வெள்ள அபாய பகுதிகளில் இருக்கும் கர்ப்பிணி பெண்களை பிரசவ தேதிக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்

1 Min Read

பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை, மே 27– தென்மேற்கு பருவமழையை யொட்டி சுகாதாரத்துறை சார்பில் விடுத்த வழிகாட்டு நெறிமுறைகள்:

மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் 24 மணிநேரமும் தயாராக இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் அவசரகால மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் போதுமான படுக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மின்வெட்டு ஏற்பட்டால் மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்காத வகையில் ஜெனரேட்டர் மூலம் மின்விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

நிவாரண முகாம்களில் மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும். முகாம்களில் சுகாதாரமான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதிக ஆபத்து இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அத்தியாவசிய மருந்து பொருட்களுடன் விரைவு மீட்புக் குழுக்களின் உதவியுடன் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் குளோரினேஷன் செய்யப்பட வேண்டும். திடக்கழிவுகள் மற்றும் இறந்த விலங்குகளை உடனடியாக பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டால், உடல்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் மற்றும் நிவாரண முகாம்களில் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *