக இன்றைக்கும் சொல்கி றேன், அன்றைக்கும் சொன்னேன், நாளைக்கும் சொல்வேன். ‘‘கத்திரிக்கோலில், இரண்டு பிளேடும் தனித்தனியாக இருக்கும்போது, அதற்குரிய வலிமை எப்படி என்று உங்களுக்கெல்லாம் தெரியும்; அந்தக் கத்திரிக்கோலின் மேல் ஒரு ரிவிட் இருக்கும்; அந்த ரிவிட்தான், பெரியார் என்ற கொள்கை ரிவிட். அந்தப் பெரியார் என்ற கொள்கை ரிவிட் இருக்கும்போது, இரண்டு பிளேடுகளுக்கு நடுவில் துணி போன்று உங்கள் தலையைக் கொடுத்தால், என்னாகும் என்று நினைத்துப் பாருங்கள்!’’ இதற்குமேல் விளக்கமாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. சாணைப் பிடிக்கத் தேவையில்லாத கத்திரிக்கோல்.
திராவிட இயக்கத்தை அசைத்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்!
இந்த இயக்கம் ஆயிரங்காலத்துப் பயிர்; திராவிட இயக்கத்தை அசைத்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். எப்படியெல்லாம் இந்த இயக்கம் வளர்ந்திருக்கின்றது என்பதற்கு சில விஷயங்களைச் சொல்லவேண்டும்.
பச்சை அட்டைக் ‘குடிஅரசு’ ஏட்டினால் பலன் அடையாத குடும்பமே கிடையாது. இன்றைக்குக் கலைத்துறையில் நமக்கு சத்யராஜ் போன்றவர்கள்; அன்றைக்கு நடிகவேள் எம்.ஆர்.இராதா போன்றவர்கள்; அதேபோல மற்ற மற்ற கலை உலக நண்பர்கள்.
‘விடுதலை’யில் தொடர் கட்டுரைகள்!
‘விடுதலை’யில் இயக்கத் தோழர்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக ‘குடிஅரசு’ தோற்றமும், அதனுடைய கொள்கையையும் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள், செய்திகள் வெளிவந்து கொண்டி ருக்கின்றன.
புரட்சிக்கவிஞர் அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ‘குடிஅரசு’ ஏட்டிற்கு வாழ்த்து எழுதியிருக்கிறார். ஒரு முனைவர் பட்டத்திற்காக ஓர் அம்மையார் அதனை ஆய்வு செய்திருக்கிறார்.
பெரியார் பிம்பத்தை உடைக்கலாம்; அல்லது எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தி, அதனுள் நுழையலாம் என்று நினைக்கின்ற இன எதிரிகளுக்கும், காட்டிக் கொடுத்து கூலி வாங்கலாம் என்கின்ற பார்ப்பன அடிமைகளுக்கும், ஆரிய அடிமைகளுக்கும் தெளிவாக ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கடலூர் ஞானியார் அடிகளார் அவர்களால் ஈரோட்டில் தொடங்கி வைக்கப்பட்ட ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு இந்த ஆண்டு.
‘குடிஅரசு’ ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்!
பெரியார், 2.5.1926 இல் ‘குடிஅரசு’ ஏட்டில் தலையங்கம் எழுதியிருக்கிறார். அந்தத் தலையங்கத்தின் ஒரு பகுதியைப் படிக்கின்றேன் கேளுங்கள்.
‘‘பிராமணர்களைத் திட்டுகிறீர்கள். அது போனாலும் போகட்டும், அதிகக் கடினமான வார்த்தைகளால் திட்டுகிறீர்கள். அது சில சமயங்களில் நமது ‘குடிஅரசு’ பத்திரிகையின் யோக்கியதையைக் கெடுத்து விடுகிறது” என்கிறார்கள். இவ்விரண்டும் உண்மையாயுமிருக்கலாம். அதற்கு நாம் என்ன செய்வது? இதன் ஆசிரியர் முதலில் சர்க்காருக்கு எவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்தாரோ, அதைவிட அதிகமாகத்தான் ‘பிராமணர்’களுக்கு நல்ல பிள்ளையாக இருந்து வந்தவர். சர்க்கார் சார்பாக எத்தனையோ கலெக்டர்கள், நிர்வாகப் பதவி அங்கத்தினர்கள் முதலியவர்களின் சிநேகமும், கவர்னர் முதலியோரின் நன்றியறிதல் கடிதங்களும் பட்டம் முதலியவைகளுக்குச் சிபார்சுகளும் பெற்றிருந்தாரோ, அதுபோலவே அநேக ‘பிராமணர்’களின் சிநேகமும், உள்ளன்பும், உபசாரப் பத்திரங்களும், தலைவர் பட்டங்களும் பெற்றவர்தான். ஆனால், அவர் சர்க்காரின் குற்றங்களை எடுத்துச் சொல்லும் போதும், சர்க்காரை கடினமான வார்த்தைகளால் திட்டும்போதும், அதற்காக ஜெயிலுக்குப் போகும் போதும், “நாயக்கர் வெகு தைரியசாலி”, “உண்மையான தேசபக்தர்”, “வீரர்” என்கிற பெயர் பெற்றார்.
(தொடரும்)