போரால் அப்பாவிகள் உயிரிழப்பார்கள் என்று கூறி
இந்திய ராணுவ நடவடிக்கையை விமர்சித்த
மும்பை, மே 30- ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா – பாகிஸ்தான் போர் குறித்தும் சமூக வலைத்தளத்தில் போரால் அப்பாவிகள் உயிரிழப்பார்கள் என்று பதிவிட்டதற்காக 19 வயது பொறியியல் மாணவியை மகாராட்டிரா காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே இந்தப் பதிவிற்காக சிங்காட் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் காலேஜ் அந்த மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கியது. இதனையடுத்து, கைது செய்யப்பட்டதற்கும் கல்லூரியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்தும் அந்த மாணவி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவுரி கோட்சே தலைமையிலான அமர்வு, உடனடியாக மாணவியை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
மேலும், “ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தியதால் அவருடைய வாழ்க்கையை நீங்கள் இப்படித்தான் அழிப்பீர்களா? உங்களால் ஒரு மாணவியின் வாழ்க்கை பாழாகிவிட்டது. மாணவியின் வாழ்க்கையில் விளையாட அரசும், கல்லூரி நிர்வாகமும் யார்? என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட நீதிபதிகள் மகாராட்டிர அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.