ஆத்தூர், ஜூன் 5– ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 30.5.2025 அன்று மாலை 6 மணி அளவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை நூல் திறனாய்வு விழா ஆத்தூர் (சேலம்) ராஜ் கிருஷ்ணா ரெசிடென்சியில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் ச.வினோத் குமார் வரவேற்புரை ஆற்றினார்.
ஆத்தூர் பகுத்தறிவாளர்கழக மாவட்டச் செயலாளர் அ.அறிவுச்செல்வம் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக காப்பாளர் த.வானவில், பொதுக்குழு உறுப்பினர் இரா.விடுதலை சந்திரன் , க.பெரியசாமி பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர், சி.அருண்குமார் பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் பெ.முரளி பகுத்தறிவாளர் கழக மாநகரச் செயலாளர், இளைஞர் அணி கார்முகிலன், சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் தொடக்க உரையாற்றினார்.
திராவிட சித்தாந்தத்தின் மூலம் எதிர்க்க வேண்டும்
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் (ஆசிரியர் பிரிவு) வா.தமிழ் பிரபாகரன் நூல் பற்றிய கருத்துரையும் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கருத்துரையாக வழங்கினார்.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.மோகன் தமிழ்நாடு கல்வியில் கடந்து வந்த பாதைகளை வரலாறாகவும், மனுதர்ம வழியில் கல்வி மறுக்கப்படும் சூழல் வருவதை திராவிட சித்தாந்தத்தின் மூலம் எதிர்க்கப்பட வேண்டும், எரிக்கப்பட வேண்டும், என் பதை வரலாற்று ஆவணமாக கருத்துரையாக எடுத்துரைத்தார். திறனாய்வு உரையாக திராவிட சிந்தனையாளர் எழுத்தாளர் வே.மதிமாறன் சுயமரியாதைக் காரன் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆரியமாடல் கல்வி சிந்தனை குறித்து விமர்சித்து கல்வியை சீரழிக்க வந்த கட்டுக்கடங்காத மதயானை என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
அந்த பதத்தையே நூலுக்கு தலைப்பாக பள்ளிகல்வி துறை அமைச்சர் வைத்திருக்கிறார் என்றும், இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றவுடன் நூல் பற்றி திறனாய்வு நிகழ்ச்சி முதன் முதலில் ஆத்தூர் பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை நூல் ஒரு திராவிட சிந்தனையோடும், அம்பேத்கரிய சிந்தனையோடும், பொதுவுடமை சிந்தனையோடும், சமூக நீதி சிந்தனையுடன், இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்த சிந்தனையோடும் அழகையான பார்வையில் பல்வேறு பணி களுக்கு இடையேயும் நூலை அழகாக தொகுத்து அருமையான சிந்தனைகளை விதைத்திருக்கிறார்.
இடஒதுக்கீடு பறிபோகும்
இந்த நூல் 2020 – தேசிய கல்விக் கொள்கை என்பது மக்களின் பேராபத்து என்றும், அது நடைமுறைப்படுத்தப்பட்டால் இட ஒதுக்கீடு பறிபோகும், புதிய குலக்கல்வியாக செயல்படும், அரசு பள்ளிகளுக்கு மூடு விழா நடைபெறும் என்றும், ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்படும் பனி மூப்பு, பதவி உயர்வு, ஆசிரியர் பணி பாதுகாப்பு பறிக்கப்பட்டு, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் காரர்கள் ஆசிரியர்களாக வருவார்கள், மாணவர்களின் கல்வி நலம் கேள்விக்குறியாக்கப்படும், பொதுப் பள்ளிகள் உருவாக்கப்படும் பள்ளிகள் எண்ணிக்கை குறைக்கப்படும், வயதுக்கு ஒவ்வாத பொதுத்தேர்வுகள் நடைபெறும் ,விஸ்வகர்மா திட்டம் நுழைக்கப்படும், குழந்தை தொழிலாளர்கள் குடும்ப தொழில் செய்வது அங்கீகரிக்கப்பட்டு, சனாதன மனுதர்ம நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும், இதை திட்டமிட்டு நெடுங்காலமாக நம் கொள்கை எதிரிகள் செய்து வருகிறார்கள்.
இந்த New Education Policy என்பது No Education Policy ஆகும். இதை ஒழிக்க தீர்வு என்ன என்பதும் இந்த நூலிலே சுட்டிக்காட்டி உள்ளார். கல்வியிலே தமிழ்நாடு திராவிட சிந்தனைகளால் வளர்ந்திருக்கிறது என்றும், இந்த பாலிசி நடைமுறைகளை எல்லாம் எதிர்த்து போராடி தமிழ்நாடு வெல்லும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இந்தியா விற்கே முன்மாதிரியாக அதை நடைமுறைப்படுத்துவார் என்றும், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், அதை காலம் சொல்லும் என்று திக்கெட்டும் பரவும் அளவிற்கு திறனாய்வு உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பெருந் திரளான ஆசிரியர்களும், பேராசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்களும், உறுப்பினர்களும், திராவிட முன்னேற்ற கழக நகரச் செயலாளர் கே.பாலசுப்ரமணியம், மாவட்ட அமைப்பாளர் மு.ரா.கருணாநிதி, மாவட்ட கழக பிரதிநிதி ஸ்டாலின், மாணவர் அணி அமைப்பாளர் பர்கத், கவுன்சிலர் பாஸ்கர், விஜயன், மனோகர், மகளிர் அணி தோழர்களும், மாணவர்களும், பெருந்திரளாக கலந்து கொண்ட னர். இறுதியாக ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம் நன்றி யுரையாற்றினார்.