பிரிஜ்பூசன் சரண்சிங் மீதான வழக்கும் – செயல்பாடுகளும்  

viduthalai
3 Min Read

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) மேனாள் தலைவரும், பாஜக மேனாள் எம்பியுமான பிரிஜ்பூசன் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை அளித்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில், பிரிஜ்பூசன் மீது பாலியல் துன்புறுத்தல் (பிரிவுகள் 354, 354A, 354D) மற்றும் குற்றவியல் மிரட்டல் (506(1)) போன்ற இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மைனர் வீராங்கனை அளித்த புகாரில், போக்சோ சட்டத்தின் (சிறார் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்புச் சட்டம்) பிரிவு 10 (தீவிரமான பாலியல் துன்புறுத்தல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிரிஜ்பூசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசுக்கு அழுத்தம் ஏற்பட, விளையாட்டுத் துறை அமைச்சகம் மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டில்லி காவல் துறை பிரிஜ்பூசன் மீது  குற்றவழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.  இந்த விசாரணைக்காக 180க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர்.

மைனர் வீராங்கனை அளித்த புகாரில், காவல்துறை சமர்ப்பித்த மூடல் அறிக்கையை (Closure Report) நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த அறிக்கையில்,  பிரிஜ்பூசன்  மீதான வழக்கு சரியான திசையில் சென்றுகொண்டு இருப்பதாகவும் அவருக்கு எதிராக “எந்த சான்றும் கிடைக்கவில்லை” என்று காவல்துறை தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில், பிரிஜ்பூசன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

மற்ற வழக்குகள் போக்சோ வழக்கு கைவிடப் பட்டாலும், மற்ற 6 மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ்பூசன் மீது தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் பின்தொடர்தல் தொடர்பான வழக்குகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

ஜனவரி 2023 மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ்பூசன் மீது பாலியல் புகார் அளித்து டில்லியில் போராட்டம் தொடங்கினர்.

ஏப்ரல் 28, 2023 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு டில்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மே 2023 போராட்டங்கள் தீவிரமடைந்தன. மல்யுத்த வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்தனர்.

ஜூன் 2023 பிரிஜ்பூசன் மீது டில்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிகை பதிவு செய்தனர்.

மே 10, 2024 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரில் பிரிஜ்பூசன் மீது குற்றச்சாட்டுகளைப் பதிய நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மே 26/27, 2025 பிரிஜ்பூசன் மீதான போக்சோ வழக்கை டில்லி பாட்டியாலா நீதிமன்றம் முடித்து வைத்தது.

மைனர் பெண் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டாலும் மீதி ஆறு வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட வழக்கில் டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை யடுத்து, பிஜேபியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மேனாள் தலைவருமான பிரிஜ்பூசல் சரண்சிங் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு ‘வெற்றி’ ஊர்வலம் நடத்தியுள்ளனர். அயோத்தி விமான நிலையத்தில் அவர் இறங்கியதும் மேள தாளங்கள் முழங்க பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலத்தில் 100 கார்கள், வேன்கள் மற்றும் டிரக்குகள் அணி வகுத்துச் சென்றன. ‘பிரிஜ்பூஷன் ஜிந்தாபாத்!’’ என்று முழக்கங்களை எழுப்பி அழைத்துச் சென்றுள்ளனர்.

பிரிஜ்பூஷன் சரண்சிங்கால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சக மல்யுத்த வீராங்கனைகள் டில்லியில் தொடர் போராட்டம் நடத்திய பிறகுதான், வழக்கே பதிவு செய்ய்பட்டது.

சம்பந்தப்பட்டவர் பிஜேபிகாரர் என்பதால் காவல்துறை எப்படியெல்லாம் வளைந்து நெளிகிறது பார்த்தீர்களா? இதுதான் பிஜேபியின் நேர்மையும் – ஒழுக்கமும்!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *