புதுடில்லி, ஜூன் 04 லஞ்சம் கேட்ட இந்திய வருவாய்த் துறை (அய்ஆர்எஸ்) அதிகாரியை டில்லியில் சிபிஅய் கைது செய்தது. அவரிடமிருந்து ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வருவாய்த் துறை அதிகாரி
டில்லியில் வருமான வரி செலுத்துவோர் சேவை துறை இயக்குநரகத்தின் கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றுபவர் அமித்குமார் சிங்கால். இவர் 2007-ஆம் ஆண்டு இந்திய வருவாய்த் துறை பிரிவைச் சேர்ந்தவர். இந்நிலையில், அதிகாரி சிங்கால் மீது டில்லியில் லாபினோ’ஸ் பீட்சா நிறுவனத்தின் உரிமையாளர் சனம் கபூர் என்பவர் சிபிஅய்யிடம் புகார் அளித்தார்.
ரூ.1 கோடி பறிமுதல்
அதனடிப்படையில் டில்லி மற்றும் பஞ்சாபில் சிங்காலுக்கு சொந்தமான வீடுகளில் சிபிஅய் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.1 கோடி ரொக்கம் மற்றும 3.5 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சிபிஅய் அதிகாரிகள் நேற்று (3.6.2025) கூறியதாவது: சனம் கபூருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வருமான வரி தாக்கீது (நோட்டீஸ்) அனுப்பப்பட்டுள்ளது. அந்த பிரச்சினையை தீர்த்துவைக்க ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார் அதிகாரி சிங்கால். மேலும், லஞ்சம் தராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிப்பதாகவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து கபூர் அளித்த புகாரை தீவிரமாக விசாரித்தோம். அதன்பிறகுதான் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. சிபிஅய் அதிகாரிகள் வகுத்த திட்டத்தின்படி, அமித் குமார் சிங்காலின் உதவியாளர் ஹர்ஷ் கோடக் என்பவர் பீட்சா நிறுவன உரிமையாளரான சனம் கபூரிடம் முதல்கட்டமாக ரூ.25 லட்சத்தை லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கினார். டில்லிக்கு பணி மாற்றலாகி வருவதற்கு முன்னர் மும்பையில் சுங்கத் துறையில் இணை ஆணையராக சிங்கால் பணியாற்றி உள்ளார். சிங்காலின் உதவியாளர் ஹர்ஷ் கோடக்கையும் கைது செய்துள்ளோம்.
கபூர் அளித்த தகவல்கள் அனைத்தையும் தீவிரமாக விசாரணை நடத்திய பிறகே அதிகாரி அமித் குமார் சிங்கால், அவரது உதவியாளர் ஹர்ஷ் கோட்டக் ஆகியோரை கைது செய்தோம். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். வரும் 13-ஆம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு சிபிஅய் அதிகாரிகள் தெரிவித்தனர்.