சென்னை, மே 26- பார பட்சமான முறையில் சொத்து வரி வசூலிக்கப்படுவதை தடுக்க, கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சதுரடி கட்டணத்தில் வரி விதிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. .
சொத்து வரி
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், அந்தந்த பஞ்சாயத்து நிர்வாகம் சொத்து வரிவசூலிக்கின்றன.அதன்படி மொத்தமுள்ள 12 ஆயிரத்து 500 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 1 கோடியே 54 லட்சத்து 86 ஆயிரத்து 861 வீடுகளுக்கு சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் பஞ்சாயத்து ராஜ் சட்டத் தின்படி சொத்துவரி சதுரடி அளவுக்கு ஏற்ப தான் விதிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக ஒருவரது வீடு 500 சதுரடியில் கட்டப்பட்டு இருந்தால், அந்த பஞ்சாயத்து தீர்மானப்படி சதுரடிக்கு 50 பைசா என்றால், மொத்தம் ரூ.250 சொத்து வரி வசூலிக்க வேண்டும். ஆனால் சில பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு வரிகளை விதித்து உள்ளனர். அதாவது தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எல்லாம் சதுரடி கணக்கில் விதிக்காமல் ரூ.100, ரூ.200 என்ற கணக்கில் வரிவிதித்துள்ளனர்.இதனால் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இடையே சொத்து வரியில் முரண்பாடு இருக்கிறது.
கண்டிப்பான உத்தரவு
இது தொடர்பாக அரசுக்கு அதிகளவில் புகார்கள் வந்தன. எனவே தமிழ்நாடு அரசு அனைத்து வீடுகளுக்கும் பார பட்சமின்றி, உள்ளாட்சி சட்டத்தின் படி சரிசமமாக சதுரடி கணக்கில் வரி விதிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது குறைவாக வரி விதிக்கப்பட் டுள்ள வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு அங்குசதுரடி அளவில் புதியவரி விதிக்கும் பணி தொடங்கி உள்ளது. அதனால் அந்த வீடுகளுக்கு எல்லாம் வரி உயர்வு ஆகிறது. அதே போல் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சதுரடி அளவில் வரி விதிக்க வேண்டும் என்று அரசு கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாரபட்சமின்றி வரி விதிப்பு
கிராம பஞ்சாயத்து தலைவர் கள் அரசின் விதிகளை மீறி தங்கள் இஷ்டத்திற்கு வரி விதிப்பு மேற்கொண்டு உள்ளனர். வேண்டியவர்களுக்கு ஒரு வரி, வேண்டாதவர்களுக்கு ஒரு வரி என்ற அடிப்படையில் வரி விதித்து உள்ளனர்.
அரசின் வரி விதிப்பு சட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்து கிராமங்களிலும் எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டு உள்ளது.
உதாரணமாக அதிகபட்சமாக குடிசை வீடுகளுக்கு சதுரடிக்கு 40 பைசா, ஆஸ்பெஷ்டாஸ் சீட்டுகளுக்கு 60 பைசா, கான்கிரீட் வீடுகளுக்கு 1 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிகபட்சமாக 20 சதவீத வீடுகளுக்கு தவறாக வரிவிதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இவை இனி சரி செய்யப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் பாரபட்சமின்றி வரி விதிக்கப்படும்.
தொழிற்சாலைகள்
வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, வீடுகளுக்கு விதிக்கப்படும் சதுரடி வரித்தொகையில் கூடுதலாக 40 மற்றும் 50 சதவீதம் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும். எனவே வீடுகளை போல தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரி சீராய்வு இருக்கும். குறைவாக செலுத்தியவர்கள், இனி சரியாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.