சென்னை, ஜூன் 8- தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பொது சட்டநுழைவுத் தேர்வு (கிளாட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த நிலையில், திருச்சி மாவட்டம் பச்சமலை. அருகே தோனூர் கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத், தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார். மேலும், தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க தகுதி பெற்றிருக்கிறார். இந்த பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மாணவர் பரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து, சமூகவலைதள பக்கத்தில் நேற்றைய பதிவில் கூறியிருப்பதாவது:- உள்ளம் உவகையில் நிறைகிறது. தம்பி பரத் சட்டம் படித்து தன் அறிவொளியை இந்த சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப்படிப்புக்கு தி.மு.க சட்டத்துறையும், அதன் செயலாளர் என். ஆர்.இளங்கோவும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு
அணையில் நீர்மட்டம் உயர்வு
குமுளி, ஜூன் 8- கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 703 கனஅடி நீர் வருகிறது. தமிழ்நாடு பகுதிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4633 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
அதுபோல, மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.70 அடியாக உள்ளது. 15 கனஅடி நீர் வருகிறது.சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.69 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது.