மாஸ்கோ, ஜூன் 8- பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு மாற்றாக தனக்கென சொந்த விண்வெளி நிலையத்தை ரஷ்யா உருவாக்கி வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு நிலையம் வரும் 2030இல் விண்வெளி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவுவதற்கான தொழில்நுட்பத்திற்கு ரஷ்யா காப்புரிமை பெற்றுள்ளது.
இது குறித்து அதிபர் புடினுடன் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ் கூறுகையில், “ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உலகிலேயே முதல் முறையாக டிரோன் ஏவுதளம் அமைக்கப்படும். இது ரோபோக்களால் பராமரிக்கப்படுகிறது. இங்கிருந்து டிரோன்களை ஏவுவதற்கான தொழில் நுட்பத்திற்கு ரஷ்ய கூட்டமைப்பில் இருந்து காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் விண்வெளி ஆய்வு நிலையத்தில் சோதிக்கப்பட்டு, பின்னர் நிலவு சோதனை திட்டத்திலும் செயல்படுத்தப்படும்” என்றார்.
மராட்டிய தேர்தல் முறைகேடு
எனது கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் தாருங்கள்
தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
புதுடில்லி, ஜூன் 8- மராட்டிய தேர்தலில் முறைகேடு நடந்ததாக ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டிய நிலையில், தேர்தலில் பாதகமான முடிவு கிடைத்ததால் தேர்தல் ஆணையத்தை அவமதிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இதற்கு ராகுல் காந்தி பதிலளித்து உள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘அன்பான தேர்தல் ஆணையமே, நீங்கள் ஒரு அரசியல் சாசன நிறுவனம். கையெழுத்து போடாத, தப்பிக்கும் நோக்கிலான குறிப்புகளை வெளியிடுவது, தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் முறை அல்ல. உங்களுக்கு மறைக்க எதுவும் இல்லை என்றால், எனது கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலளித்து நிரூபியுங்கள்’ என குறிப்பிட்டு உள்ளார்.
இதற்காக மராட்டியம் உள்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கான சமீபத்திய ஒருங்கிணைந்த, டிஜிட்டல் இயந்திரம், படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் மற்றும் மராட்டிய வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளில் மாலை 5 மணிக்குப் பிறகு பதிவான அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சி களையும் வெளியிடுமாறும் அறிவுறுத்தி உள்ளார். கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்றும், உண்மையை கூறுவதே அதை செய்யும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மீண்டும் பதட்டம்
மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு
இம்பால், ஜூன் 8- கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி – குகி இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித் துள்ளதால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகியதையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமைதி திரும்பியுள்ளது.
பதட்டம்
நேற்றிரவு, மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து மெய்தி மக்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தடுக்க பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டதால், மணிப்பூரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
ஊரடங்கு உத்தரவு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை நேற்று இரவு 11.45 மணி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபல், பிஷ்ணுபூர், காக்சிங் ஆகிய 5 மாநிலங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.