சென்னை மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு கரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது

viduthalai
2 Min Read

சென்னை, மே 25- சென்னையில் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது

பொது இடங்களில் முகக்கவசம்

டில்லி, கேரளா, கருநாடகா, குஜராத், மராட்டியம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்த மாநில சுகாதாரத்துறை தரப்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. காய்ச்சல், இருமல் மற்றும் இணை நோய் பாதிப்பு உடையவர்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் அதிகரிப்பு

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு 3 அல்லது 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கட்டாயம் உள் நோயாளியாக சேர்த்து சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அவர்களுக்கு கரோனா பாதிப்புக்கான அறிகுறி தென் படும் பட்சத்தில் கரோனா பரிசோதனையும் செய்யப்படு கிறது.

கரோனா பரிசோதனை

இதுகுறித்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது:-

சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது மழை பெய்வது வருவதால் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் கடந்த மாதம் 80 முதல் 100 பேர் வரை காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வந்தார்கள். ஆனால், தற்போது 150 பேர் வரையில் வருகிறார்கள். பருவநிலை மாறியதால் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு, டெங்கு போன்ற பாதிப்புகளே பெரும்பாலும் தென்படுகிறது. இதற்கு வழக்கமான சிகிச்சை முறைகளே போதுமானது. 3 நாட்களுக்கு மேல் தீவிர காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்களை உள்நோயாளியாக அனுமதித்து சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்படுகிறது.

அந்த சளி மாதிரிகள் கிண்டி கிங் இன்ஸ்டியூட்டுக்கு அனுப்பப்படும். இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட சளி மாதிரிகளில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. பொது சுகாதாரத்துறை தரப்பில் இருந்தும் கரோனா வார்டுகள் அமைப்பது குறித்து எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை.

நாள் தோறும் பதிவாகும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளின் விவரங்களை அரசுக்கு வழங்கி வருகிறோம். காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கரோனா அறிகுறி தென்படும் பட்சத்தில் அவர்களுக்கு கட்டாயமாக கரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு மருத்துவர்கள் கூறினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *