சென்னை, ஜூன்.5- அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல் நாள் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிவில் 9,400 மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
இளங்கலை பட்டப்படிப்பு
தமிழ்நாடு உயர்கல்வித்துறை யின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், 159 பாடப் பிரிவுகளில் உள்ள 1லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்கள் உள்ளன. இதற்கான 2025-2026-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (மே) 7-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மொத்தம் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். தொடர்ந்து, மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டன.
இந்த சூழலில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில், அந்தமான் நிகோபாரை சேர்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான ஒதுக்கீடு சிறப்பு கலந்தாய்வு மற்றும் 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை, மேனாள் ராணுவ வீரர்களின் வாரிகளுக்கான சிறப்புபிரிவு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 2 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு பட்டப்படிப்புக் கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு
இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் படிப்பு 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று (4.6.2025) தொடங்கியது. கலந்தாய்வில் ஏராளமான, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பிளஸ்-2 வகுப்பில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்த மாணவர்கள், பி.எஸ்சி. கம்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பை தேர்வு செய்ய ஆர்வம் காண்பித்தார்கள். அறிவியல் பாடப்பிரிவில் சில பிரிவுகளை காட்டிலும், பல பிரிவுகளுக்கு மாணவர்கள் முதல் நாளில் ஆர்வம் காட்டவில்லை.
குறிப்பாக, பி.எஸ்சி. கணித பாடத்தை குறைந்த அளவிலான மாணவர்களே தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம், பிளஸ்-2 வகுப்பில் வணிககணிதம், வணிகவியல் உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்த மாணவர்கள், தங்கள் பிடித்த கல்லூரிகளில் பி.காம் பொது மற்றும் பி.காம் சி.எஸ். ஆகிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க முனைப்பு காண்பித்தார்கள்.
மாணவிகளே அதிகம்
முதல் நாள் கலந்தாய்வில் மாணவர்களை விட, மாண விகளே அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில், கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 400 மாணவ, மாணவிகளுக்கு பட்டப்படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், மாணவிகளுக்கே அதிக எண்ணிக்கையில் இடம் கிடைத்திருப்பதாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.