‘விடுதலை’ 91ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் 63 ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அன்பார்ந்த ‘விடுதலை’ வாசக நேய பெரு மக்களே,
91ஆம் ஆண்டில் இன்று (1.6.2025) அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை’க்கு நமது சுயமரியாதை உணர்வாளர்களின் குடும்பமாகிய தாங்கள் தொடர்ந்து இதுவரை தந்து வருகின்ற வாசிப்புடன் இணைந்த நேசிப்பிற்குத் தனது தலை தாழ்ந்த நன்றியை, ‘விடுதலை’ கனிவுடன் அளித்து மகிழ்கிறது.
வயதிலும், கொள்கை வளர்ச்சியிலும் ‘விடுதலை’ வயதுடன் நான் போட்டியிடுகிறோனோ அல்லது ‘விடுதலை’ என்னுடன் போட்டியிடுகிறதோ என்றுதானே கேட்கத் தோன்றுகிறது உங்களுக்கு?
விடை எளிதில் கிடைக்குமா?
‘இரண்டும் இரண்டு கண்கள் போல! இரண்டும் இதயமும், மூளையும் போல!’ என்று கூட நீங்கள் விடை சொல்லும் அளவுக்கு நான் ‘விடுதலை’யுடன் ஒன்றித்து விட்டேன்.
இந்நாள், ‘‘அந்தப் பொறுப்புடன் என்னால் முடியும் வரை – என் வாழ்வு முடியும் வரை – என் இறுதி மூச்சு உள்ளவரை ‘விடுதலை’ இலக்கு நோக்கி உழைத்தே வருவேன்’’ என்று உறுதியைப் புதுப்பிக்கும் நாள் – இந்தச் சமூக விழிப்புணர்வுக்கான விடியல் பிறந்த நாள்! ‘விடுதலை’ தொடர்ந்து வீறு கொண்டு, தெம்புடன், அங்கிங்கெனாதபடி, எங்கெங்கும் ‘விடுதலை’, வீடுதோறும் ‘விடுதலை’, நாளும் அறிவுபெற நாளும் ‘விடுதலை’ என்ற இலக்கு நோக்கிப் பயணிக்க ஒவ்வொருவரும் ஒத்துழையுங்கள்!
தோழர்களே, ‘விடுதலை’யின் ‘வாலிப’ வாசகர்களே,
நூற்றாண்டு தாண்டிய, நமது கொள்கை வெற்றியின் எல்லை உலகளாவியது என்பதால்,
‘உலகம் பெரியார் மயம்!
பெரியார் உலகமயம்’
என்பதை நிலைநிறுத்த,
தந்தை பெரியார் என்ற நம் அறிவு ஆசான் தந்த போராயுதத்தின் வீச்சு ஊர்தோறும் உலகம் தோறும் சென்றிட உண்மையை விரும்பும் உன்னதத் தோழர்களே!!
சந்தாக்கள் மூலமும், PDF மூலமும் உலகெல்லாம் பரவியது ‘விடுதலை’ என்று கடமையாற்ற களத்திற்கு வாருங்கள் – கழகச் செயல் வீரர், வீராங்கனைகளே!
‘விடுதலை’ வாழ்ந்தால் எவரே வீழ்வர்?
‘விடுதலை’ வீழ்ந்தால் எவரே வாழ்வர்?
சுய அறிவின் ஊற்றாம் நமது உத்தமத் தலைமையின், உண்மைத் தொண்டர்களே, உறுதியான நம் கொள்கை பரவிட யோக்கியமான பிரச்சாரக்காரர்களாக ‘விடுதலை’ வளர்ச்சியில் தோழர்களே, உங்கள் பங்கு என்ன?
தலைமைக்குத் தாருங்கள்!
ஆவலுடன் எதிர்நோக்கும் உங்கள் ஆசிரியர்,
அய்யா பணித்த கடமை வீரன்,
கி.வீரமணி
ஆசிரியர்,
விடுதலை
சென்னை
1.6.2025