சேலம், ஜூன் 9- வாழப்பாடி அருகே பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று (8.6.2025) ஒரே நாளில் 72 திருமணங்கள் நடந்தன. இதனால் தாலி கட்ட பாய் போட்டு இடம்பிடிக்க முயன்ற உறவினர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மிகவும் பழமை வாய்ந்த பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் நேற்று (8.6.2025) ஒரு நாளில் மட்டும் இக்கோவிலில் 72 திருமணங்கள் நடைபெற்றன.
குறிப்பாக வைகாசி மாதம் வளர்பிறை கடைசிமுகூர்த்த தேதி என்பதால் அதிகாலை முதல் திருமணங்கள் நடைபெற்று வந்த நிலையில் திருமணத்திற்காக மணமக்கள் அமர்ந்து தாலி கட்ட பாய் போடுவதில் மணமக்களின் உறவினர்கள் போட்டா போட்டியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
இக்கோவிலில் அதிகாலையில் திருமணம் செய்ய மணமக்கள் அமர இடம்பிடிக்க பாய்போட்டு மல்லுக்கட்டி தகராறில் ஈடுபட்ட காட்சிப் பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் வீட்டாரிடம் இந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு திருமணத்திற்கு ரூ.3 ஆயிரம் வரை கட்டணமாக வசூல் செய்யப்படும் சூழலில், டோக்கன் எண் அடிப்படையில் திருமணங்கள் நடைபெறாமல், தாலி கட்டிக்கொண்ட மணமக்கள் எழுவதற்கு முன்பாகவே பாய் போடும் போட்டியில் வெல்பவர்களுக்கே திருமணம் செய்து வைக்கும் பரிதாப நிலை மாற வேண்டும்.
இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.