2017 நினைவிருக்கிறதா? ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 8 வயது ஆசீஃபா என்ற சிறுமியைக் கோயிலுக்குள் அடைத்து கா(வி)லிகள் பல நாட்கள் கூட்டுப் பாலியல் வன்முறை வேட்டையாடினர். பிறகு அந்தப் பெண்ணை அடித்துக் கொன்று தூக்கி எறிந்தனர்.
ஆம், கோயில் கருவறை காமக் கோட்டமானது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக பிஜேபி அமைச்சர்கள், நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த போது பிஜேபி வழக்குரைஞர்கள் அடேயப்பா, எவ்வளவுக் கூத்தடித்தார்கள் – கூக்குரல் போட்டார்கள்!
விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் கொஞ்சமா, நஞ்சமா?
இவ்வழக்கில் மிகவும் தீவிரமாகவும், உன்னிப்பாகவும் செயல்பட்ட காவல்துறையின் பெண் அதிகாரி ஸ்வேதம்பரி சர்மா, குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் இருந்து, அவர்களை சிறையில் அடைப்பது வரையில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர் ஆவார். விசாரணையின் போது அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
செய்தியாளர்:- இந்த வழக்கை நீங்கள் வெளிக் கொண்டு வந்து உள்ளீர்கள், குற்றவாளிகள் சிறையில் உள்ளார்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து இலக்காக்கப்பட்டு வருகிறீர்கள். இது உங்களை எப்படி பாதிக்கிறது?
ஸ்வேதாம்பரி:- 21-ஆம் நூற்றாண்டிலும் பாலியல் வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறுவது உண்மையில் மிகவும் வெட்கக்கேடானது. பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்பதுதான் பிரதமர் மோடியின் முழக்கமாக உள்ளது, ஆனால் படித்த பெண், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதிக்காகப் போராடும்போது அவமதிக்கிறார்கள். என்னுடைய தீர்மானத்தில் நான் உறுதியாக இருக்கிறேன், நீதித்துறையின்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
செய்தியாளர்: வழக்கில் உண்மையை வெளிக் கொண்டு வருவது எவ்வளவு கடினமானதாக இருந்தது?
ஸ்வேதாம்பரி: இதுபோன்ற வழக்குகளில் ஒருநபரால் மட்டும் உண்மையை வெளிக்கொண்டு வருவது என்பது கிடையாது. எங்களுடைய டி.ஜி.பி. எஸ்.பி. வாயித் முக்கிய மான பணியை மேற்கொண்டார். சிறப்புப் புலனாய்வுப் பிரிவின்மீது நம்பிக்கை கொண்டு இருந்தார். எங்களுடைய டி.எஸ்.பி.யின் வழிகாட்டுதலின்படி செயல் பட்டோம். எங்களுடைய குழுவில் 6 பேர் இடம்பெற்று இருந்தோம். எஸ்.எஸ்.பி. கண்காணித்தார். இந்த வழக்கைத் தீர்ப்பதில் ஜம்மு காஷ்மீர் குற்றப்பிரிவு இரவு, பகலாகப் பணியாற்றியது. நாங்கள் சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கச் சென்ற போது தாக்குதலுக்கு உள்ளானோம். நாங்கள் இந்த வழக்கில் 72 நாட்களில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தோம். நாங்கள் ஒவ்வொரு நாளும் பிரச்சினையை எதிர்கொண்டோம். பாலியல் வன்முறை குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய தேசியக்கொடியை அசைத்தது என்னை ஓர் அதிகாரியாக மிகவும் வேதனையடையச் செய்தது. மக்கள் எங்களுடன் பேசுவதற்கு அச்சப் பட்டார்கள். அவர்களை தைரியப்படுத்த முயற்சி செய்தோம், குற்றம் செய்யாதவர்கள் பயப்படத் தேவை யில்லை என அவர்களுக்கு ஊக்கமளித்தோம்.
செய்தியாளர்:- இந்த வழக்கு எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது?
ஸ்வேதாம்பரி:- எங்களுடைய முதல்கட்ட குற்றப் பத்திரிகை தயாராகிவிட்டது, துணை குற்றப்பத்திரிகை ஒன்று நிலுவையில் உள்ளது. எங்களுடைய வழக்கு மிகவும் உறுதியாக உள்ளது. வாக்குமூலங்கள் அடிப் படையில் மட்டும் கிடையாது, அறிவியல் சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
செய்தியாளர்:- இந்த வழக்கில் சிலர் மத சம்பந்தமான விஷயங்களையும் வெளியிடுகிறார்கள். இது உங்களை எப்படி உணரச்செய்கிறது?
ஸ்வேதாம்பரி:- ஆமாம் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள். நான் டோக்ரா (உத்தராகாண்ட் மலைப்பிரதேசத்தில் வாழும்) பார்ப்பனப் பிரிவைச் சார்ந்தவள். இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் சிலர் என்னிடம் வந்து நீங்கள் பார்ப்பனர்கள்மீது நடவடிக்கை எடுத்தது தவறு, பார்ப்பனர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் பாவம் பிடிக்கும் என்று தெரியாதா? நீங்கள் பார்ப்பன குலத்திற்கு இழுக்கு என்று கூறிவிட்டுச் சென்றனர். ஒருவகையில் எனது அலுவலகத்திற்கு வந்து என்னை மிரட்டியும் பார்த்தனர்
முதலில் மனிதராக இருப்போம், பின்னர் பார்ப்பனரா, சத்திரியரா, இந்துவா அல்லது இஸ்லாமியரா என்பது பற்றி யோசிப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.
பார்ப்பன ஆதிக்க வெறிப் பாம்பு எப்படி எப்படி எல்லாம் தலைதூக்கிப் படம் எடுத்து ஆடுகிறது என்பதைப் பார்த்தீர்களா?
***
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் அய்ந்து வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா எனும் இளைஞர் அந்தச் சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி அங்கிருந்த கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்தக் கோயிலிலிருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே – உடனே அந்த சிறுமியின் பாட்டி அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது அந்த இளைஞர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததைப் பார்த்து அவரும் அலறியுள்ளார். உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில், அந்தப் பகுதி மக்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த இளைஞரை சிறிது நேரத்திற்குள்ளாக மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறி காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர். (இது வழமையாக பல இடங்களில் காவல்துறை சொல்லக் கூடிய ஒன்றுதான்!)
ஆக்ரா கோவிலில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேசிய மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி பபிதா சவுகான், கோவிலில் நடந்த இந்தக் கொடுமை தொடர்பாக பேசும் போது, ‘‘சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று தெரியவருகிறது, இருப்பினும் விசாரணை செய்துகொண்டு இருக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சமரசமாக சென்று விட்டனர்.
பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் புதியவர்களோடு பேசுவதை தவிர்க்க கற்றுக்கொடுக்கவேண்டும், மேலும் சிறுமியின் பேச்சை வைத்து எந்த ஒரு முடிவிற்கும் வந்துவிடக்கூடாது. இது போன்ற விவகாரங்களில் பெற்றோர் கவனமாக இருந்திருந்தால் இந்த பிரச்சினை பெரிய அளவில் வர வாய்ப்பில்லை இது தொடர்பாக காவல்துறையினரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது’’ என்று பபிதா சவுகான் மேலும் கூறுகிறார். வட மாநிலத்தில் மகளிர் ஆணையம் எந்த யோக்கியதையில் இருக்கிறது பார்த்தீர்களா?
வட மாநிலங்களுக்குப் போவானேன்?
பக்கத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் மச்சேஸ்வரன் கோயிலில் 2009ஆம் ஆண்டு என்ன நடந்தது?
தேவநாதன் என்ற அர்ச்சகப் பார்ப்பனர் அக்கோயில் கருவறையில் பல பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டான். அந்த அயோக்கித்தனத்தைக் கைப்பேசியில் படம் பிடித்து வைத்துக் கொண்டு, அந்தப் படங்களை அடிக்கடி காட்டிக் காட்டி, மீண்டும் மீண்டும் அந்தப் பெண்களிடத்தில் உறவு கொண்டதும் நினைவிருக்கிறதா?
அதே போல சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பத்ரிநாத் என்ற அர்ச்சகப் பார்ப்பான் பெண்களிடம் வன்புணர்வு செய்ததும் அம்பலத்திற்கு வந்ததே.
பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம்! நம்பித் தொலையுங்கள்.
கோயில்கள், விபச்சார விடுதிகள் என்று சொன்ன காந்தியாரின் வாய்க்குச் சர்க்கரைத்தான் போட வேண்டும்!
(தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 586, 587)