சென்னை, மே 25- தமிழ்நாட்டில், ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ 2022 செப்., 15இல் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்டது.
அதன்பின் ஊரகப் பகுதிகளில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள 30,992 அரசுப் பள்ளிகளிலும், ஊரகப்பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நடப்புக் கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும், 1,545 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில், காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு, நடப்பாண்டு 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பட்ஜெட்டில் அறிவித்தபடி, நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், மறைந்த முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 முதல், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.