புதுடில்லி, ஜூன் 8- கருநாடக மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் மல்லையா, தொழில் அதிபரான இவர், தனது நிறுவனத்துக்காக வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடனாக வாங்கி இருந்தார். அதை அவர் திருப்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில் விஜய் மல்லையா, கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றுவிட்டார்.
பல ஆண்டுகளாக அங்கு இருக்கும் அவர், சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டி தொடர்பான காட்சிப் பதிவு வெளியாகி, வைரலாகியுள்ளது. அந்த பேட்டியில் அவர், நான் ஒன்றும் இந்தியாவில் இருந்து எந்த பொருளையும் எடுத்துவிட்டு ஓடவில்லை. இங்கிலாந்துக்கு செல்வதற்கு முன்பு, அப்போதைய ஒன்றிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் தெரிவித்தேன்.
இங்கிலாந்து வந்த பின்னர் சில காரணங்களால் இந்தியாவுக்கு திரும்பிச் செல்லவில்லை என்று கூறியிருந்தார். மேலும் சில கருத்துகளையும் அவர் அதில் தெரிவித்து இருந்தார்.
விஜய் மல்லையாவின் இந்த பேட்டி தொடர்பான காட்சிப் பதிவின் ஒரு பகுதியை வெளியிட்டு காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட பதிவு ஒன்றில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் பொருளாதாரம் பகோடா பொருளாதாரமாகிவிட்டது. வங்கிக் கடன் மற்றும் நிதி மோசடி செய்தவர்கள் ஒன்றிய நிதி அமைச்சரிடம் தெரிவித்துவிட்டுதான் நாட்டைவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இது விஷயத்தில் ஒன்றிய அரசுக்கு தொடர்பு உள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேராவும், மல்லையாவின் பேட்டியை மேற்கோள் காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.