புதுடில்லி, மே 26 ஒன்றிய அரசின் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ஒன்றிய அரசு பணி யாளர் தேர்வாணையம்
(யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நேற்று (25.5.2025) நடைபெற்றது.
முதல்நிலை தேர்வு
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிகளில் ஒவ்வொரு ஆண்டும் வரும் காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான தேர்வையும் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது.
முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கிறது.
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான மொத்தம் 979 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த வர்களுக்கான முதல் நிலைத் தேர்வு நாடு முழுவதும் நேற்று (25.5.2025) நடைபெற்றது.
சர்ச்சைக்குள்ளாகி உள்ளது
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் நேற்று (25.5.2025) காலையில் நடந்த பொதுப் பாடங்களுக்கான தேர்வில், பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
சுயமரியாதை இயக்கத்தை நிறுவியவர் யார்? என்று வினா கேட்கப்பட்டு, அதற்குரிய 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று, ‘‘பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்‘‘ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
தந்தை பெரியார் 1927 ஆம் ஆண்டிலேயே தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயரை நீக்கினார்.
ஜாதி ஒழிப்பிற்காகப் போராடியவரின் பெயருக்குப் பின்னால், ஜாதிப் பெயருடன் விடைக் குறிப்பு இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்குரியதானது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில், ஒரு மசோதாவை ஆளுநர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றம் ஆளுநரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சைக்குரிய கேள்வியும் கேட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.