சாதனைக்கு ஊனம் தடையல்ல பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

Viduthalai
3 Min Read

சிம்லா, மே 26  இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சோன்ஜின் அங்மோ, உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில், இந்தியா – -திபெத் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் சாங்கோ கிராமத்தைச் சேர்ந்தவர் சோன்ஜின் அங்மோ (வயது 29). அவரது, 8 வயதில் 3ஆம் வகுப்பு படித்தபோது பார்வை இழந்தார்.

விடா முயற்சி

எனினும், ‘பார்வைதான் போனது, லட்சியம் போகவில்லை’ என்ற வைராக்கியத்துடன் படிப்பைத் தொடர்ந்த சோன்ஜின், டில்லி பல்கலைக்குட்பட்ட ‘மிராண்டா ஹவுஸ்’ கல்லுாரியில் முதுநிலை பட்டம் வரை பெற்று, ‘யூனியன் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக மலை ஏற்றம், தடகளத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், தன் விடாமுயற்சியால், கடந்த 19.5.2025 அன்று உலகின் மிக உயர்ந்த 29,000 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தில் குழுவினருடன் ஏறி, இந்திய தேசியக்கொடியை பறக்க விட்டார்.

இதன் வாயிலாக, இந்த சாதனையை படைத்த, முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இந்தியப் பெண் என்ற பெருமையை சோன்ஜின் பெற்றுள்ளார். உலக அளவில் எவரெஸ்டில் ஏறிய, பார்வையற்ற அய்ந்தாவது மாற்றுத்திறனாளி சாதனையையும், இவர் படைத்துள்ளார்.

 

இந்தியாவில் 363 பேருக்கு கரோனா பாதிப்பு

 5 பேர் பலி

புதுடில்லி, மே 26 இந்தியாவில் 363 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியா

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவிய கரோனா தற்போது இந்தியாவில் ெமதுவாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, மகாராட்டிரா, டில்லி போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவைகளின் இருப்பை உறுதி செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளை கரோனா தொற்று அச்சுறுத்திவரும் நிலையில், அதற்கு காரணம் 2 புதிய வகை கரோனா மாறுபாடு வைரஸ்கள்தான் என உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது. அதன்படி, என்பி.1.8.1 மற்றும் எல்எஃப்.7 ஆகிய இரு உருமாறிய கரோனா வைரஸ்களால் தான், தற்போது கரோனா வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 வகை கரோனாவும் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கு என்பி.1.8.1 (NB.1.8.1) வைரஸ் தொற்றும், குஜராத்தில் 4 பேருக்கு எல்எஃப்.7 (LF.7) வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. எனினும், இந்த மாறுபாடுகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவை அபாயகரமானவை என்று இதுவரை வரையறுக்கப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 பேர் பலி

இந்த புதிய வகை கரோனா வைரஸ்களால், இதுவரை இந்தியாவில் 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் 84 வயது முதியவர் ஒருவரும், தானேவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரும் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

மகாராட்டிராவில் மட்டுமே 4 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், இந்தாண்டு இதுவரை மொத்தம் 5 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனினும் உயிரிழந்தவர்களுக்கு வேறு பாதிப்புகளும் இருந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, பெங்களூருவில், 9 மாத குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருநாடகாவில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 363 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் JN.1 உருமாறிய வைரஸ் முதன்மையாக இருந்தாலும், NB.1.8.1 என்ற புதிய துணை வைரசும், LF.7 வைரஸ் நான்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது பரவி வரும் NB.1.8.1 மற்றும் LF.7 வைரஸ்கள், அதிக பரவுதல் திறன் கொண்டவையோ அல்லது தீவிர நோயை ஏற்படுத்துபவையோ இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *