பலியா, மே 31 பாஜக ஆளும் மாநிலங்கள் “இரட்டை எஞ்சின்” வேகத்தில் ஆட்சி செய்வதால் நாடு முன்னேறுவதாக பிரதமர் மோடி அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில “இரட்டை எஞ்சின்” ஆட்சியில் 4 பெண்களுக்குக் கைப்பேசி வெளிச்சத்தில் மகப்பேறு பார்க்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
உத்தரப்பிரதேச மாநிலம் பலியா பகுதியில் உள்ள பெருவார்பாரி அரசு சுகாதார மய்யத்தில் 26.5.2025 அன்று இரவு மின்சாரம் இல்லாத காரணத்தினால், 4 கர்ப்பிணிப் பெண்களுக்குக் கைப்பேசி வெளிச்சத்தில் மகப்பேறு பார்த்ததாக உள்ளூர் ஊடகங்கள் மூலம் 2 நாள்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான காட்சிப் பதிவுகள், ஒளிப்படங்கள் சமூகவலைத் தளங்களில் வேகமாக வைரலாகின. இந்நிலையில், நேற்று (30.5.2025) இந்த நிகழ்வு தொடர்பாக மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் சஞ்சீவ் பர்மன், “4 பெண்களுக்குக் கைப்பேசி வெளிச்சத்தில் மகப்பேறு பார்க்கப்பட்டது உண்மை தான். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.
இதற்கிடையே கைப்பேசி வெளிச்சத்தில் மகப்பேறு பார்க்கப்பட்ட பெண்கள் ராஜ்பூரைச் சேர்ந்த நீது தேவி, அச்சூஹியைச் சேர்ந்த மஞ்சு தேவி, அதாரைச் சேர்ந்த பிங்கி தேவி, அபயலைச் சேர்ந்த ரசியா ஆகிய 4 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.