புதுடில்லி, மே 27- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தாது என்று தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் கூறினார்.
தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:-
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. சமூகத்தின் கடைசி மனி தனையும் கைதூக்கி விடும்.
சிலர் கூறுவதுபோல், ஜாவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது, சமூகத்தில் பிளவை ஏற்படுத்தாது. அதற்கு பதிலாக, சமூக நீதியை வலுப்படுத்தும். பின்தங்கிய சமூகங்களை உயர்த்தி விடும். அவர்களின் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகிய 3 அம்சங்களை வலுப்படுத்தும்.
துல்லியமான கணக்கு
ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம், ஒவ்வொரு சமூகத்தினரும் எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற துல்லியமான கணக்கு கிடைக்கும்.
அதன்மூலம், முத்ரா திட்டம் போன்ற நலத்திட்டங்களில், ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கு உரிய பங்கை பெற உதவும். அரசின் கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு ஜாதிவாரிக் தரவுகள் அடிப்படையாக இருக்கும்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பணியில் தேசிய பட்டியல் இன ஆணையம் நேரடியாக ஈடுபடாது.
ஆனால், கணக்கெடுப்பு விவரங்கள் வெளியான பிறகு, பட்டியல் இனத்தினர் தங்களுக்குரிய பங்கை பெறுவதில் தேசிய பட்டியல் இன ஆணையம் முக்கிய பங்கு வகிக்கும். இது, சமூக நீதியை நோக்கிய முக்கியமான நடவடிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.
அய்.ஏ.எஸ். தேர்வில்
தந்தை பெரியாரின் பெயரோடு
ஜாதிப் பெயரை இணைப்பதா?
ஜாதிப் பெயரை இணைப்பதா?
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்
கரூர், மே 27- ஜாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் சேர்க்கக் கூடாது என்று கூறிய தந்தை பெரியாரின் பெயரோடு ஜாதியையும் சேர்த்து ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையக் கேள்வியில் இடம் பெற்றதற்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய ஒன்றிய அரசின் உயர் பதவிகளான இந்திய ஆட்சிப் பணி IAS இந்திய காவல் பணி IPS போன்ற பல்வேறு பதவிகளுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் UPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு 25.5.2025 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது.
காலை 9:30 மணிக்கு ஒரு தேர்வு ,
மதியம் 1:30 மணியளவில் ஒரு தேர்வு என இரண்டு தேர்வுகளாக இந்தத் தேர்வு நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற தேர்வில்
who among the following was the founder of the self respect movement?
என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.
இதற்குக் கொடுக்கப்பட்ட விடையாக
Periyar E.V.Ramaswamy Naicker
என்று தந்தை பெரியாரின் பெயரை ஜாதியுடன் சேர்த்துக் குறிப்பிட்டு உள்ளதை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு
7.84 லட்சம் பறவைகள் வருகை
பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கையில் தகவல்
சென்னை, மே 27- தமிழ்நாட்டில் இந்த ஆண்டு, 798 வகைகளை சேர்ந்த, 7.84 லட்சம் பறவைகள் வருகை தந்தன’ என, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பறவைகள் கணக்கெடுப்பு, வனத்துறையால் நடத்தப்படும். இந்த ஆண்டு 38 மாவட்டங்களில், 934 இடங்களில் நீர் பறவைகள் கணக்கெடுப்பும், 1,093 இடங்களில் நில பறவைகள் கணக்கெடுப்பும் நடந்தன. நீர் நிலைகளில் 397 வகைகளை சேர்ந்த 5 லட்சத்து 52,349 பறவைகள் வருகை பதிவானது.
அதில், 136 வகைகளை சேர்ந்த, 1 லட்சத்து 13,606 பறவைகள், வெளிநாடுகளில் இருந்து வந்தவை. நிலப்பகுதிகளில் 401 வகைகளை சேர்ந்த, 2 லட்சத்து 32,519 பறவைகள் வந்தன. அதில், 118 வகைகளை சேர்ந்த 17,670 பறவைகள் வெளிநாடுகளை சேர்ந்தவை. பறவைகள், புலிகள், யானைகள், வரையாடு கள் கணக்கெடுப்பு மூலமாக தெரியும் விபரங்களின் அடிப்படையில், சூழலியல் சார்ந்த மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படும் என வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு கூறினார்.