சென்னை, மே 29 தங்க நகைக் கடனுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரி சீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமனை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
தங்க நகைக்கடன்
இதுகுறித்து அவர் நேற்று (28.5.2025) அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் கடுமையான கவலையை தெரிவிக்கவே இக்கடிதம் எழுதுகிறேன்.
தொழில்கள் பாதிப்படையும்
தங்கத்தை பிணையாகப் பெற்று வழங்கப்பெறும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த வரைவு நெறிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டால் பாதிப்படையக்கூடும்.
அதனால். தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது சரிபார்க்கக்கூடிய வருமான ஆவ ணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் தங்கள் வீட்டுத் தங்கத்தை அடகு வைத்து வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது.தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகள் எளிதாகக் கடன் பெறும் வழியை நேரடியாகக் குறைப்பதுடன், கடன் வாங்கும் பெரும்பாலானோரை முறை யான கடன் வழங்கும் நிதி நிறுவனங் களை நாடுவதையும் குறைத்துவிடும்.
முறைசாரா நிறுவனங்களின்
சுரண்டல் பெருகும்
நகைக்கடன் பெறும் எளிமையான வழிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதால், கிராமப்புற கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது அவர்களை சுரண்டல் நடைமுறைகளுக்கு ஆளாக்குவதுடன் கடனை அதிகரிக்கும் மற்றும் முறையான நிதி சேர்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுக்கும்
மேலும், சிறிய அளவிலான விவசாயக் கடன்களுக்கு கடன் பெறும் திறனை ஆவணமாக மதிப்பீடு செய்யும் முறையானது கிராமப்புறச் சூழலில் செயல்படுத்த முடியாததாக இருக்க வாய்ப்புள்ளது. இது கடன் வழங்கும் நடைமுறையில் தடைகளை உருவாக்கலாம்.
மறுபரிசீலனை
இந்த வரைவு நெறிமுறைகள் கடன் களை தவறான வகைப்படுத்தலுக்கு வழிசெய்வதுடன், தணிக்கை தடைகளுக்கும் காரணமாக அமைந்து அதன் காரணமாக வங்கி மற்றும் கடனாளி இருதரப்பினருக்கும் பொறுப்பு அதிகரிக்கக் கூடும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, நகைக்கடனுக்காக முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடு களை மறுபரிசீலனை செய்ய இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நடைமுறையில் உள்ள கிராமப்புற கடன் வழங்குதலை அங்கீகரிக்கும் விதமாக, ரூ.2 லட்சம் வரையிலான விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக தொடர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். கடன் கோருபவர்களின் நிதி அணுகலைப் பாதுகாக்கும் அதேவேளையில் கடன் பெறும் அளவினை மதிப்பிட ஒரு சமநிலையான ஒழுங்குமுறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
எனவே, விவசாய சமூகத்துக்கும் கிராமப்புற பொருளாதாரத்துக்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் தாங்கள் கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இதே கருத்தை வலியுறுத்தி இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.