புதுடில்லி, மே 30 இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடர்ச்சியாக கூறிவருவது தொடர்பாக மவுனம் கலைத்து, பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.
அமெரிக்கா தலையீடா?
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22 ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்கு தலையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா ஏவுகணைகள் வீசி அழித்தது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் எல்லை யோர கிராமங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தானின் விமானப் படை மற்றும் ராணுவத் தளங்கள் தகர்க்கப்பட்டன. பின்னர், இருதரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதன்படி, நான்கு நாள்களுக்கு நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. எல்லையில் பதற்றம் தணிந்து, அமைதி திரும்பியது.
இந்தச் சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பை இரு நாடுகளுக்கும் முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து. சண்டையை நிறுத்திக்கொள்ளாவிட்டால் இரு நாடுகளுடனும் வர்த்தகத்தில் ஈடுபடப் போவதில்லை என்று எச்சரித்து, அணு ஆயுத நாடுகளுக்கிடையேயான போரைத் தவிர்த்ததாகவும் டிரம்ப் தெரிவித்தாா்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் பன்னாட்டு வர்த்தகத்துக்கான நீதிமன்றத்தில் அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவர்ட் லுட்னிக் கடந்த வாரம் சமா்ப்பித்த அறிக்கையொன்றில், இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த அதிபா் டிரம்ப் தனது வரி விதிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என்று தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தொடா்ச்சியான கூற்றுகள் குறித்த உண்மை என்னவென்று நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதையொட்டி, அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என்று கடந்த
11 நாள்களில் மூன்று நாடுகளில் டிரம்ப் எட்டு முறை கூறியுள்ளார். தற்போது வர்த்தகத் துறை அமைச்சர் லுட்னிக்கும் டிரம்ப்பின் கருத்தை வழிமொழிகிறார். பிரதமர் மோடி இதுகுறித்து மவுனம் கலைத்து, நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.