தமிழ்நாட்டில் முதலிடம் – இந்தியாவில் இரண்டாமிடம்… முன்னிலையில் நிற்கும் காஞ்சி!

viduthalai
2 Min Read

காஞ்சிபுரம், ஜூன் 6 காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான, சிறீபெரும்புதூர், ஒரகடம், படப்பை, இடுங்காடு கோட்டை, சுங்குவார்சத்திரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு தொழிற்சாலைகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல முன்னணி  தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. சாம்சங், உண்டாய் உள்ளிட்ட தொழிற்சாலைகளும் குறிப்பிட்ட  தொழிற்சாலைகளாக இருந்து வருகின்றன. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் உற்பத்திப் பொருள்கள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்ட மாநிலங்கள் பட்டி யலில் தமிழ்நாடு மூன்றாவது இடம் பிடித்துள்ளது. அதில் குஜராத் முதலிடமும் மற்றும் இரண்டாம் இடத்தில் மகாராட்டிரா பிடித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிபுரம், சென்னை, திருப்பூர், கோவை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் ஏழு இடங்களை பிடித்துள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை வரை நடப்பாண்டில், 4.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் ஏற்று மதி செய்யப்பட்டுள்ளன.

சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்கள்

இந்திய அளவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜாம்நகர் அதிகளவு ஏற்றுமதி செய்வதில் முதலிடம் பிடித்துள்ளது. ஜாம்நகர் மாவட்டம் 3.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் 1.9 லட்சம் கோடி ரூபாய், பொருள்களை ஏற்றுமதி செய்து இரண்டாம் இடம் பிடித்து சாதித்துள்ளது.

இதேபோன்று பூனே நகரம் 1.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ‘மும்பை சப்’ 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்து நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அகமாதாபாத் 97 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்து அய்ந்தாம் இடத்தில் உள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளது. காஞ்சிபுரம் முதலிடம் பிடிப்பதற்கான முக்கிய காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிறைந்துள்ள தொழிற்சாலைகள் இருந்து வரு கின்றன. குறிப்பாக செல்போன், வாஷிங் மெஷின், ஏ.சி, கார் உள்ளிட்ட பொருட்களை காஞ்சிபுரம் மாவட்டம் அதிக அளவு ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால், வரும் ஆண்டுகளில் அதிக அளவு பொருள்கள் ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *