புதுடில்லி, மே.28- நிதி வேண்டுமானால் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், தேசியக் கல்வி கொள்கை விவ காரத்தில் தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்கள் அரசியல் செய்வதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கை
ஒன்றிய அரசு புதிய தேசிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி பள்ளியில் மாணவர்கள் 3 மொழிகளை கற்க வேண்டும் என்று கூறுகிறது. ஒன்றிய அரசின் இந்த புதிய கல்விக்கொள்கை மறைமுக ஹிந்தி திணிப்பு என்று கூறி, தமிழ்நாடு அரசு இதனை கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது. இந்த நிதியை வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
சமீபத்தில் டில்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.
இந்தநிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
3 மாநில அரசியல்
அதிக மொழிகளை அறிந்து கொள்வது வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும். தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆங்கிலம், உருது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. சில பள்ளிகளில் ஹிந்தியும் கற்பிக்கப் படுகிறது.
புதிய தேசிய கல்விக்கொள் கையில் எந்த மொழியையும் குறிப்பிட்டு கூறவில்லை. அப்படி ஒரு குற்றச்சாட்டு இருக்குமானால் அதை நிராகரிக்கிறோம். ஆனால் இந்த பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாடு கேரளம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் அரசியல் செய்கின்றன.
ஹிந்தியை திணிக்க மாட்டோம்
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகிறீர்கள். உங்கள் எதிர்ப்பு என்பது அரசியல் சார்ந்தது. நீங்கள் தமிழ்நாட்டின் குழந்தைகளின் உரிமைகளைப் பறிக்கிறீர்கள். நிர்வாகம் என்பது தர்ம சத்திரம் அல்ல. அது விதிகள் மற்றும் அரசியல் அமைப்பின்படி செயல்படுகிறது. ஒன்றிய நிதியுதவி பெறும் திட்டத்தை நடத்தும்போது, அதற்கான நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.
தேசிய கல்விக்கொள்கையில் 3 மொழிகள் என்று மட்டும்தான் உள்ளது. ஹிந்தி கட்டாயம் என்று நாங்கள் கூறவில்லை. மொழியை வைத்து உணர்ச்சிப் பூர்வமான பிரச்சினையை, வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை உருவாக்க பார்க்கிறார்கள். மும் மொழி என்பது பன்மொழி மற்றும் மாநில மொழிகளை ஊக்குவிப்பதற்காகத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு மாநிலத்தின் மீதும் ஹிந்தியை திணிக்க மாட்டோம்.
இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.