தலைவர்களே! தாய்மார்களே! தோழர்களே!
சொற்போர் கழகத்தின் சார்பாய் கூட்டப்பட்ட இந்தப் பொதுக்கூட்டத்தில் தலைமை வகிக்கும் புலவர் சாமிசிதம்பரனார் அவர்கள் தலைமையில் ‘வடநாடும் தென்னாடும்’ என்ற தலைப்பில் பேசக் கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்ச்சி அடைகின்றேன். முதலாவதாக சொற்போர் கழகம் என்பதைப் பற்றி சிறிது பேசிவிட்டு பிறகு தலைப்பைப் பற்றி பேசுகிறேன்.
சொற்போர் என்பதற்கு வாய்ச் சண்டை என்று பொருள் படும். ஆனால், இந்தக் கழகம் வாய்ச் சண்டை போடும் கழகம் அல்ல. அவரவர் கருத்தைத் தாராளமாக எடுத்துச் சொல்ல இடமளிக்கும் கழகமாகும். அதனால்தான், இக்கழகம் கட்சி பேதமற்ற கழகம் என்றும் யாரும் எந்த விஷயத்தைப் பற்றியும் அவரவர்கள் கருத்தைத் தாராளமாகப் பேசலாம் என்றும், அதன்மூலம் மக்களுக்குப் பேச்சு பயிற்சி ஏற்பட வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் நம்மை வரவேற்ற கழகச் செயலாளர் தெரிவித்தார்.
ஆகவே, இக்கழகம் ஒரு பகுத்தறிவைப் பயிற்றுவிக்கும் கழகம் என்றே கூறுவேன். பொதுவாக பகுத்தறிவு என்றாலே அதிலும் முழுப் பகுத்தறிவு என்றாலே மக்கள், ஏன்? அறிஞூர்கள் பலர் கூட நாஸ்திகம் என்று கூறுவார்கள்.
பொதுவாக மக்களின் பகுத்தறிவைப் பயன்படுத்தாதவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள். என்றாலும் சில விஷயங்களில் பகுத்தறிவைப் பயன்படுத்தத் தடை விதித்து விடுவார்கள். தாங்களேகூட தடை ஏற்படுத்திக் கொள்ளுவார்கள். காரணம் என்னவென்றால், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, ஒத்து வராத சில காரியங்களில் ஈடுபட்டவர்களும், நம்பிக்கை கொண்டு கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களும் மூட நம்பிக்கையின் பேரால் பயன் அடைபவர்களும் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றிப்பேசும் போது, “இதிலெல்லாம் பகுத்தறிவைப் பயன்படுத்தக் கூடாது; அப்படியே நம்ப வேண்டியதுதான்” என்பார்கள். ஏன், என்று நாம் கேட்டோமேயானால், “அதில் பகுத்தறிவைச் செலுத்துவதற்கு உனக்குத் தகுதி போதாது. பெரியவர்கள் நன்றாய் ஆராய்ந்தும், தெய்விகத் தன்மையிலும் ஏற்பாடு செய்த விஷயங்களை நீயும் நானும் சாதாரண மனிதர்கள் ஆராய்வது – தர்க்கிப்பது என்றால், அது நம்பிக்கை இல்லாத்தன்மை, நாஸ்திகம் ஆகும்” என்று சொல்வார்கள்.
ஆனால், பகுத்தறிவுவாதி என்பவன் எதற்கும் காரண காரியம் தேடியே தீருவான். உலகில் சுத்தப் பகுத்தறிவுவாதிகள் கொஞ்சம் பேர்கள்தான் இருப்பார்கள். அதிகம் பேர்கள் நம்பிக்கைவாதிகளாகத்தான் இருப்பார்கள்.
காரணம் என்னவென்றால், உலக வாழ்வு பெரிதும் இயற்கைக்கு மாறுபட்ட தன்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதை ஆராய்ந்தால் இன்றைய அமைப்புக்கு நேர் மாறாகவே பல காணப்படும். அப்படிக் காணப்படுவதற்குப் பரிகாரம் தேடினால் அது உலக அமைப்பையே மாற்ற வேண்டி வரும். ஆதலால், பழக்க வழக்கங்களால் கண்மூடித்தனமாய் நடப்பவர்களுக்கும், இயற்கை மாற்றத்தால் சராசரித் தன்மைக்கு மேம்பட்ட பயன் அனுபவித்து வருபவர்களுக்கும், பகுத்தறிவு சங்கடமாகத் தோன்றும். அதனால் அந்த அனுபவிப்பாளர்கள் மற்ற தரங்களிலும் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைத் திருப்தியோடு, போதாமை இல்லாமல் இருப்பதற்கு ஆக மூட நம்பிக்கைகளை அவர்களுக்குள் புகுத்த வேண்டியதாகிறது. மூட நம்பிக்கை பாரம் பரியமாக வாழ்க்கையில் சகல துறைகளிலும் பழக்கத்தில் அனுபவத்தில், வண்ணத்தில், நடத்தையில் இருந்து வருவதால் அதிகமான பேர்கள் அதற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
மூட நம்பிக்கைக்கு மாறுபட்டவர்களுக்குப் பொதுமக்கள் எதிர்ப்பும் வேறுபாடுணர்ச்சியும் ஏற்படுவதாக பகுத்தறிவுக்குச் செல்வாக்கு இல்லாமலும் பெருக்கத்திற்கு இடமில்லாமலும் போய்விடுவதால் பகுத்தறிவாளர்கள் குறைந்தவர்களாக ஆகிறார்கள். பகுத்தறிவு இன்று எல்லா மக்களுக்கும் எல்லாத் துறைகளி லும் செலுத்தப்படுவது சாத்தியமாக இருக்கக் கூடுமானால் மனித சமுதாயத்தில் இன்று காணப்படும் பேத நிலைமைகளும், போதாமை உணர்ச்சிகளும், மனக்குறைகளும், ஒப்பற்ற போட்டித் தன்மைகளும் இருப்பதற்கு இடமே இல்லாமற் போய்விடும்.
வாழ்க்கையில் பேத நிலையும் போதவில்லையே என்கின்ற மனக்குறையும், தனிப்பட்ட சுயநலப் போட்டித் தொல்லையும் எந்த நாட்டிலாவது இருக்குமானால், அந்த நாட்டு மக்களுக்கு முழுப் பகுத்தறிவு இல்லையென்றும், எந்த நாட்டிலாவது அவை இல்லாமல் வாழ்வில் மக்கள் மனத் திருப்தியுடன் இருப்பார்களானாhல் அந்த நாட்டில் பகுத்தறிவு ஆட்சி புரிகிறது என்றும் தான் அர்த்தமாகும்.
உதாரணமாக ரஷ்யா முதலிய நாடுகளில் வாழ்க்கையில் மக்களுக்குப் போட்டியும், மனக்குறையும் கவலையும் இல்லாமல் யாவரும் சம அந்தஸ்தோடு சம அளவு அனுபவத்தோடு இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பகுத்தறிவு ஆதிக்கம் தான். அதனாலேயேதான் அந்த நாட்டை “நாத்திக நாடு”, “கட வுள் இல்லாத நாடு” என்று மற்றவர்கள் குறை கூறுகிறார்கள்.
இதிலிருந்தே ஆத்திகம் என்பதும் கடவுள் உள்ள நாடு என்பதும், உயர்வு – தாழ்வுத் தன்மையும், மிகுதி – குறைவு அனுபவமும், ஒருவருக்கொருவர் பொறாமை போட்டியும், மனக்குறை வாழ்வும், உடையதாக இருக்கக் கடமைப்பட்டது என்பது விளங்குகிறது.
ஆகவே, மனித வாழ்வில் பேத நிலையும், உயர்வு – தாழ்வும், மிகுதி – குறைவும், மனக் கவலையும் போட்டியும் இல்லாமல் மக்கள் வாழ வேண்டுமானால், கடவுள் ஒழிந்தாக வேண்டும்; நாத்திகம் பரவ வேண்டும்” என்று ஆகிறது.
மக்கள் எவரும் கடவுளை ஒழிக்க வேண்டிய தில்லை. நாத்திகத்தைப் பரப்ப வேண்டியதில்லை. ஆனால், எந்தக் காரியத்தையும், எந்த அனுபவத்தையும் பகுத்தறிவைக் கொண்டு பூரண சுயேச்சையுடன் ஆராய்ந்து பார்த்தால், கண்டிப்பாய் கடவுளும், ஆத்திகமும் மறைந்தே போகும். அதற்கு அதாவது பகுத்தறிவு வளர்வதற்கும், ஆராய்ச்சித் தன்மை பழக்கப்படுவதற்கும் இந்த மாதிரியான சொற் போர்க் கழகம் மிகவும் அவசியமானதாகும். எனவே, அமைந்தகரை சொற்போர் கழக அமைப்பை நான் மிகுதியும் பாராட்டுகிறேன். இதைப் பக்கத்து மக்களும், நம் இளைஞூர்களும் சிறப்பாக திராவிட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்க்கையில் செல்வத்தில்… பிற்பட்டிருக்கிற மக்கள், பெரிதும் இக்கழகத்தை ஆதரித்துப் பயன்பெறவேண்டுமாக வேண்டிக் கொள்கிறேன்.
(31.1.1951 அன்று அமிஞ்சிக்கரை சொற்போர் கழக அமைப்பில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை – ‘விடுதலை’ 5.2.1951)